Thursday, December 23, 2010

சாவி யார் கிட்ட இருக்கு?

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு போய் இருக்கீங்களா? வெயில் நேரத்தில் போனால் கொஞ்சம் பரவாயில்லை.மழை நேரத்தில் என்னை மாதிரி மிக தைரியமானவர்கள் போகலாம். வெங்காயம் அங்காச்சும் கம்மி விலையில் கிடைக்காதா என்ற நப்பாசையில் தைரியமா போனேன்.

இனி கோயம்பேடு மார்க்கெட் பற்றி..

மொத்த ஏரியா: 275 ஏக்கர்.

மார்க்கெட் செயல்படும் ஏரியா: 60 ஏக்கர்.ஆசியாவிலேயே மிக பெரிய மார்க்கெட்.

மொத்தகடைகள்:3500.பூக்கடை,காய்கறிகடை,பழக்கடை

தினம் வருகை தருபவர்கள்:ஒரு லட்சம் பேர்.

வருகை தரும் லாரிகள்: 700

லாரிகள் உள்ளே வருவதற்கு கலெக்ட் செய்யப்படும் தொகை:4 கோடி(ஒரு வருடத்திற்கு)

ஒரு நாள் கழிவு :160 டன்.

திட்டம்: தினக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க 5.5 கோடியில் ஒரு மையம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது மூடப்பட்டுள்ளது.

இப்பொழுது கழிவுகள் கொட்டப்படும் இடம்: மார்க்கெட் சுற்றி உள்ள இடமே.

பஸ்ல அல்லது கார்ல போகும் போது மார்க்கெட் வந்துடுச்சுன்னு எப்படி கண்டுபிடிப்பது:ஒரு மைலுக்கு முன்னாடியே மூக்கை பொத்திக் கொள்வீர்கள்.அப்படின்னா மார்க்கெட் நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.

குப்பை போட்ட குற்றம் யார் மீது: சுத்தம் செய்யும் ராம்கே கம்பெனி சொல்லுது கடைக்காரர்கள் அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பையினை போடுவதில்லை.அதில் தண்ணீர் பிடித்து வைக்க உபயோகிக்கிறார்கள்.கடைக்காரர்கள் சிலர் அந்த கேன்களை தங்கள் வீட்டிற்கு கொண்டு வைத்துக் கொண்டனர் என்றும் சொல்கிறது. சுத்தம் செய்ய தினம் ஒரு மூன்று மணிநேரமாவது மார்க்கெட் க்ளோஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

கொடுங்கையூர் குப்பை மேடு தினம் மாலை 5 மணிக்கு மூடிவிடுவதால் எங்களால் அங்கு கொட்டமுடிவதில்லை என்று கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.

எதிர்காலம்: 13 கி.மீ செயிண்ட்தாமஸ் மவுண்ட்- கோயம்பேடு மெட்ரோ ரயில் 2013-ல் முடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.அதுவும் முடிந்தால் இன்னும் இன்னும் அதிக மக்கள் மார்க்கெட்டிற்கு போவார்கள். அதற்குள் மூடப்பட்ட அந்த திடக்கழிவு மின்சார மையத்தின் சாவி எங்கே இருக்கிறது என்று கண்டுப்பிடித்து திறக்க வேண்டும்.இல்லைனா ஆசியாவிலேயே அதிக நாற்றமடிக்கும் மார்க்கெட் என்று தான் பெயர் கிடைக்கும்.

ஒரு யூனிட் மின்சாரத்தினை ரூபாய் 4.50 கொடுத்து வாங்கிக் கொள்ள மின்சார துறை ரெடியாக இருக்கிறது.ஏன் அதிக பணம் போட்டு ஆரம்பித்த அந்த மையத்தினை இப்படி மூடி வைத்து மார்க்கெட்டினை நாற அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வேளை அந்த மையத்தின் சாவி குப்பையில் காணாமோ போச்சோ???






               வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்.

Wednesday, December 15, 2010

புத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..

கட்டாயம் அனைவரும் போக வேண்டிய, பார்க்க வேண்டிய இடம்.அந்த இடத்தின் உள்ளே இருந்தாலே வெளியுலகம் மறந்து போகுது.இது வரை நான்கு தளங்களில் மக்களை அனுமதிக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மற்ற தளங்களிலும் மக்கள் அனுமதிக்கப் படுவார்கள்.கலைஞர் செய்த மிக அருமையான பணி இது.

இனி சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் பற்றி.

அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஆகஸ்டு 16, 2008.

தொடங்கப்பட்ட நாள்: 15, செப்டம்பர், 2010.

திறந்து வைத்தவர்: முதல்வர் திரு.கருணாநிதி.

நூலகம் இருக்கும் இடம்: காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்.

மொத்த செலவு: 172 கோடி.

மொத்த ஏரியா: 8 ஏக்கர்.

மொத்த பணியாளர்கள்: 200 நபர்கள்.

 1250 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க முடியும்.

நுழைவு பகுதி: ஐந்து அடி உயரத்தில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்து இருக்கும் அறிஞர் அண்ணாவின் வெண்கல சிலை.

மொத்த தளங்கள்: 9, தரைத் தளத்தினையும் சேர்த்து.

தரைத்தளம்: ரிசப்சன் பகுதி, ப்ரெய்லி முறையில் படிப்பவர்களுக்கான புத்தகங்கள், இரண்டு கான்ப்ரென்ஸ் ஹால்கள்.

முதல் தளம்:குழந்தைகளுக்கான புத்தகங்களும்,நியூஸ்பேப்பர்கள், வார, மாத பத்திரிக்கைகளுக்கான இடமும், அனைத்து மொழி பத்திரிக்கைகளும் இருக்கின்றன.பெரிய ஹாலும்

இரண்டாவது தளம்: முழுவதும் தமிழ் புத்தகங்கள்.140 நபர்கள் அமரக்கூடிய புத்தக வெளீயீட்டு விழா நடத்த ஒரு ஹால்.

மூன்றாவது தளம்:  சமூகவியல், தத்துவம், உளவியல் புத்தகங்கள்.

நான்காவது தளம்: கம்யூட்டர் சயின்ஸ், மருத்துவம், இஞ்சினியரிங் புத்தகங்கள்.

எட்டாவது தளம்: எங்களை போன்றவர்கள் நூலகத்திற்கு கொடுத்த புத்தகங்களை வைக்கப் போகிறார்கள். நாங்கள் 80 ஆங்கிலப் புத்தகங்கள் கொடுத்தோம். என் மகன் காலேஜில் மார்ச் மாதம் கொடுத்து வந்தான்.எங்கள் பெயர் போட்டு தனி செல்ஃபில் வைப்பார்களா??

முக்கியமான செய்தி:ஃபுட் கோர்ட் திறக்கப் போகிறார்கள்.படிக்கும் போது தான் ரொம்ப பசிக்குது.

நூலகம் திறந்து இருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை.

புத்தகங்களின் எண்ணிக்கை: 12 லட்சம்.

கலைஞர் கொடுத்த புத்தகங்கள்:1000 புத்தகங்கள். இரண்டாவது தளத்தில் தனியாக ஒரு அடுக்கில் கலைஞர் பெயர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
அனைத்தும் புத்தம் புதுசாய் இருக்கின்றன.

இன்னும் முடிக்கப்படாதவை:

1200 சீட் கொண்ட பெரிய ஆடிட்டோரியமும், மொட்டைமாடியில் 800 பேர் தரையில் அமரக்கூடிய திறந்த வெளி அரங்கு(amphitheatre), 1000 கார்களும், அதற்கு மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களும் நிறுத்தக் கூடிய பார்க்கிங் ஏரியா.

இது வரை கலைஞர் தவிர யாரும் உறுப்பினராக சேரவில்லை. உறுப்பினர் சேர்க்கை பற்றியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.என்னை இரண்டாவது உறுப்பினராக சேர்த்துக் கொள்ள சொன்னேன்.
இன்னும் கணனிமயமாகவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

 நூலகத்தினை ஒட்டி 180 நபர்கள் அமரக்கூடிய உணவகம் திறக்கப்பட உள்ளது. அதன் மேல் தளத்தில் ஆய்வாளர்கள் தங்கி இருக்க அறைகள் கட்டப்படுகின்றன.

ஒவ்வொரு தளத்திலும் இண்டர்நெட் வசதி செய்யப்படுகின்றன.

அனைத்து புத்தகங்களிலும் RFID (radio frequency identification device)  என்னும் மைக்ரோ சாதனம் பொருத்தப்படும்.திருட்டுதனமாய் யாரேனும் புத்தகத்தை வெளியே எடுத்து செல்ல முயன்றால் அந்த சாதனம் காட்டிக் கொடுக்கும்.

493 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப் படுகின்றன. இரவில் யாரும் கட்டிடத்திற்குள் நுழைந்தாலும் இருட்டில் படம் பிடித்து விடும்.


ஓலைச்சுவடிகள் முதல் E-புக்ஸ் வரை அனைத்தும் உள்ளன.


டிஜிட்டல் நூலகம் யுனெஸ்கோவின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

நிறைகள்:

1.குழந்தைகளுக்கான பகுதியில் சுவரில் கார்ட்டூன் சித்திரங்களும், ஹாலின் நடுவில் ஒரு செயற்கை மரமும் அசத்தலாய் இருக்கிறது. கம்யூட்டரும், ஹெட்ஃபோனும், 1000 புத்தம் புதிய, சி.டிக்களும் இருந்தன.அருமையான இருக்கைகள் சிறுவர்களுக்கு, ஒரு விளையாட்டு கூடமும் உள்ளது.

2.மற்ற தளங்களில் உட்கார போடப்பட்டுள்ள சோபாக்கள் தரமானவைகளாய் உள்ளது. எழுதுவதற்காக போடப்பட்டுள்ள டேபிளும், அமரும் சேர்களும் வசதியாக உள்ளன.

3.லிப்ட்டும், அதனை இயக்க உதவியாளர்களும் உள்ளனர்.

4.அனைத்தும் புத்தம் புது வாசனையான புத்தகங்கள்.

5.ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் இருக்கின்றன.

6.கண்ணாடி சுவர்கள், ஜன்னல்கள்,எனவே படிக்கும் இடங்கள் நல்ல வெளிச்சமாய் இருக்கிறது. வெளியில் வேடிக்கைப் பார்க்கவும் முடிகிறது.

7.முழுவதும் குளிர்சாதன வசதி.

8.குழந்தைகளுக்கு உயரம் குறைவான சேர்களும், டேபிள்களும்.

குறைகள்:

பஸ் போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதியில் நூலகம் உள்ளது.

டாய்லெட்டுகளில் தரை எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தரை சமமாய் போடவில்லையா அல்லது உபயோகிப்போரின் செயலா தெரியவில்லை.பொது இடங்களில் சுத்தமற்ற கழிப்பறைகள் தான் நம் தலையெழுத்து போல.கூட்டம் அதிகம் இல்லாத போதே இந்த நிலைமை. இப்போதைக்கு இது இரண்டும் தான் குறை.

பஸ்/ட்ரையின்: 21G,5C,47C, MRTS கோட்டூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி
ஆட்டோவில் போகலாம்.இனிமேல் அதிக பஸ்கள் அரசு இயக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்த ரூட்டில் பஸ்கள் அனைத்தும் கூட்டமாக தான் செல்கின்றன.

பெண்களுக்கான அட்வைஸ்: ரிசப்ஷனில் பெண்களின் கைப்பைகளை டோக்கன் போட்டு வாங்கி வைத்துக் கொள்ளகின்றனர். எனவே. ஒரு பர்சும் கொண்டு சென்றால், அதில் பணம், பேனா, மூக்குக் கண்ணாடி, செல் ஃபோன், டோக்கன்,சீப்பு! ஆகியவற்றை வைத்து உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்.

வெளிநாட்டில், வெளி ஊரில் இருக்கும் தமிழர்களுக்கான அட்வைஸ்: அடுத்து சென்னை வரும்போது கட்டாயம் விசிட் செய்யுங்கள்.நேரம் இல்லை என்று எல்லாம் சொல்ல கூடாது. ரங்கநாதன் தெருவிற்கு அடுத்த முறை செல்லலாம்.


                                         சிறுவர் பகுதி

முகப்புத்தோற்றம்






Sunday, December 12, 2010

இதை விதி என்பதா?

இந்த மாதத்துடன் 10 வருடங்கள் ஓடி போச்சு. பிரீஷியஸ் அவர்ஸ் என்று சொல்லப்படும் அந்த 3 மணி நேரத்திலேயே என் மாமா டாக்டரிடம் போய் தனக்கு உடலில் ஏதோ வித்தியாசம் உணர்வதாய் சொன்னார். மாமா பார்க்க சென்ற அந்த டாக்டரோ செக் செய்து விட்டு ஒன்றும் இல்லை முரளி நீங்கள் வீட்டிற்கு போகலாம் என்று அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் டி.வி பார்த்து விட்டு படுக்கை அறைக்கு சென்று லுங்கி மாற்றும் போது தடாலென்று கீழே விழுந்து விட்டார் மாமா.உடனே டாக்டரிடம் தூக்கி சென்றால் பராலிஸிஸ் என்று சொல்லி விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு முன்னே சென்ற போதே சரியாக செக் செய்து இருந்தால் இப்படி 10 வருடமாக நரக வாழ்க்கை என் மாமாவுக்கு இல்லை.உடனே மதுரைக்கு அழைத்து சென்றோம். அங்கே 2 மாதங்கள் ஹாஸ்பிட்டல் கதி என்று இருந்தார். பிறகு வேலூரில் ஒரு மாதம். இடது பக்கம் முழுவதும் இயங்காமல் 10 வருடங்களாய் வீட்டில் பொழுதினை கழித்து வருகிறார். அவர் நன்றாக இருந்து இருந்தால் வாழ்க்கை எப்படி எல்லாமோ மாறி இருக்கும்.

படிக்கும் போது அவர் படித்த பள்ளியில் முதலாவதாக வந்தவர்.முனிசிபல் பள்ளியில் படித்தவர்.பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருக்கு இவரை மிகவும் பிடிக்கும்.இப்பொழுதும் தன் முதல் வகுப்பு ஆசிரியரை பற்றி கூட சொல்வார்.எப்பொழுதும் சுத்தமாக டிப்டாப்பாக உடைகள் அணிவதில் பெரும் விருப்பம் உள்ளவர்.எங்களையும் சின்ன வயதில் மாடர்னாக இருக்க செய்தவர். சிறு வயதில் நாங்கள் பார்த்த நல்ல சினிமாக்கள் அவருடன் தான்.

முதலில் நான் பைக்கில் சென்றது அவருடன் தான்.முதலில் ஃப்ர்ஸ்ட் க்ளாசில் அமர்ந்து சினிமா பார்த்தது அவருடன் தான். வாழ்க்கையில் முதலில் கோன் ஐஸ்கிரீம், ஃபலூடா,பாசந்தி,ஜிகிர்தண்டா சாப்பிட்டது இவருடன் தான். மதுரையில் இங்கிலீஷ் படம் பார்த்தது,. அவரின் கல்லூரி நாட்கள்,பள்ளி நாட்கள் பற்றி கதை மாதிரி சொல்வதை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.நிறைய ஃப்ரெண்ட்ஸ் முரளி மாமாக்கு.

என்னுடைய மாமா குழந்தைகள் நல மருத்துவராக அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இந்த நோய் தாக்கியதும் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தற்சமயம் புத்தகம் படிப்பது, டி.வி பார்ப்பது என்று பொழுதினை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.நிறைய படிக்கிறார். எப்போதும் படிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவர்.தெரிந்தவர்கள், சொந்தக்காரர்களின்
குழந்தைக்கு மருத்துவம் சொல்கிறார்.மிக கரெக்டாக நோயினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பார்.என் மகன்கள் சிறுவயதில் கஷ்டப்பட்ட போது இவரின் ஆலோசனை பேரில் தான் பிழைத்தார்கள். குழந்தைகள் என்றால் மிக பிரியமுள்ளவர்.எனவே தான் குழந்தை நல மருத்துவர் ஆனார்.அவர் டாக்டர் ஆனதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

என் அம்மாவிற்கு எனக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்து, பிறந்த 6 மாதத்திலேயே ஹெர்னியா வந்து அதற்கு ஆபரேஷன் செய்தது.ஆனால், அடுத்த மாதத்தில்அக்குழந்தை இறந்து விட்டது.எனது அம்மாவும், தாத்தாவும் மாதக்கணக்கில் மதுரை ஆஸ்பத்திரிகளில் அந்த குழந்தை உடல்நலத்திற்காக அலைந்து இருக்கின்றனர். நம் வீட்டிலேயே ஒரு டாக்டர் அவசியம் வேண்டும் என அப்போது முடிவு எடுத்து உள்ளார்கள். அப்போது பி.யூ.சி படித்துக் கொண்டிருந்த என் மாமாவினை டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் அம்மாவின், தாத்தாவின் ஆசைப்படி டாக்டர் ஆனவர்.

ஒரு டாக்டருக்கே இந்த கதி என்றால். அவருக்கு இப்படி ஆனதை விதி என்பதா? மாமாவிற்கு சுகர் உண்டு. அதற்கு தகுந்த மருத்துவம் செய்து கொண்டு தான் இருந்தார். செக்-அப் சென்ற அந்த டாக்டரை நாங்கள் எல்லாம் இன்றும் திட்டுவோம்.ஆனால், மாமா எங்களை திட்டவே விட மாட்டார். விடுங்கம்மா என்ன செய்றது என்பார்.அவரை மாதம் ஒரு முறை பார்த்து வருவேன். அவருடைய ஃப்ரெண்ட்ஸ் யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பது அவருக்கு கவலை தரும் ஒரு விஷயம். சின்ன வயதில் என் மாமா மாமா என்று நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் பெருமைக் கொண்டதும் அவரால் தான்.ஏனெனில், என்னுடன் படித்தவர்களில் யாருக்கும் உறவுகளில் அப்போது
டாக்டர் இருந்தது கிடையாது.
தன் மகனுக்கு சுசுருதன் என்று பெயர் வைத்து அவனையும் டாக்டர் ஆக்கிவிட்டார். இந்தியாவில் முதல் மருத்துவர் ஹர்சவர்த்தனர் காலத்தில் சுசுருதர் என்பவர் ஆவார்.

Thursday, December 09, 2010

என்ன ஒரு வில்லத்தனம்...






மெயிலில் வந்தது.என்ன ஒரு கற்பனை.

என்ன அவசரம் ராஜி?

ராஜியை முதல் முதலில் என் கல்லூரி முதல் வருட முதல் நாளில் பார்த்தேன்.
எங்கள் வகுப்பில் மேக்ஸிமம் அனைவரும் பாவாடை தாவணியில் இருக்க நானும், ராஜியும் சுடிதாரில் இருந்தோம். நாங்கள் படித்த பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் மாணவிகளின் உடைக்கு பட்டபடிப்பு படிக்கும் போது எந்த கட்டுப்பாடும் கிடையாது.

சுடிதார், மிடி, கவுன்,பாவாடை சட்டை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடையில் போகலாம்.
அதனால் காலேஜ் போவதே ஜாலியா இருக்கும்.மூன்றாம் வருடம் தான் சில நாட்கள் சேலையில் சென்று இருக்கிறேன்.

என் அப்பா வேலை விஷயமாய் சென்னை போகும் போதெல்லாம் நல்ல ட்ரெஸ்களை வாங்கி வருவார். எனவே, தினம் விதமாய் ட்ரெஸ் போட்டு போவேன். தான் மட்டும் தான் அப்படி வரணும் என்று ராஜிக்கு அவ்வளாவாக என்னை பிடிக்காது.ஆனாலும் பேசிக் கொள்வோம்.ஏனெனில், என்னுடைய ஃப்ரெண்ட்களில் சிலர் அவளுக்கும் ஃப்ரெண்ட்ஸ்.

மிக ரோஷக்கார பெண் ராஜி. முதல் நாளில் பேசிய சில மாணவிகளிடம் மட்டும்தான் கடைசி வருஷம் வரை ஃப்ரெண்ட்ஸாக இருந்தாள்.

நானோ எங்க டிபார்ட்மெண்ட் இல்லாமல் பஸ் ஃப்ரெண்ட், ஆங்கிலம், தமிழ் கிளாஸ்ஸிற்கு சேர்ந்து உட்காரும் போது பாட்டனி, கெமிஸ்ட்ரி என்று அனைத்து பட்டப்படிப்பு மாணவிகளுடனும் அரட்டை அடிப்பேன்.

அவள் அம்மா கூட ஏதோ சின்ன மனஸ்தாபம் என்று ஃப்ரெண்ட்ஸ்களுடன் இனிமேல் எங்கும் வெளியில் போக மாட்டேன் என்று சொல்லி பிறகு அவள் அம்மா போக சொல்லியும் எங்களுடன் எங்கும் வராத பிடிவாதக்காரி.அவளுடைய அப்பாவிற்கு அவள் மிக செல்லமான பெண்.அதனால் மிக பெருமை படுவாள்.

நான் நேற்று பேசியதை இன்றே மறந்து விடும் ரகம்.

முதல் டெஸ்ட் மார்க் வந்தது. நான் அவளை விட அதிக மார்க் எடுத்திருந்தேன். அப்போதிலிருந்து போட்டி ஆரம்பித்தது.

ஆனால் கடைசி வருடம் வரை நான் தான் முதல்.

கமல் படம் என்றால் இருவருக்கும் உயிர்.நான் டவுணில் இருந்ததால் எல்லா படங்களையும் முதல் வாரமே பார்த்து விட்டு காலேஜிற்கு செல்வேன். என்னிடம் கதை கேட்க க்ளாசே காத்து இருக்கும்.
ராஜி மட்டும் என்னை கண்டுக் கொள்ளவே மாட்டாள்.

ஒரு முறை ஒரு கமல் படம் நான் மார்னிங் ஷோ பார்த்துட்டு வெளியில் வருகிறேன். ராஜி
மதிய ஷோவிற்கு தியேட்டரில் வெயிட் செய்கிறாள். என்னை பார்த்ததும் இந்த படம் உன்னை முந்தி நான் பார்ப்பேன் என்று நினைத்தேன். ஒரு ஷோவில் முந்திட்டியே என்று சொன்னாள்.நான் தான் முதலில் பார்க்கணும் என்று திட்டம் எதுவும் போடவில்லை.

பட்டபடிப்பு முடித்து நான் முதுகலை சேர்ந்தேன். அவள் வீட்டில் கோ-எஜுகேஷன் என்று அவளை முதுகலைக்கு அனுப்பவில்லை.பார்க்கும் இடங்களில் பேசிக் கொள்வோம்.

முதுகலை முடித்து அந்த வருடமே எனக்கு ஜூன் மாதம் 7-ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு ராஜி வந்த போது அவளின் திருமண பத்திரிக்கையினை எனக்கு தந்தாள். ஜூன் 15-ல் அவளின் திருமணம் என்று அப்போது தான் சொன்னாள்.இப்பவும் முந்திட்டே அமுதா என்று சிரித்துக் கொண்டே போனாள்.

அடுத்த வருடம் எனக்கு நகுல் பிறந்தான் ஜூலை 31-ல் அவளுக்கு ஆகஸ்ட் 29-ல் நிவேதிதா பிறந்தாள்.

அடுத்த இரண்டு வருடம் அவளுடன் தொடர்பே இல்லை. கணவ்ருக்கு ட்ரான்ஸ்ஃப்ர் ஆகி கொடைக்கானல் போனதாய் அவளை பற்றி கடைசியாய் நான் தெரிந்து கொண்டேன். போட்ட கடிதங்களுக்கு பதிலே இல்லை.எனவே நானும் செய்வதறியாது இருந்து விட்டேன்.

அதன் பின் ஒரு பத்து வருடங்கள் கழித்து மீனா என்ற இன்னொரு ஃப்ரெண்ட் மூலமாய் ராஜியினை பற்றி தெரிந்தது.

தெரிந்துக் கொள்ளாமல் போயிருக்கலாம் என நினைத்தேன். ராஜியின் குழந்தை 2 வருடத்தில் நிமோனியா தாக்கி இறந்து போனதாம். அவளின் கணவன் மிக பெரிய குடிகாரனாம்.ஒரு முறை கொடைக்கானலில் டூவீலரில் போகும் போது இரண்டு பேரும் கீழே விழுந்து அதில் ராஜிக்கு பெரியதாக அடிப்பட்டு அவள் அம்மா வீட்டில் 2 வருடம் படுத்த படுக்கையாக இருந்து இருக்கிறாள்.

ஃப்ரெண்ட்களிடம் இந்த விஷயத்தினை சொல்ல கூடாது என்று சொல்லி விட்டாளாம். மீனா அவளின் பின் வீட்டில் இருந்ததால் ராஜியினை அடிக்கடி பார்த்து இருக்கிறாள்.

உடல் நிலை மிக மோசமாக ஒரு நாள் ராஜி இறந்தும் விட்டாள். அவள் கணவன் குடித்து குடித்து அடுத்த ஒரு வருடத்திலேயே இறந்தும் போனாராம்.

மிக ப்ரெஸ்டிஜ் பார்க்கும் ராஜிக்கு ஏன் இந்த வாழ்க்கை.எப்பவும் எதிலும் நான் முந்திக் கொள்கிறேன் என்பதில் ராஜிக்கு பொறாமை உண்டு. ஆனால், சாவில் ராஜி முந்திக் கொண்டாள்.

சொந்தத்தில் திருமணம் செய்பவர்களை அவளுக்கு பிடிக்காது.கிண்டல் செய்வாள்.அப்படி செய்தால் சஸ்பென்ஸ் இருக்காது, சுவாரசியமாய் வாழ்க்கை இருக்காது என்பது அவளுடைய வாதம். அவளின் அக்கா, தங்கை இருவரும் சொந்தத்தில் திருமணம் முடித்து நன்றாக இருக்கிறார்கள்.

ராஜி எனக்கு ரொம்ப க்ளோஸான ஃப்ரெண்ட் இல்லை. ஆனால் அடிக்கடி அவளை நினைத்துக் கொள்வேன். திருநெல்வேலி போகும் போதெல்லாம் அவளின் வீட்டிற்கு சென்று அவள் பெற்றோரை பார்த்து விட்டு மிகுந்த மனவலியுடன் அவளை பற்றி நினைவு கூர்ந்து வருகிறேன்.என்ன அவசரம் ராஜி.

Thursday, December 02, 2010

எங்க வீட்டிற்கு வாங்க..

கொஞ்சம் கஷ்டப்பட்டு எங்க வீ ட்டிற்கு வந்தீங்க என்றால் இவ்வளவு அழகான ஹாலுக்குள் அமர்ந்து டீ குடிக்கலாம்.

அந்த கொஞ்சம் கஷ்டம் என்னனா அதாங்க எங்க வீட்டிற்கு வரும் வழி.

சரி ரூட் சொல்லாட்டா எப்படி.. உங்க வீட்டில் இருந்து ஒரு மேடு கொஞ்சம் சகதி தாண்டி அப்படியே லெப்ட்ல திரும்பினா ஒரு சின்ன குளம் வரும், வந்துச்சா கரெக்ட்.  அதை எப்படி தாண்டுவது என்பதெல்லம் உங்க பாடு. ஏன்னா அது எங்க வீட்டிற்கு பக்கத்தில் இல்லை. தாண்டியாச்சா ஓகே இப்ப மெயின் ரோட்டில ஐயங்கார் பேக்கரி  ரைட்ல வருதா.அதன் பக்கத்தில் ஒரு பள்ளம் வரும். அதை கிராஸ் செய்து காலில் சகதி ஆக்காமல் கரெக்டா ஒரு ஜம்ப் செய்து வந்தீங்கன்னா. பேக்கரி வாசலுக்கு வந்தாச்சா?பேக்கரியினை பார்த்ததும் இது வரை வந்த களைப்பு நீங்க, நீங்களாவே ஒரு பப்ஸ் சாப்பிட ஆரம்பிச்சாச்சா? சரி சாப்டாச்சா?


 அப்படியே ஒரு ரைட் திரும்பினா இப்படி இன்னொரு குட்டி குளம் வரும். மழை காலத்தில் மட்டும் குளம் இருக்கும். எனவே வெயில் காலத்தில் வந்து அந்த குளத்தை காணோம் என்று வடிவேலு மாதிரி கம்ளெய்ண்ட் செய்ய கூடாது. அங்க ஒரு லேடி நிற்கி்றார்களா, அது நான் இல்லை அது என் வீடும் இல்லை. ஓரமாய் கற்களின் மேல் ஏறி வந்தீங்கன்ன சுலபம்.
ஏன் சொல்றேனா இந்த பக்கம் சுவர் கட்ட பெரிய பெரிய குழி நான்குஇருக்கு. நீங்க பாட்டுக்கு உள்ளே போயிட போறீங்க. ஜாக்கிரதையா கற்கள் மீது ஏறி வந்துடுங்க. 

கற்களை தாண்டி ஒரு ஜம்ப் அப்படியே இரண்டு பாதை பிரியும்.
லெப்ட்ல நல்ல காலம் மேலே உள்ள தெருவில் இல்லை என் வீடு. கற்களை தாண்டியதும் அப்படியே ரைட்ல  திரும்பினா இந்த தெரு மட்டும் எப்பூடி?


திரும்ப ஒரு ரைட் இதோ எங்க தெரு வந்தாச்சு..

அதோ அந்த பெரிய கேட் போட்ட வீடு தான். அப்படியே ஓரமா வந்தீங்கன்ன ரீனா (எங்க dog) கத்திக் கொண்டு வரவேற்கும். சூ சொல்லிட்டு. நீங்க ஹாலுக்கு வந்தீங்கன்னா நாங்க இருப்போம். ஓ நீங்க டீயும், பப்ஸும் பேக்கரியிலேயே சாப்டாச்சா? சரி அடுத்த தடவை வெயில் காலமா பார்த்து வாங்க. என்ன குடிக்க தண்ணீர் இருக்குமா தெரியலை. வரும் போது ஒரு பாட்டில்
 தண்ணீர் கொண்டு வாங்க!!!   


Monday, November 29, 2010

பெண் மனதை சொல்லும் பாட்டு

பெண் மனதை பற்றி சொல்லும், பெண்களால் பாடப்பட்ட  10 பாடல்களை தேர்வு செய்ய சொல்லி சகோதரி ஆமினா கேட்டுக் கொண்டார். நன்றி ஆமினா. 






Thursday, November 25, 2010

அப்பா...



உன் உடன் பிறந்தவர்கள் எல்லாம் 60+ வயதிலும் தெம்பாய் இருக்க..

நீ மட்டும் ஏன் 45 வயதிலேயே இந்த உலகத்தினை விட்டு போய் விட்டாய்?

சைக்கிள் மட்டுமே நீ ஓட்டி நான் பார்த்து இருக்கிறேன்..

இன்று கார் ஓட்டும் என் மகனை நீ பார்க்கவேயில்லையே?


உனக்கு உடல் நலமில்லை யாராவது வாருங்கள் என்று நம் வீட்டிற்கு வந்தார் உன் நண்பர்..

அவருடன் நானும் உன் மகனும் உடனே வந்தோம் நீ ஆசிரியராய் பணியாற்றிய பள்ளிக்கு..

நாங்கள் பள்ளியில் நுழைந்த போது உனக்கு மாலையிட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றினரே..

இப்பவும் அந்த நவம்பர் 26 சனிக்கிழமை கண்களிலே நிற்கிறது..

நீ எங்களை விட்டு போய் 22 வருடங்களா ஓடி விட்டன..


இப்பவும் நெல்லை சென்றால் நீ தினம் குளித்த குறுக்குத்துறை வட்ட பாறையினை பார்த்து வருகிறேன்..

ஆசிரியருக்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த பள்ளியினை ஒரு வழி செய்து விடுவாயே..

உன்னால் பிரச்சனை தீர்ந்த ஆசிரியர்கள் பிறகு எப்பவாது உன்னை நினைத்திருப்பார்களா?

உன் தங்கை, தம்பி என்று நீ வாழும் வரை அவர்கள் முன்னேற்றத்திற்காக உன்னை வருத்திக் கொண்டாய்..

இன்று நாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்கள் யாரிடமும் விசாரிப்பது கூட இல்லையப்பா..

எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது இல்லை

எனக்கு தாத்தா அவரின் 73 வயது வரை இருந்தார் என் பிள்ளைகளை கூட பார்த்துதான் மறைந்தார்..

ஆனால் என் பையன்களுக்கு தாத்தான்னு உன்னை ஃபோட்டோவில் தான் அறிமுகப்படுத்த முடிகிறது..

அம்மாவிற்காக சிறுது காலம் இருந்து இருக்கலாம் நீ..

என்ன தான் நாங்களெல்லாம் நன்றாக கவனித்தாலும் நீ இருந்தால் தானே அம்மாவிற்கு மகிழ்ச்சி..

நீ எங்காவது கூட்டத்தில் இருந்து வந்து விட மாட்டாயா என்று பெருங்கூட்டத்தில் உன்னை தேடி இருக்கிறேன்..

திடீரென்று வீட்டின் கதவினை தட்டுவது நீயாக இருக்க மாட்டீயா என்று கதவை திறக்கும் போதெல்லாம் நினைத்து இருக்கிறேன்..

தைரியம் விதைத்தாய்,பொறுப்பினை விதைத்தாய்,எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல படிப்பை தந்தாய்,உன்னை மறக்க மட்டும் சொல்லி தர மறந்தாய்..

நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ என்று நினைத்தோம்..

ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....

Wednesday, November 24, 2010

மேஸ்காட்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு லக்கி மேஸ்காட் (Mascot)தேர்ந்து எடுக்கப்படுகிறது.அதுவே அந்த விளையாட்டிற்கு விளம்பரத்திற்கும் பயன்படுகிறது.அது விளையாடும் நாடுகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாய் நம்பப் படுகிறது.

முதல் முறையாக 1982-ல் 9ஆவது ஏசியாட் டில்லியில் நடந்த போது அப்பு என்ற குட்டி யானை அதிர்ஷ்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் முதலில் கலர் டெலிவிஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த விளையாட்டுக்கள் கலரில் ஒளிபரப்பபட்டது. குருவாயூரிலிருந்து ஸ்பெஷல் ட்ரையினில் 36 யானைகள் இந்த விளையாட்டு தொடக்க விழாவிற்கு டில்லி கொண்டு செல்லப்பட்டன.அப்பு என்ற அந்த யானையின் பெயர் குட்டி நாராயணன். இந்தியர் அனைவரையும் மிகவும் கவர்ந்தது இந்த 5 வயது அப்பு.
7 வயதில் செப்டிக் டேங்கில் விழுந்து அடிப்பட்டு அந்த புண்ணின் காரணமாகவே சிகிச்சை பெற்று 2005-ல் குருவாயூரில் இறந்தது.

1986-ல் கொரியாவில் நடந்த போட்டிக்கு கொரிய புலி தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த போட்டியின் போது தான் பி.டி.உஷா 4 தங்கப்பதக்கங்களை வென்றார்.1 வெள்ளி பதக்கமும் வென்றார். தங்க மங்கை, பயோலி எக்ஸ்பிரஸ் எனப்பெயர் பெற்றார்.

11 ஆவது போட்டி சைனாவில் நடந்தது.PAN PAN எனப்பட்ட பாண்டா கரடி அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டது.

12ஆவது போட்டி 1994-ல் ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் நடந்தது. அப்போது இரண்டு வெள்ளை வாத்துக்கள் Poppo and Cuccu அமைதியினையும்,ஒற்றுமையையும் அறிவுறுத்த தேர்ந்து எடுக்கப்பட்டது.

13 ஆவது போட்டி 1998-ல் தாய்லாந்தில் நடைபெற்ற போது Chai-Yo என்ற யானை தேர்ந்து எடுக்கப்பட்டது. சந்தோஷத்தையும், வெற்றியினையும் திருப்தியினையும் குறிக்கிறது.

14 ஆவது போட்டி தெற்கு கொரியாவில் நடைப்பெற்றது. கடல் பறவை அதிர்ஷ்டமாக தேர்ந்து எடுக்கப்பட்டது.  துரியா என்று அழைக்கப்பட்டது.ஆசிய நாடுகளிடையே ஒற்றுமையினை ஏற்படுத்த தேர்ந்து எடுக்கப்பட்டது.


15 ஆவது போட்டிகள் கத்தாரில் தோஹாவில் நடத்தப்பட்டது. அப்போது orry எனப்படும் ஒரு வகை ஆடு தேர்ந்து எடுக்கப்பட்டது.


இந்த முறை 2010 -ல் 16 ஆவது ஏசியாட்டிற்கு படத்தில் உள்ள ஐந்து ஆடுகள் தான் அதிர்ஷ்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆட்டின் பெயர் லீயாங் யாங் என்பதாகும்.அது தான் மற்ற ஆடுகளுக்கு தலைவராக விளங்குகிறது. ஐந்து ஆடுகள் உள்ள இந்த சின்னம் ஆசியாவில் நல்ல சுபிட்சத்தையும், ஏற்றத்தையும், அமைதியினையும், வெற்றியினையும், ஆசிய மக்களுக்கு சந்தோஷத்தினையும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைனாவில் ஆடு ஒரு லக்கியான மிருகமாக பார்க்கப்படுகிறது. ஏசியாட் எனப்படும் ஆசியன் கேம்ஸ் சைனாவில் க்வாங்ஷோ நகரில் 12 நவம்பர் தொடங்கியது.அந்த நகரமே சிட்டி ஆஃப் கோட்ஸ் எனப்படுகிறது. அங்கு பெரும் பஞ்சம் வந்த போது வானத்தில் இருந்து ஆடுகளில் வந்த தேவதைகள் அந்த பஞ்சத்தினை போக்கி மக்களுக்கு அரிசியை கொடுத்துச் சென்றதாக கதை உள்ளது.

இது வரை தாய்லாந்தில் 4 முறை இந்த விளையாட்டு நடத்தப்படுள்ளது. இந்தியாவில், ஜப்பானில் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளன.இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 46 நாடுகள் கலந்துக் கொள்கின்றன. ஆனால், 9 நாடுகளில் மட்டுமே இந்த விளையாட்டுப் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.இஸ்ரேல் 1974 லிற்கு பின் இந்த அமைப்பில் இருந்து வெளியேறி விட்டது.

சில விளையாட்டுக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆண்டுகள்:
கபடி போட்டி - 1990.
கராத்தே போட்டி -1994.
டேக் வாண்டோ -1994.
கிரிக்கெட் போட்டி-2010.

17 ஆவது போட்டி 2014-ல் தெற்கு கொரியாவில் நடத்த முடிவு செய்ய பட்டுள்ளது. மூன்று seal இதற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. காற்றையும், ஆட்டத்தினையும், வெளிச்சத்தையும் குறிக்கும் வகையில் இவை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Saturday, November 20, 2010

குzaரிஷ்..

புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் ஈதன்(ஹிரித்திக் ரோஷன்) ஒரு முறை மேஜிக் ஷோவின் போது எதிரி மேஜிக்காரரால் உயரத்திலிருந்து கீழே விழுந்து அடிப்பட்டு, முகத்தினை தவிர உடலின் அனைத்து பாகங்களும் இயங்காமல் 14 வருடங்களாய் படுத்த படுக்கை ஆகிறார். அவரை 12 வருடங்களாய் கவனித்துக் கொள்வது சோஃபியா.(ஐஸ்வர்யா ராய்).ரேடியோ ஜாக்கியாக ஈதன் தன் வீட்டிலிருந்தே ரேடியோவில் தன் நகைச்சுவை பேச்சினால் மக்களை கவர்ந்து வருகிறார்.

ஆனால், தேவயானி தத்தா என்ற வக்கீல் மூலம் ஈதன் தன்னை கொன்று விடுமாறு(மெர்சி கில்லிங்) கோர்ட்டில் மனு செய்கிறார். ஈத்னின் தாயாரும் இதற்கு சப்போர்ட் செய்கிறார்.இதற்கு நடுவில் ஓமர் என்ற இளைஞர் ஈதனிடம் மேஜிக் கத்துக் கொள்ள வருகிறார். ஒரு முறை ஈதனின் பழைய காதலியும் ஃபோனில் ஈதனுடன் பேசுகிறார்.

கோர்ட் ஈதனின் ரிக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டதா இல்லையா?? தெரியணுமா படத்தினை பார்க்கலாமே.

ரித்திக் ரோஷனுக்கு இப்ப அப்படியே அப்பா ராகேஷ் ரோஷன் ஜாடை தெரியுது.படத்தில் எல்லோரும் அருமையாக நடித்து உள்ளனர். இளம் மஞ்சள் நிறத்தில் அனைவரும் இருக்கிறார்கள். ஒரு வீட்டினுள் நடக்கிறது இந்த படம். உயரமான ஒரு மியூஸியம் மாதிரி இருக்கிறது வீடு.

ஒரு ராத்திரியில் மழைபெய்யும் போது ரித்திக் ரோஷனின் முகத்தில் சொட்டு சொட்டாக இரவு முழுவதும் கூரையிலிருந்து நீர் சொட்டுவதும், அவர் படும் அவஸ்த்தையும் டச்சிங்கா இருக்கு,

ஐஸ் ஹோட்டலில் ஆடும் ஊடி என்ற பாட்டிற்கு டான்ஸ் அசத்தல்.

ஒரு பெரிய ட்ரான்ஸ்பெரண்ட் பந்துடன் ரித்திக் ஆடும் ஒரு டான்ஸும் சூப்பர்.

நிஜமான தாடி வைத்துள்ளார் ரித்திக் ரோஷன்.கொஞ்சம் வளர்ந்த முடி.

ஐஸ்ஸின் ட்ரெஸ் வித்தியாசமாய் உள்ளது. ஒரு நீண்ட கவுன். அதன் மீது ஏப்ரான், நீண்ட கூந்தலில் ஒரு பெரிய மலர் சைடில் வைத்து வித்தியாச ஐஸ். எப்பவும் அடர்த்தியான சிவப்பான லிப்ஸ்டிக்.

லாயர் வெள்ளை காட்டன் சேலையில் முக்கால் கை ஜாக்கெட்டுடன் வளைய வருகிறார்.

படம் இந்தியாவில் நடப்பது போல் இருந்தாலும், உடைகள்,வீடு, மேஜிக் தியேட்டர் எல்லாம் அந்நியப்படுகின்றன.பழைய இங்கிலீஷ் படங்களில் வருவதனை போல் இருக்கின்றன.

ப்ளாக் என்ற அமிதாப் நடித்த படத்தினை டைரக்ட் செய்த சஞ்சய் லீலா பன்சாலி இந்த படத்தினை டைரக்ட் செய்து உள்ளார். ரொம்ப பொறுமைசாலி மனிதர் போல.

படம் கொஞ்சம் ஸ்லோ.ரித்திக், ஐஸ்ஸிற்கு பெயர் சொல்லும் படம்.

மிக அருமையான ஃபோட்டோகிராஃபி. ரித்திக் ரோஷனை நிறைய முறை பெரிய கண்ணாடியில் காண்பிக்கின்றனர்.

லொகேஷன்கள், செட்டுக்கள் அருமை.

Wednesday, November 17, 2010

கல்யாணம் அப்பாலிக்கா குடித்தனம்!!!

ஒரு ஜோடி சில வருடங்கள் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வது பிடித்து இருந்தால் திருமணம் செய்து கொள்வது.இல்லையெனில் பிரிந்து விடுவது. வெளிநாட்டு கலாச்சாரம் இப்பொழுது இந்தியாவில் பரவ ஆரம்பித்து உள்ளது.

வெளிநாட்டில்:

1. வெளிநாட்டில் அப்படி வாழ்ந்து பின் பிரிந்து விடுபவர்கள் அதற்கு பிறகு வேறு நபர்களை திருமணம் செய்து கொள்ளும் போது திருமணத்திற்கு முன் வாழ்க்கையினை பற்றி ரொம்ப பெரிசாய் அலட்டிக் கொள்வதில்லை.

2. முக்கியமாய் ஆண்கள் டேக் இட் ஈஸியாய் எடுத்துக் கொள்ளும் சமுதாய அமைப்பு அங்கு உள்ளது.

3. ஒரு ஜோடி உன் குழந்தை, என் குழந்தை, நம் குழந்தை என்று வாழ பழகி உள்ளார்கள்.

4. ஒரு பெண்ணோ, ஆணோ தன் முந்தைய காதலனை தைரியமாய் இந்நாள் பார்ட்னருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்.

5. பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி பழைய நினைவுகளை, புகைப்படங்களை, வீடியோக்களை அழித்து விட்டு பிரிந்து விடுவார்கள். எங்கேனும் பார்த்தால் கூட ஒரு ஹாய் சொல்லி போவார்கள்.

6. அங்கு பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் பெரிசாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

7. முக்கியமாய் அங்கு யாரும் யாரையும் தங்கள் வாழ்க்கை முறை மூலம் ஏமாற்றுவதில்லை.

8. சிறுவயதிலேயே செக்ஸ் கல்வி பெறுவதால் கர்ப்பம் தரிப்பதை அங்கு மேக்ஸிமம் தவிர்க்கிறார்கள்.

இந்தியாவில்:

1. திருமணம் நிச்சயம் ஆன நாளிலிருந்து ஃபோனில் பேச ஆரம்பிக்கும் போதே ஒரு வித சந்தேகத்துடனே ஒரு ஜோடி பேச ஆரம்பிக்கிறது. ஒரு வேளை எதாவது இருக்குமோ என்றே விஷயத்தினை நோண்டுவார்கள். அப்படி இருந்திருந்தால் என்ன? அது பிடிக்காமல் தானே நம்மை தேர்ந்து எடுத்து உள்ளார் என்ற மனோபாவம் இங்கு கிடையவே கிடையாது.

2.பெண்கள் ஆண்கள் எத்தனை கீப் வைத்துக் கொண்டாலும் அந்த கணவனை தன்னுடன் தக்க வைப்பதில் தான் பெண்ணிற்கு இங்கு பெருமை. போடா என்று தூக்கி எறியும் பக்குவத்தினை பொருளாதாரமும், சமூக அமைப்பும் தருவதில்லை.சில ஆண்கள் திருமணத்திற்கு முன்பிருந்த தன் காதலை பற்றி பெருமை வேறு பீற்றி கொள்வார்கள் தன் மனைவியிடம்.திருமணத்திற்கு பின்னால் தன் கணவன் சின்னவீடு வைத்துக் கொண்டாலே பெண்கள் அதனை பொறுத்து போகும் போது திருமணத்திற்கு முன் நீ எப்படி இருந்தால் என்ன இப்ப என் கூட மட்டும் வாழ் என்பது தான் பெரும்பான்மையான பெண்களின் நிலை.

ஆனால், மனைவிக்கு அப்படி ஒரு வாழ்க்கை திருமணத்திற்கு முன்பு இருந்தது தற்போதைய கணவனுக்கு தெரிய வரும் போது உடனே அந்த பெண்ணை டைவர்ஸ் செய்ய தான் முன்வருவான். அவனால் தாங்கி கொள்ளவே முடியாது. அதன் பின் அந்த பெண்ணை டைவர்ஸ் வரை ஒரு புழுவை போல் தான் நடத்துவான். பெண்ணின் படிப்பு, அழகு, குடும்பம் எல்லாம் மறந்து விடும். வெளிநாட்டிலே வாழும் ஆணாக இருந்தாலும் இப்படி தான் நம் இந்திய ஆண்கள் நடந்துக் கொள்வார்கள்.

3. ஒரு பெண் அக்கா, தங்கை குழந்தைகளை கொஞ்ச கூட புகுந்த வீட்டு ஒப்புதல் வேண்டும் இங்கே.
இதில் எங்கே உன் குழந்தை, என் குழந்தை, நம் குழந்தை.வெளங்கிடும்..

4. என் க்ளோஸ் ஃப்ரெண்ட் என்று ஒரு ஆணை பெண்ணால் தன் கணவனுக்கு அறிமுகப்படுத்துவது இங்கு கஷ்டம்.

5. இங்கு பழகிய நினைவுகளை அழித்து விடுறேன் என்பார்கள். ஆனாலும் அழிக்க மாட்டார்கள். பழி வாங்கும் நோக்கத்தில் அதனை பின்னாளில் பயன் படுமே என்று அப்படியே வைத்து இருப்பார்கள்.ஒரு வேளை லிவிங் டூ கெதரில் இருவரும் பரஸ்பரம் பேசி பிரியாமல், ஒருவருக்கு பிடிக்காமல் பிரிந்து இருந்தால் பிரிந்து போன அந்த பெண்ணையோ அல்லது ஆணையோ வாழவிட மாட்டார்கள். அதான் உன்னை பிடிக்கலை என்று சொல்லிட்டு போயச்சே ஏன் இன்னும் பின்னாடியே அலையணும்.குரூர புத்தி என்னை வேண்டாம் என்று சொல்லிட்டு போனீல இரு உன்னை என்ன செய்கிறேன் என்று சிலர் அலைவார்கள்.

6. அப்படி வாழ்வது தெரிந்தால் இங்கு கூட பிறந்தவர், பெற்றவர்கள் கொன்று போட்டுவிடுவார்கள் அந்த பெண்ணை.

7. எனவே, பெண்ணோ ஆணோ தாங்கள் அப்படி ஒன்றாக வாழ்வதை இங்கு எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்துவதில்லை. திருட்டுதனம் ஜாஸ்தி இருக்கும்.

8.இங்கு செக்ஸ் அறிவு எவ்வளவு படித்தவர்களுக்கும் கம்மி தான். எனவே, அப்படி வாழும் போது அபார்ஷன் செய்துக் கொண்டு திண்டாடுவார்கள்.

18 பட்டி பஞ்சாயத்து தீர்ப்பு என்னனா இந்தியாவில் முறைப்படி கல்யாணம் செய்துட்டு, மொய் பணம் எல்லாம் ஒழுங்கா வந்ததா என்று எண்ணி பார்த்துட்டு அப்பாலிக்கா ஒன்றாக வாழலாமே..

Tuesday, November 16, 2010

சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோங்க...

இப்பொழுதெல்லாம் எல்லா மதத்திலும், இனத்திலும் மாப்பிள்ளை, பெண் கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சரி காதல் திருமணம் செய்யட்டும் என்று பார்த்தால் அதுவும் நிறைய குடும்பங்களில் ஒத்துக் கொள்வதில்லை. 32 வயதில் ஆணுக்கிற்கும், 28 வயது பெண்ணிற்கும் திருமணமாகிறது.திருமணம் முடிந்த உடன் குழந்தை பெற்றுக் கொள்வதும் இப்பொழுது நடைமுறையில் இல்லை. 30 வயதிற்குள் திருமணம் முடிந்தால் ஒரு இரண்டு வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

10 ஜோடிகளுக்கு திருமணம் முடிந்தால் அதில் 5 ஜோடிகளுக்கு தான் குழந்தை எந்த பிரச்சனையும் இன்றி பிறக்கிறது. மற்றவர்களுக்கு குழந்தை உண்டாகாமல் போகிறது அல்லது குறை பிரசவம் ஆகிறது அல்லது அபார்ஷன் ஆகிறது. டிஸ்சார்ஜ் ரிப்போர்டில் காரணம் தெரியவில்லை என்றே எழுதுகிறார்கள். unknown reason - பெண்ணிற்கு அதிக வயது ஆகி இருக்கலாம், சுற்றுபுறம் ஒரு காரணமாக இருக்கலாம், வேலை டென்ஷனாக இருக்கலாம். இது தான் பிரச்சனை என தெரிந்தால் அதனை சரி செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தெரியாத, அறிய முடியாத காரணங்களுக்கு என்ன செய்வது. மருத்தவமனையில் 10 பேருக்கு செயற்கை முறை கருத்தரிப்பிற்கு முயன்றால் அதில் 2 அல்லது 3 தான் வெற்றி அடைகிறது. மற்றவர்கள் திரும்ப திரும்ப அந்த வலி மிகுந்த சிகிச்சைக்கு முயல்கிறார்கள்.

இளவயதில் திருமணம் முடிப்பதால் எந்த பிரச்சனை இருந்தாலும் எந்த சிகிச்சை செய்வதற்கும் நமக்கு காலமும், வயதும், உடலில் பலமும் இருக்கும். அதுவே 30 வயதிற்கு மேல் செய்வதால் எல்லா சான்ஸும் குறைந்து விடுகிறது.

எனவே, பணம் சம்பாதித்து தான், வீடு வாங்கி தான், கார் வாங்கி தான் திருமணம் அப்படி இப்படி என்று காரணம் சொல்லி திருமணத்தினை தள்ளி போடும் அனைவரும் யோசிக்க வேண்டும். வீடு, கார், பணம் எல்லாம் திருமணத்திற்கு பிறகு இருக்கும். ஆனால் குழந்தை இருக்காது. அதுவும் ஃபாரின் போய் செட்டில் ஆகும் நண்பர்களுக்கு தெரியும் அங்கெல்லாம் ஹாஸ்பிட்டல் செலவு என்பது எவ்வளவு அதிகம் என்று.

நம் பெற்றவர்களும் விட மாட்டார்கள். விரதம் இரு, அந்த கோயில் போ, இந்த கோயில் போ என்று படுத்தி எடுப்பார்கள். கோயில் கோயிலாக அலைவது ஒரு புறம், உறவினர்களின் ஏளன பேச்சு ஒரு புறம், குழந்தை இல்லையே என்ற ஏக்கம் ஒரு புறமாக அலைக்கழிக்கும். மருத்துவர்களோ டிப்ரஷன் இருக்க கூடாது என்று சொல்வர்.ஆனால், அது மட்டும் தான் அதிகம் இருக்கும். மேலும் இப்பொழுது எல்லாம் 30 வயதிலேயே, ஒபிசிடி, சுகர், பி.பி,கொலஸ்ட்ரால் என்று அடுக்கடுக்காய் நோய் வேறு வருகிறது. அது இல்லாமல் ஆண்களின் சிகரெட், குடி பழக்கம் வேறு. சாப்பாட்டு முறை வேறு மாறி விட்டது, ஜங்க் ஃபுட் அதிகம், நேரம் தப்பி சாப்பாடு, ஒழுங்கான தூக்கம் கிடையாது என்று அனைத்தும் மாறிவிட்டது.

எனவே திருமணத்திற்கு காத்து இருக்கும் அனைவரும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்வது நல்லது. ஆண்களே உஷார். இந்தியாவில் இப்பொழுது மக்கட்தொகையில் பெண்கள் ஆண்களை விட குறைவாக இருக்கிறார்களாம். அது வேறு பெரிய சமுதாய பிரச்சனையாகப் போகிறது. 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் தான் இருக்கிறார்கள்.கருவிலேயே பெண் குழந்தைகளை அழித்ததால் தான் இந்த பிரச்சனை ஆரம்பித்தது.

பெண்ணை பெற்றவர்கள் சிலர் தங்கள் பெண்கள் சம்பாத்தியத்தினை விட முடியாமல் தங்கள் பெண்களின் திருமணத்தினை தாங்களே தாமாதமாக்கும் போக்கும் இப்பொழுது இருக்கிறது. ஆண்களை பெற்றவர்கள் தங்கள் மகனுக்கு எவ்வளவு வயதானாலும், மகள்களுக்கு திருமணம் முடித்து தான் மகனுக்கு என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.


Sunday, November 14, 2010

வெரைட்டி-15/11/10

ஒரு ஓல்ட் மேனை பற்றி பேசும் போது அந்த பழையவர் என்றார் என் மகனின் நண்பி. சிரித்ததற்கு ஓல்ட் என்றால் பழையது தானே அர்த்தம் என்கிறார்.. பக்கத்து வீட்டில் அவரைக்காய் அவுத்தாங்க (பறித்தாங்க) அதான் எங்க வீட்டில் இன்று அவரைக்காய் செய்தோம் இதுவும் அந்த நண்பியின் பொன்மொழிதான்.தமிழ் பேச நாம் தயங்கும் போது வட இந்திய நண்பர்கள் தான் தமிழை இது போல் வளர்க்கிறார்கள்.


இனி கொஞ்சம் சீரியஸ்:
ஆங்சான் சூகி மியான்மரில் 15 வருடங்களாக வீட்டுக்காவலில் இருந்த இந்த இரும்பு பெண்மணி சனியன்று (13 நவம்பர்) விடுதலை ஆனார். இவரது விடுதலையினை உலகமே எதிர்ப்பார்த்து இருந்தது.. ஆங்சான் சூகி பற்றி.
நம்ம ஊரு அரசியல்வாதிகளும் இருக்காங்களே.

இந்தியாவில் குழந்தைகள் தினம் இந்த மாதம் 14 கொண்டாடப்படுவது போல உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ல் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கியநாட்டு சபை அறிவித்த தினம் ஆகும்.1959-ல் குழந்தைகளின் உரிமைகளை அறிவித்த தினமே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மிர்சி ரேடியோவில் குழந்தைகள் தினம் கொண்டாட குழந்தைகளை அழைத்து  ”எந்திரன்” தினம் கொண்டாடினார்கள். அனைத்துக் குழந்தைகளும் எந்திரன் பாட்டு, எந்திரன் வசனம் மனப்பாடமாய் சொன்னார்கள்.

ஹாம் ரேடியோ பயன்பாட்டாளர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்து இருக்கிறார்கள். ஒர் ஹாம்ஸ் FM ரேடியோவில் இண்டர்வியூ கொடுத்தார். ஜில் புயல் ஞாயிறு காலையிலேயே நம் சென்னையினை கடந்து விட்டதாகவும் எதற்கு மீட்டரலாஜிக்கல் டிபார்ண்மெண்ட் திங்கள் அன்று ஜில் கரையினை கடக்கும் என்று சொல்லியது என்பது தெரியவில்லை. அதனை நம்பி திங்கள் அன்று அரசு விடுமுறை விட்டது வேஸ்ட் என்றும் தெரிவித்தார். ஒரு சின்ன கருவியினை ( நாலயிரம் ரூபாய் தான் ஆகுமாம்) வைத்துக் கொண்டு அவர்கள் இப்படி நிச்சயமாக இயற்கையினை கணிக்கிறார்கள். மிஸ்டர் ரமணன் வேலை பார்க்கும் துறையில் எவ்வளவு பெரிய கருவிகள் இருக்கும். ஏன் இப்படி கணிப்பு தப்புகிறது. ரமணனுக்கு ஸ்கூல் படிக்கும் சின்ன பசங்க இருப்பாங்கம்மா, அந்த பசங்களுக்கு லீவு வேணும்னா ரமணன் சார் இப்படி செய்வார் போல இது என் மகன் நகுலின் கணிப்பு.

புதுக்கோட்டையில் இறந்து போனவரை வைத்திருக்கும் ஐஸ்பெட்டியினை தொட்டு அழுத இரண்டு பேருக்கு ஷாக் அடித்து இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அட ராமா....


Thursday, November 11, 2010

இந்தியா ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகுமா??

ஒபாமா தன் இந்திய வருகையின் போது இந்தியா ஐக்கிய நாட்டு சபையின் உள்ள பாதுகாப்பு (செக்யூரிட்டி கவுன்சில்)சபையின் நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தரப்போவதாக கூறி சென்று உள்ளார்.

ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர்கள் :191 நாடுகள்.

பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் :15 நாடுகள்

நிரந்தர உறுப்பினர்கள் :அமெரிக்கா,சீனா, ரஷ்யா,
இங்கிலாந்து, ஃப்ரான்ஸ்

தற்காலிக உறுப்பினர்கள் :  ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராகின்றன.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டெடுப்பின் மூலம் பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதிவியினை பெற்று வருகின்றன.

ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் ஒவ்வொரு நாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது வரை இந்தியா ஆறு முறை பாதுக்காப்பு சபையில் உறுப்பினராகி உள்ளது.1992க்கு பின் 19 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு இப்பொழுது தற்காலிக உறுப்பினர் சான்ஸ் கிடைத்து உள்ளது.

ஜனவரி 2011 லிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா,கொலம்பியா, ஜெர்மனி, போர்ச்சுகல்,சவுத் ஆப்பிரிக்கா தற்காலிக உறுப்பினர் பதவியினை பொறுப்பு எடுக்க உள்ளன.2010 டிசம்பருடன் ஏற்கனவே தற்காலிக உறுப்பினர் பதிவியில் இருந்த 5 நாடுகளின் பதவி காலம் முடிவடைகிறது.

உலக நாடுகளின் அமைதியினையும், பாதுகாப்பையும் மேற்பார்வை இடுவது, எல்லை பிரச்சனைகளின் தலையிடுவது, பாதுகாப்பிற்கு படையினை அனுப்புவது தான் இந்த பாதுகாப்பு சபையின் வேலை ஆகும்.இந்த சபையின் தலைவர் ஒவ்வொரு மாதமும் அந்த சபையின் உறுப்பு நாடுகளின் ஆங்கில எழுத்து வரிசைப்படி பொறுப்பு எடுக்கின்றன.

எந்த திட்டம் நிறைவேற வேண்டுமானலும் 5 நிரந்தர உறுப்பின நாடுகளின் ஓட்டும் மற்றும் 4 தற்காலிக நாடுகளின் ஓட்டும் தேவை.மொத்தம் 9 நாடுகளின் ஓட்டு கிடைத்தால் தான் அந்த திட்டம் நிறைவேற்றப்படும். 5 நிரந்தர நாடுகளுக்கு மட்டும் எந்த ஒரு திட்டத்தினையும் நிறைவேற்றாமல் தடுக்கும் வீட்டோ பவர் உண்டு.பாதுகாப்பு சபையில் எடுக்கும் தீர்மானத்தினை நிராகரிக்கும் அதிகாரம் தான் வீட்டோ அதிகாரம் ஆகும்.

தற்சமயம் பிரேஸில்,ஜெர்மனி,இந்தியா,ஜப்பான்(G-4 நாடுகள்) நிரந்தர உறுப்பினர் ஆக முயற்சித்து வருகின்றன.ஆப்பிரிக்கா, அரேபியாவும் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் ஒபாமாவின் இந்த அறிக்கை இந்தியாவிற்கு நல்லதே.

இது வரை இல்லாத அளவில் இந்த முறை இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு அதிக ஓட்டுகளை பெற்று உள்ளது. 190 ஓட்டில் 187 நாடுகளின் ஓட்டினை பெற்று உள்ளது.இது ஒரு நல்ல அறிகுறி. நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்திய ஜனாதிபதி சீனா சென்று அதன் ஆதரவினை கேட்டு வந்துள்ளார். இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகும் பட்சத்தில் பாகிஸ்தானின் தீவிரவாதத்தில் இருந்து மீளமுடியுமா, காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Monday, November 08, 2010

அந்த 23 நாட்கள்...

அந்த 23 நாட்களை இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது. உன் பையனுக்கு மூளை காய்ச்சல் வந்திருக்கு எங்க உன்னுடைய டாக்டர் மாமா உடனே இன்னைக்கு அவரை வரச்சொல்லு அவரிடம் பேசணும் என்று கண்ணகி என்ற அந்த குழந்தை நல மருத்துவர் என்னிடம் சொன்னபோது அப்படியே அந்த ஆஸ்பத்திரியின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து விடுவோமா என்று தான் ஒரு கணம் தோன்றியது.

அழுது அழுது வீங்கிய கண்களுடன் கொதிக்க கொதிக்க இருந்த என் பையன் நகுலை இறுக்க அணைத்துக் கொண்டு என் மாமாவிற்கு விஷயத்தினை சொல்லி விட்டு அவர் வருகைக்காக காத்து இருந்தேன். குழந்தை மருத்துவரான அவர் திண்டுக்கல்லில் இருந்து சென்னை வர வேண்டும்.பச்சை தண்ணீரில் வெள்ளை துணியினை நனைத்து நனைத்து நகுலின் நெஞ்சு தவிர அனைத்து பகுதியிலும் துடைத்து விட்டு கொண்டே இருந்தேன்.ஒரு பக்கம் ட்ரிப் ஏறி கொண்டு இருந்தது. பிறந்து 15 நாட்களே ஆன என் நகுலுக்கு அன்று மட்டும் 20 முறை ஃபிட்ஸ் வந்தது. அது வரும் ஒவ்வொரு முறையும் கண்ட்ரோலே செய்ய முடியாத அளவிற்கு பயந்தது போல் அழுவான். ஃபிட்ஸ் வந்த பின்னாடி ஆக்சிஜன் மாஸ்க் வைக்க வேண்டும். நானும் கூடவே அழுதுக் கொண்டு அவனை கவனித்துக் கொண்டேன்.

பிறந்து 30 நாட்கள் மட்டுமே ஆன குழந்தைகள் மட்டும் உள்ள வார்டு அது. குழந்தை அதன் அம்மா மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே குழந்தை பிறந்து பயங்கர வீக்காகி போன உடம்பு, இப்ப மனதும் வீக்காகி போனது. எப்படியும் குழந்தையுடன் தான் வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருக்கும்.

என் மாமா வந்ததும் அவருடன் டாக்டர்கள் பேசினார்கள்.மாமாவின் முகம் பார்க்கவே நல்லாயில்லை. என் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு நகுல் நன்கு பால் குடிக்கிறானா? எவ்வளவு குடிக்க வைக்க முடியுமோ அவ்வளவு குடிக்க வை.ஒன்றும் ஆகாது என்று சொல்லி சென்றார். மூன்றாவது முறையாக அவனது முதுகு தண்டுவடத்தில் ஒரு பெரிய ஊசியினை நுழைத்து தண்டுவட நீரை எடுத்து டெஸ்ட்டிற்கு அனுப்பினர். 3 நாட்களாக தூங்காமல் அழுதுக் கொண்டே இருந்தது வேறு எதோ ஒரு மிதக்கும் மயக்க நிலையில் நான் இருந்தேன். தனியே வேறு குழந்தையினை கவனித்துக் கொள்ள வேண்டும்.மறுநாள் ரிசல்ட் வந்தது.மூளைகாய்ச்சல் இல்லை என்று ரிப்போர்ட்டில் இருந்தது. அது வரை அனலாக சுட்டுக் கொண்டு இருந்த நகுலும் இப்போது மிதமானான்.

கால்ஷியம் குறைபாடும், தைராய்டுபிரச்சனையும் தான் ஃபிட்ஸ்க்கு காரணம் என்று அடுத்து செய்த இரத்த பரிசோதனையில் தெரிய வந்தது. உடனே என்டோகிரோனாலஜி டிபார்ட்மண்டின் டாக்டர் சுந்தர்ராமனை பார்க்க சென்றோம். அவரின் மிகுந்த அக்கறையான கவனிப்பால் என் நகுலின் ஃபிட்ஸ் 3 நாட்களில் மட்டுப்பட்டது. தினம் கால்ஷியம் ஷிரப்,விட்டமின் டி3 மாத்திரை ஒன்று, தினம் ஒரு எல்ட்ராக்ஸின்(தைராய்டிற்கு) என்று அவன் பிறந்த 22 நாளில் இருந்து கொடுக்க ஆரம்பித்தோம்.வாரம் ஒரு முறை கால்ஷியம் இன்ஜெக்‌ஷன் போடப்பட்டது.

அவன் பிறந்து 10 வது நாளில் அவனுடன் அந்த ஆஸ்பத்திரியில் நுழைந்த நான் அவனின் 33 வது நாளில் வெளியுலகை பார்த்தேன். 23 நாட்களில் ஒரு வாரம் மட்டுமே ஒழுங்காய் தூங்கி இருப்பேன்.23 நாட்களும் அவனுக்கு கை,காலில் எங்காவது ட்ரிப் ஏறிக் கொண்டு இருக்கும். ஃபிட்ஸ் வரும் போதெல்லாம் ஆக்ஸிஜன் வைக்க வேண்டும். ட்ரிப் ஏறிக் கொண்டு இருக்கும் இடத்தில் ஒரு கட்டையினை வைத்து பிளாஸ்டரால் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கை, காலை ஆட்டும் போது என் தலையில் தினம் 10 அடியாவது விழும்.ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துற என்று நகுல் என்னை அடிப்பதாய் நினைத்துக் கொள்வேன். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்த பின் முதுகில் கிராஸாய் சில நாட்கள் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டரால் அந்த இடத்தில் மட்டும் முடி இல்லமல் ஏதோ கிராஸாய் வரைந்தது போல் இருக்கும். கை, காலில் பொடி பொடி துளைகளாய் கண்ணிப்போய் இருக்கும்.நாட்கள் ஆக ஆக ஒவ்வொன்றாய் மறைந்தது.

மாதம் ஒரு முறை ஆஸ்பத்திரி போக வேண்டும். பிறக்கும் போது 4 கிலோவாய் இருந்த நகுல் குண்டு குழந்தையாக வளர்ந்தான். இரத்த பரிசோதனைக்கு இரத்தம் எடுக்க வெயின் கிடைக்காமல் எப்போதும் தொடை இடுக்கில் தான் இரத்தம் எடுப்பார்கள். காலை ஆட்டாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்துக் கொண்டே அவனுடன் நானும் அழுவேன்.ஐந்து வயது வரை தினம் 10 கால்ஷியம் மாத்திரை கொடுக்க வேண்டும். மிக்ஸியில் 100 மாத்திரைகளை பொடி செய்து வைத்து தினம் 10 மாத்திரை அளவில் ஒரு சின்ன கிண்ணத்தில் அந்த பொடியினை எடுத்து தண்ணீரில் கெட்டியாக கலந்து வைத்து அவன் நாக்கில் அவ்வப்போது தடவி விட்டு விடுவேன்.

இப்பவும் தைராய்டு மாத்திரை மட்டும் ஒன்று சாப்பிடும் நகுல் அதை கையில் எடுத்து கொடுத்தால் தான் சாப்பிடுவான். மாதம் ஒரு முறை என்ற இரத்த பரிசோதனை அப்புறம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அப்புறம் வருடத்திற்கு ஒரு முறை என்று குறைந்தது.

இப்படி மறுபிறவி எடுத்து வந்தான் என் மகன் நகுல். இப்பவும் அந்த ஆஸ்பத்திரியினை கடக்கும் போது எல்லாம் இனம் புரியாத ஒரு பயம் எனக்கு வருகிறது.



Thursday, October 21, 2010

Corrs


ஷெரான்,ஆண்டிரியா,கரோலின் சகோதரிகள் அவர்களுடைய சகோதரர் ஜிம்முடன் சேர்ந்து வயலின்,பியானோ,கிடார்,ட்ரம்ஸ், கீபோர்ட் வாசித்துக் கொண்டே பாடுவது பார்க்க கேட்க அருமையாக உள்ளது. சில பாடல்களை அவர்களே எழுதியும் உள்ளனர். நான் ஐந்து வருடங்கள் முன்னாடி தான் இவர்களின் ஆல்பத்தினை முதல் முதலாக பார்த்தேன், கேட்டேன். அப்போதிலிருந்து அவ்வப்போது பார்ப்பதும், கேட்பதும் தொடர்கிறது. கரோலின் ட்ரம் வாசிக்கும் அழகே அழகு. ஆண்டிரியா மிக ஸ்டைலாக பாடுவார், மூத்த சகோதரி ஷெரான் வயலினும், ஜிம் கீபோர்ட் வாசிப்பதும் அசத்தல்.
மிக ஃபேமஸான Radio song..



It’s late at night, and I’m feeling down...
There are couples standing on the street
Sharing summer kisses and city sounds...

So I step inside, for a glass of wine.
With a full glass and an empty heart,
I search for something to occupy my mind...

But you are in my head, swimming forever in my head,
Tangled in my dreams, swimming forever...

So I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
So I listen to the radio (listen to the radio)
Remember where we used to go

Now its morning light, and it's cold outside,
Caught up in a distant dream I try
And think that you are by my side...

So I leave my bed, and I try to dress,
Wondering why my mind plays tricks
And fools me into thinking you are there

But you're just in my head,
Swimming forever in my head,
Not lying in my bed, just swimming forever...

So I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
So I listen to the radio (listen to the radio)
Remember where we used to go
I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
I listen to the radio (listen to the radio)
Remember how we used to go

You are in my head, swimming forever in my head
Tangled in my dreams, swimming forever (swimming forever)
Swimming forever...

So I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
So I listen to the radio (listen to the radio)
Remember where we used to go
I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
I listen to the radio (listen to the radio)


சில அசத்தலான பாடல்கள்...What can i do to make u love me, Runaway, Everybody hurts, Dreams, Forgiven Not Forgotten..

Tuesday, October 19, 2010

பழகிடுச்சு...

ஏண்டா ஸ்கூலுக்கு போற போது திட்டு வாங்கிய மாதிரியே இப்ப ஆபிசிற்கு போகும் போதும் உன் அப்பாக்கிட்ட தினம் திட்டு வாங்குறீயே, ஏண்டா இப்படி என்று என்னருமை மகனை இன்று காலையில் வழக்கம் போல் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கும் போது கேட்டேன். அவன் கூலாக சொன்னது...இதெல்லாம் பழகிடுச்சும்மா!!

எதெல்லாம் நமக்கு பழகிடுச்சு என்று யோசித்த போது...

1. தினம் மகன்களை காலை வேளைகளில் திட்டுவது..

2. வெள்ளி கிழமைகளில் கட்டாயம் சைவம் மட்டும் சாப்பிடுவது...

3.. சனி, ஞாயிறுகளில் காலையில் லேட்டாக எழுந்திருப்பது...

4. வீட்டில் இருக்கும் போதெல்லாம் டிவி பார்க்கும் கணவரை அவ்வப்போது திட்டுவது...

5. எப்ப பார்த்தாலும் நான் தான் இந்த வீட்டில் எல்லா வேலையும் பார்க்கணுமா என்று அவ்வப்போது முக்கியமா துவைத்த துணிகளை மடிக்கும் போதும்,வீட்டினை க்ளீன் செய்யும் போதும் சலித்துக் கொள்வது.

6. வாரத்திற்கு நான்கு நாட்களாவது ஃப்ரெண்ட்ஸ்களுடன் நீ எங்க போன, நான் எங்க போனேன், நீ என்ன செய்த, நான் என்ன செய்தேன் என்று நிகழ்ச்சி நிரல் ஃபோனில் ஒப்பிப்பது.

7. கணவரின் செல் ஃபோனில் ஐ.எஸ்.டி, எஸ்.டி.டி என்று ஃப்ரெண்ட்ஸ்களுக்கு பேசி ஃபோன் பில்லை ஏத்துவது..ஹி..ஹி..ஹி

8. அதிக அக்கறை என்ற பெயரில் அத்திபழம்,பேரீட்சை, கேரட் என்று பசஙகளுக்கு காலை வேளையில் கொடுத்து என் கண் முன்னாடி சாப்பிடு என்று கட்டாயப்படுத்துவது, தலையில் முட்டை,வெந்தயம்,செம்பருத்தி இலை என்றும், முகத்தில் முல்தானி மட்டி என்றும் ஏதாவது தடவி அவர்களை வீட்டில் பேய் போல் நடமாடவிடுவது. ஜூஸ் என்று எதாவது செய்து அவர்களை குடிக்க செய்வது.

9. நாங்க எல்லாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது எப்படி பெரியவர்கள் பேச்சு கேட்போம், எப்படி எல்லாம் படிப்போம் என்று டூப்பு டூப்பாய் விடுவது.

10. என்ன சினிமா என்றாலும் விமர்சனம் படித்தும் புத்தி வராமல் பிடிவாதமாய் சில தமிழ் படங்களை தியேட்டரில் பார்த்து தொலைப்பது.

11. நாம் எழுதுவதற்கு பின்னூட்டம் கிடைக்காட்டியும் நானும் எழுதுவேன் என்று இப்படி எதையாவது எழுதுவது.

இன்னும் இன்னும் நிறைய பழகிடுச்சு.....

Monday, October 11, 2010

சனா பற்றி ஒரு வினா?

இன்றைய குட்டி பசங்களையும் ரஜினி ரசிகர்களாக்க எடுக்கப்பட்ட படம்,முன்னாள் ரசிகர்களை பற்றி கவலை படவில்லை.அவர்கள் எப்படி எடுத்தாலும் ரஜினியை ரசித்துக் கொண்டேயிருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டார்கள்.

படம் குப்பை என்றால் என் பசங்கள் இருவருக்கும் என் மீது கோபம் வருகிறது.போம்மா உனக்கு ரசிக்க தெரியவில்லை என்று என் ரசிப்புத்தனத்தின் மீதே சந்தேகம் வர செய்கிறார்கள்.விளம்பர உலகம்.விளம்பரத்தாலேயே ஒன்றும் இல்லாத ஒரு பொருளை எதோ இருப்பதாக பெரிதுப் படுத்தலாம்.

ஐஸ் கழுத்திற்கும் எதாவது ஆபரேஷன் செய்திருக்கலாம். நிறைய காட்சிகளில் கழுத்தில் வயது ஏறிவிட்டது என்பதற்கான கோடுகள் மூன்று தெரிந்துக் கொண்டே இருக்கிறது.அதை மறைக்க சிகிச்சை எதுவும் இல்லையோ.ரஜினி ஸ்கார்ஃப் மாதிரி ஒரு துணியால் கழுத்தினை மூடியே தான் பாடல் காட்சிகளில் வருகிறார்.

Erin Brocckvich படத்தில் ஜூலியா ராபட்ஸ், குழந்தையினை ஒரு கையில் தூக்கிக் கொண்டும் இன்னொரு கையில் இன்னொரு குழந்தையினை இழுத்துக் கொண்டும் படம் முழுவதும் அவ்வளவு அம்சமாக வளைய வருவார். நம் நடிகைகள் எப்போது அப்படியெல்லாம் வருவார்கள்.மரத்தினை சுற்றுவதை விட்டுட்டு.குழந்தைக்கு அம்மா என்றால் பார்க்க மாட்டோம் என்று இந்த டைரக்டர்கள் ஏன் தான் முடிவு செய்கிறார்களோ.


லொகேஷன்கள் அருமை..பெருங்குடி குப்பை மேடு அப்பா எவ்வளோ பெரிசு..பக்கத்து வீட்டில் காட்டுக்கத்தமாக பாட்டை வைக்கும் ராகவ்(சின்னத்திரை நடிகர்) ஓவர் ஆக்ட் செய்து இருக்கிறார்.ரிட்டயர்ட் ஆகும் அல்லது இறந்து போகும் ஆர்மி ஆஃபிசர்களின் குடும்பம் சராசரி மத்திய தர குடும்பத்தினை விட நன்றாகவே வாழ முடியும் பணப்பிரச்சனை இன்றி.இப்படி ஒரு ஹோம் எதற்கு என்று தெரியவில்லை.

சின்ன வயதில் என்னை போல என் தம்பிகளை போல சங்கரும் நிறைய காமிக்ஸ் படித்து உள்ளார். அதை விஷுவலாக்கி இருக்கிறார்.

சனாவாக வரும் ஐஸ்வர்யாவின் முழுப் பெயர் படத்தில் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

1.சஹானா
2.சஞ்சனா
3.சப்னா

நான் கேட்ட யாருக்கும் தெரியவில்லை. ஒரு க்ளூ காதல் ரத்து பேப்பரில் அந்த பெயர் எழுதி இருந்தது.(என்ன ஒரு கவனிப்பு!)

படத்தினை பார்க்க வேண்டாம் என்றால் யாரும் கேட்கப்போவதில்லை.

Thursday, October 07, 2010

வெரைட்டி..

தேவி தியேட்டரில் எந்திரன் முதல் நாள் 11 மணி காட்சிக்கு என் மகன் ரிஷி காலேஜ் கட் அடித்து விட்டு சென்றான்.ஓசி டிக்கெட். அவன் இருந்த வரிசையில் அமர்ந்து படம் பார்த்தது ரஜினியினை தவிர அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.பொல்லாதவன் அங்கிளை பார்த்ததாய் என் தம்பி மகன் விஷால்(4 வயது) தனுஷை குறிப்பிட்டான். ரஜினி வரும் போதெல்லாம் செளந்தர்யா எழுந்து நின்று கத்திக் கொண்டே இருந்தாராம். ரஜினி குடும்பதிற்கு தேவி தியேட்டர் தான் ரொம்ப பிடித்த தியேட்டரோ???

என் பெரிய மகன் நகுல் மாயாஜாலில் முதல் நாள் முதல் ஷோ எந்திரன் முடித்துவிட்டு அப்படியே ஆபிசிற்கு காலை 11.30க்கு சென்று விட்டான். டிக்கெட் புக் செய்தது ராத்திரி 2.30 க்கு.அவன் அந்த நேரத்தில் ACS பரிட்சைக்கு கூட முழித்தது இல்லை. டிக்கெட் விலை 300 ரூபாய்.நான் டிக்கெட் 100 ரூபாய்க்கு குறைவாகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். என் கணவரோ டிவியில் போடும் போது தான் பார்ப்பாராம்.தம்பிக்கு எந்த ஊரு நான் திண்டுக்கல்லில் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். அதன் பிறகு முதல் நாள் எந்த படமும் பார்த்தது இல்லை.

சமீபத்தில் விஷாகப்பட்டிணம் போய் வந்தேன். ட்ரையினில் அரவாணிகள் தொல்லை தாங்க முடியவில்லை. கோச்சில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் அரண்டு போய் இருந்தார்கள். பணம் கொடுக்காத ஆண்களுக்கு முன்னாடி நின்று தங்கள் சேலையினையும், பாவாடையும் எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி தொடையெல்லாம் தெரிய பணம் கேட்டனர். ட்ரையினில் யாரும் எதுவும் செய்ய முடியாது பணம் கொடுத்து கொண்டு இருந்தனர். என்ன அசிங்கம் இது...இவர்களை கண்டிக்க ஏன் யாருக்கும் தைரியம் இல்லை..

விஷாகப்பட்டிணத்தில் பீம்லிப்பட்டிணம் என்ற இடத்தில் கடலோரம் இருக்கும் நரசிம்மர் கோயிலுக்கு காலை 11 மணியளவில் பஸ்ஸில் போனேன். பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஆட்டோவில் கோயில் இருக்கும் மலையடிவாரத்திற்கு போனேன்.போகும் போதே ஆட்டோ டிரைவரை பார்க்கவே பிடிக்கவில்லை. தான் யாதவா ஜாதியினை சேர்ந்தவர் என்று தேவையில்லாமல் பெருமையாக சொல்லி கொண்டான். தலை மட்டும் ஆட்டி வைத்தேன். 150 படிகள் கொண்ட மலையது. கூட்டமே இல்லை. ஆனால் மலையுச்சியில் பெண்கள் தெரிந்தார்கள். மலையடிவாரம் வந்ததும் நானும் உங்கள் துணைக்கு மலை ஏறட்டுமா என்று கேட்டான். நான் தேவையில்லை என்று சொல்லி மலை ஏற ஆரம்பித்தேன். ஆனால், அவன் ஆட்டோவினை ஓரம் கட்டிவிட்டு என்னுடன் ஏற ஆரம்பித்தான். தெலுங்கு பட வில்லன் போலவே இருந்தான். நான் ஏறுவதை நிறுத்தி விட்டு ஒரு படியில் உட்கார்ந்து கொண்டேன். அவன் விறு விறு என்று திரும்பி திரும்பி என்னை பார்த்துக் கொண்டே எறினான். அவன் மலையுச்சிக்கு சென்றதும் நான் ஏற ஆரம்பித்தேன். மலை ஏறியதும் அங்கிருந்த பெண்களுடன் சேர்ந்து நின்று கொண்டேன். சாமி தரிசனம் முடித்து அவன் இறங்கவே இல்லை. நானும் இறங்கவே இல்லை. ரொம்ப நேரம் கழித்து அவன் இறங்கி போய் ஆட்டோவில் ஏறி வண்டியினை எடுத்ததும் தான் நான் இறங்கினேன். பஸ் ஸ்டாண்டிற்கு நடந்தே வந்து விசாகப்பட்டிணத்திற்கு பஸ் ஏறினேன். பகலிலேயே ஒரு பெண்ணால் தனியே போக முடியவில்லையே என்று எரிச்சலாகி போனேன். இன்னும் ஒரு 100 வருடம் ஆகும் இரவில் பெண் தனியே போக.ஹே ராம்!!!

குருவாயூரில் இருக்கும் யானைக் கோட்டையில் 65 யானைகளும் பக்தர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டதாம். மேடம் ஜெயலலிதா கொடுத்த யானைக்கு போன மாதம் மதம் பிடித்து இருந்ததாம். நான் ஒரு யானைக்கு பக்கத்தில் தும்பிக்கை பிடித்து போட்டோக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது யானைப்பாகன் இந்த செய்தினை சொல்லி, மேலும் எல்லா யானைக்கும் மதம் பிடிக்கும் என்று கூறி என்னை பதற வைத்தார்.
65 யானைகளில் 6 மட்டுமே பெண் யானைகளாம், இரண்டு யானைக்கு பால் தெரியாதாம்.. மீதி இருந்த யானைகள் எல்லாம் பெரிய தந்தங்களுடன் கம்பீரமாய் இருந்தன. 6 பெண் யானைகள் மட்டும் இருந்தால் ஏன் மற்ற ஆண் யானைகளுக்கு மதம் பிடிக்காது??


Tuesday, October 05, 2010

ஒரு மாதமாக ஊரில் இல்லை...

ஆகஸ்டு கடைசியில் ஒரு வாரம் கரூர் சென்று அப்படியே திண்டுக்கல்,கிருஷ்ண ஜெயந்தி அன்று பழனி போய்விட்டு சென்னை திரும்பினால் அடுத்த நாளே சொந்தத்தில் ஒருவர் தாத்தையங்கார் பேட்டையில் இறந்து விட அதற்கு அம்மாவை அழைத்துக் கொண்டு வைகையில் திருச்சி போய் அங்கிருந்து பஸ்ஸில் தா.பேட்டை போய் விட்டு திரும்ப வரும் போது காரில் நாமக்கல்,சேலம்,வேலூர், காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் வந்தால் அடுத்த நாள் என் தங்கை பெங்களூரூவில் 15 நாட்கள் ட்ரைனிங்கில் இருக்கிறேன் வாரக்கடைசியில் 3 நாட்கள் வந்தால் ஷாப்பிங் செய்துட்டு, கோயில் போகலாம் என்று அழைக்கவும் அப்படியே பஸ்ஸில் பெங்களூருக்கு விசிட், அங்கிருந்து சென்னை வந்த மறுநாள் விசாகப்பட்டினம் 5 நாட்கள், +2 படிக்கும் என் மச்சினர் மகள் டேக்கோண்டோ என்னும் விளையாட்டில்
இண்டர் நேஷனல் லெவலில் கலந்துக் கொள்ள திண்டுக்கலில் இருந்து வந்து இருந்தாள் அவளை தனியே அனுப்ப மனமில்லாமல் நானும் தமிழ்நாட்டில் இருந்து வந்த 18 பெண் குழந்தைகளுடன் சென்று வந்தேன். விசாகப்பட்டினத்தில் இருந்து திரும்பி வந்த இரண்டு நாளில் கனடாவில் இருந்து வந்திருக்கும் தோழி கெளரி துணைக்கு அழைத்தத்தால் ஃப்ளைட்டில் கொச்சின் சென்று கார் எடுத்து குருவாயூர்,திருச்சூர்,சாலக்குடி போய்விட்டு 30 ஆம் தேதி இரவு இனிதே ஃப்ளைட்டில் சென்னை திரும்ப வந்தேன்.


விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம்..

மரோசரித்திரா,புதுபுது அர்த்தங்கள் படத்தில் வரும் கடல்..


வைசாக்கில் சப்மெரைன் மியூசியம், காளிக் கோயில்...


வைசாக்கில் நாங்கள் தங்கி இருந்த ஆந்திரா யுனிவர்சிட்டி ஹாஸ்டல்..


குருவாயூரில் புன்னத்தூர் என்ற இடத்தில் இருக்கும் யானைக் கோட்டையில் 65 யானைகள் உள்ளன.சித்தார்த் என்ற இந்த யானை குளிக்கும் அழகே அழகு.


யானையுடன் தைரியமாக நாங்கள்..

அத்திரப்பள்ளி அருவியில் மிதமான தண்ணீர்..

இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு இருந்ததால் ஒரு மாதமாக இணையத்தினை விட்டு பிரிய வேண்டியதாகி விட்டது. ஒரு மாதத்தில் கர்நாடகா,ஆந்திரா,கேரளா, அப்பப்ப தமிழ்நாடு என்று சுற்றியாச்சு. இந்த மாதம் எங்கேயும் ப்ளான் இல்லை!!!..