Wednesday, September 21, 2011

ராயல் நகைகள்


 டயானா - சார்லஸ் மகன் வில்லியம் தன் தாய் டயானாவின் இந்த நிச்சயதார்த்த மோதிரத்தை தான் தன் மனைவி கேதரினிற்கு அணிவித்தார்.



சிலோன் சஃபையர் என்ற அந்த புளூ நிற மோதிரம் சுற்றிலும் 14 மிக சிறிய வைரத்திற்கு நடுவில் சும்மா பளிச்சென்று இருக்குல்ல. அப்பொழுதைய பொதுமக்களும் வாங்கும் விலையில் ஒரு மோதிரத்தை டயானா செலக்ட் செய்தது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.


கேட் கேதரின் தலையில் வைத்திருக்கும் அந்த சிறிய க்ரீடம்(halo tiara). இந்த tiara வில்லியமின் பாட்டி இரண்டாம் எலிசபெத்துடையது.இரண்டாம் எலிசபெத்தின் 18 ஆவது பிறந்த நாளிற்கு அன்பளிப்பாக அவரது தாய் எலிசபெத்(1) கொடுக்கப்பட்ட இந்த க்ரீடம் 1936-ல் செய்யப்பட்டதாம்.

 எலிசபெத் halo tiara-வுடன் சின்ன வயதில்


கேட் கேதரின் திருமணத்தில் அணிந்திருந்த தோடுகள் அவரின் பெற்றோர் அந்த(halo-tiara) கிரிட டிசைனில் செய்து கொடுத்ததாம்.



டயானாவின் மகன்கள் வில்லியம்,ஹாரி இருவரும் யாருக்கு முதலில் திருமணம் நடைபெறுகிறதோ அவர்களின் மனைவிக்கு நிச்சய மோதிரமாய் இந்த மோதிரத்தை அணிவிக்க பேசி கொண்டார்களாம்.வில்லியம் முந்திக் கொண்டார்.இத்திருமணம் நடந்ததில் இருந்து இந்த புளூ கல் மோதிர விற்பனை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதாம்.

டயானா அவர் திருமணத்தின் போது அணிந்திருந்த இந்த (spencer family tiara) க்ரீடத்தினால் மாலையில் தலைவலியினால் மிகவும் அவஸ்தை அடைந்தாராம்.


அதனால் தான் கேதரின் மிக எளிமையான க்ரீடத்தை செலக்ட் செய்து கொண்டாரோ? (cartier halo tiara).

குயின் மேரி

ஜார்ஜ் V 1911-ல் டில்லியில் ஸ்பெஷல் தர்பாரில் கலந்து கொள்ள வந்த போது அவருடைய மனைவி குயின் மேரி அணிந்துள்ள இந்த க்ரீடம் டெல்லி தர்பார் tiara என்றழைக்கப்பட்டது. இந்த க்ரீடம் மேரியின் மருமகள் எலிசபெத்திற்கு(1) அளிக்கப்பட்டது. 1947-ல் எலிசபெத் டெல்லி தர்பார் கிரீடத்தை தன் தென் ஆப்பிரிக்கா விஜயத்தின் போது அணிந்திருந்தார். 60 வருடங்களுக்கு பிறகு 2005 சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா ஒரு பார்ட்டியில் அணிந்து வந்தார். மேடம் பெரிய கிரீடத்தை தான் செலக்ட் செய்துள்ளார்.

கமீலா

இந்த டெல்லி தர்பார் கிரீடத்தின் மேலே இருந்த எமரால்ட் நீக்கப்பட்டிருக்கிறது.

நல்ல வேளை நம் திருமணத்தில் இப்படி க்ரீடம் வைக்கும் பழக்கம் இல்லை.இப்ப நகை விற்கும் விலையில் யாரால் முடியும்?


1911-ல் டெல்லி வந்த குயின் மேரிக்கு இந்த டெல்லி தர்பார் நெக்லஸ் பாட்டியாலா மகாராணியால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நெக்லஸ் குயின் மேரி தன் மருமகள் எலிசபெத்திற்கு கொடுத்து விட எலிசபெத் ராணிக்கு மிகவும் பிடித்த ஒரு நெக்லஸ் ஆகியது.


\
இது குயின் மேரி உள்ளங்கழுத்தில் அணிந்துள்ள நகையாகும்.
இந்த எமரால்ட் சோக்கர் டயானாவால் விரும்பி அணிய பட்டது. கழுத்தில் போட வேண்டிய இதை நெற்றியில் சில சமயம் மிக ஸ்டைலாக டயானா அணிந்து கொண்டார். 





கேதரின் தன் மாமியார் டயானாவின் சஃபையர் தோடை சிறுது மாறுதல் செய்து தொங்குவது போல் செய்துள்ளார். நகை விற்கும் விலையில் இப்படி தான் ராணிகளே ஓசியில் காலம் தள்ளுகிறார்களோ!!!! திருமணம் மற்றும் பார்ட்டிகளுக்கு போட கொடுக்கப்படும் இந்த நகைகளை யாருக்கும் கடனாக கொடுக்கவோ அல்லது விற்கவோ ராஜ பரம்பரையில் பெண்களுக்கு உரிமை கிடையாதாம்.டயானா தன் டைவர்சிற்கு பிறகு அனைத்து நகைகளையும் தன் மாமியாரிடமே திரும்ப கொடுத்து விட்டாராம். 

Friday, September 09, 2011

பாப்பா

போன மாதம் செக்கப் சென்ற போது செப்டம்பர் 10-ற்கு பிறகு நல்ல நாள் பார்த்துட்டு வாங்க c-section செய்து குழந்தையினை எடுத்து விடலாம் என்று சொல்லவும்.செப்டம்பர் பத்தே நல்ல நாள் தான் அன்றே செய்து விடலாமா என்று செப்டம்பர் 4-ல் டாக்டரிடம் சொல்ல சென்ற போது இல்லை இல்லை இரண்டு நாட்களில் செய்து விடலாம் இல்லைனா அனெஸ்தடிஸ்ட் கிடைப்பது கடினம் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர்.

10 வரை நல்ல நாள் இல்லையெனினும் டாக்டர் சொல்படி கேட்பது தான் நல்லது என்று 6 ஆம் தேதி ஹாஸ்பிட்டல்லில் சேர்ந்து 7 ஆம் தேதி காலையில் ஆபரேஷன் செய்து குழந்தையும் எடுத்தாச்சு. பெண் குழந்தை ஆஹா எவ்ளோ நாளாச்சு எங்கள் வீட்டில் என் தங்கைக்கு பிறகு வந்திருக்கும் பெண் குழந்தை என்று எல்லோரும் மிக சந்தோஷமாய் இருந்தோம்.மதியம் இடி போல் ஒரு செய்தி. குழந்தையினை ஆம்புலன்சில் இரண்டு நர்ஸ்கள் உதவியுடன் வடபழனி சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு செல்கிறோம் என்ற தகவல். குழந்தை மூச்சு விட சிரமப்படுவதால் அங்கு கொண்டு செல்லும்படி பிரசவம் பார்த்த டாக்டர் என் தம்பியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

பிறந்த குழந்தை தனியே NICU-வில் இருக்கிறது.அம்மாவோ இங்கே ஒரு ஹாஸ்பிட்டலில்.அங்கோ கண்டிஷனாய் தந்தைக்கு மட்டுமே அனுமதி.இன்ஃப்க்‌ஷன் ஆகி விடும் என்பதால் மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை.நேற்று மூன்று கிலோவில் இருந்த குழந்தை இன்று 100 கிராம் குறைந்துள்ளது. எங்கேயெல்லாம் டியூப் சொருக முடியுமோ சொருகியாச்சு.

பிரிமெச்சூர் பேபிக்கு பிறந்தவுடன் மூச்சு பிரச்சனை வராமல் இருக்க டெலிவரிக்கு முன்பு தாய்க்கு போடப்படும் ஒரு வகையான ஹார்மோன் இன்ஜெக்‌ஷனை ஏன் அந்த தாய்க்கு போடவில்லை. இது குழந்தையினை அட்மிட் செய்த ஹாஸ்பிட்டலில் கேட்டார்கள்.

10 தேதிக்கு பிறகு சிசேரியன் செய்யலாம் என்ற டாக்டர் திடீரென்று இரண்டு நாளில் ஆபரேஷன் என்றால் அதற்கு தாயின் உடல்நிலை காரணம் என்றால் ஓகே.அனஸ்தெடிஸ்ட் கிடைக்கமாட்டார் என்பது ஒரு ஒத்துக் கொள்ள கூடிய காரணமா?வேறு ஆட்களே கிடைக்க மாட்டார்களா?

நார்மலா பிறந்தாலே 1000 பிரச்சனைகள் வரக்கூடிய இந்த காலத்தில் எதற்கு அவசரமாய் ஒரு மாதம் முன்பாகவே பிரிமெச்சூர் பேபியினை எடுக்கும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாட்டினை ஏன் செய்யவில்லை.?

குழந்தையினை சேர்த்திருக்கும் ஹாஸ்பிட்டலில் வேறு ஒருத்தரும் போக கூடாது என்றால் படிப்பறிவு இல்லாத தகப்பன் என்றால் குழந்தை நிலைமை பற்றி எப்படி புரிந்துக் கொள்வார்.படித்தே இருந்தாலும் மெடிக்கல் டெர்ம்ஸ் எப்படி எல்லோருக்கும் புரியும். இல்லையெனில் அந்த ரிப்போர்ட்டை ஒரு ஜெராக்ஸ் எடுத்தாவது கொடுக்கலாம் இல்லையா? இன்னொரு தெரிந்த டாக்டரிடம் செகண்ட் ஒப்பினியன் கேட்போம் இல்லையா?

செகண்ட் ஒப்பினியன் கேட்காமல் டெலிவரி செய்து இப்போ கஷ்டப்படுகிறோம்.

குழந்தை வெயிட் நல்லாயிருப்பதால் நம்பிக்கையுடன் கடவுள் இந்த முறையும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பம் இருக்கிறது. என் மகன்கள் குழந்தைக்கு பெயர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.ஒன்றும் ஆகாதும்மா பாப்பா வீட்டிற்கு வந்திடும் என்று எங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.என் தம்பி அந்த ஹாஸ்பிட்டலில் தனியே இரண்டு நாளாய் குழந்தையினை தினம் மூன்று முறை மட்டும் பார்த்து விட்டு ரிஷப்ஷனில் காத்து இருக்கிறான்.

என் தம்பிக்கு இரு முறை 8 மாதத்தில், 6 மாதத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. இது மூன்றாவது குழந்தை. எங்கே முட்டி கொள்வது,யாரை குறை சொல்வது,என்ன பாவம் செய்தோம் என்று புலம்பி கொண்டு இருக்கிறோம். சொந்தத்திலும் திருமணம் செய்யவில்லை.9 மாதமும் பெட் ரெஸ்ட்டில் இருந்தார் என் தம்பியின் மனைவி.

இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்.