Friday, December 28, 2012

தினம் ஒரு கதை

நேஷனல் ஜியாகிரஃபிக் சேனலில் மாலை 6-7 வரும் Banged up Abroad.தினம் ஒரு கதை. நிஜமாக நடந்த கதைகள்.கதையின் நாயகர்/கிகள் தங்கள் அனுபவங்களை, வெளிநாடுகளில் தாங்கள் எவ்வாறு எதற்காக எப்படி கைது செய்ய பட்டோம் என்று கூற கூற அப்படியே நடிகர்களை வைத்து அந்த கதையினை காட்சியாக எடுத்து உள்ளார்கள்.

 1.பிலிப்பைன்ஸ் சிந்தியாவும், பிரிட்டன் டேவிட்டும் காதலித்து அது சிந்தியாவின் முதல் கணவருக்கு பிடிக்காமல் அவர்கள் படும் பாடு, லண்டனுக்கு எப்படி தப்பித்து வந்தார்கள் என்ற காட்சிகள். இப்படி ஒரு காதல் அவசியமா என்றே தோன்றியது. என்ன காதலோ?

 2.கோவாவிற்கு சுற்றுலா வரும் இங்கிலாந்து பெண் க்ளாரா மேத்யூஸ் பணத்திற்காக ஒரு நண்பர் பேச்சை கேட்டு ஃப்ரான்சுக்கு சிலைகளை பார்சல் செய்யும் போது அதனுள் போதை மருந்தையும் வைத்து கூரியர் செய்து மூன்று முறை பணம் கிடைத்து அதன் பிறகும் நான்காம் முறை அனுப்பும் போது இந்திய போலீசால் கைது செய்ய படுகிறாள். செம த்ரில்லிங்.

 3.மெக்சிகோ ஜெயிலில் கைதியாக இருக்கும் அமெரிக்கர் ட்வைட் வொர்க்கர் தன் காதலி மூலம் பெண் வேடம் இட தேவையான உதவிகளை பெற்று பெண்ணாக வேடமிட்டு எப்படி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார் என்பது அச்சோ சான்சே இல்லை. இப்படி கூட செய்ய முடியுமா என்று நமக்கு தோன்றுகிறது.

இவர்களெல்லாம் போதை பொருள் கடத்த முற்படும் போது தான் பிடிபடுகிறார்கள். இன்னும் இன்னும் தினம் ஒரு கதை.நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

Tuesday, November 20, 2012

துப்பாக்கி விஷாலுடன்

15 வருடங்களாக நான் பார்க்க வேண்டிய படங்களுக்கு துணையாக என் பசங்க நகுல்,ரிஷியும் பசங்க பார்க்க வேண்டிய படங்களுக்கு துணையாக நானும். பார்த்த படங்கள் குருதி புனல்,காதலுக்கு மரியாதை,மகாநதி,லவ் டுடே,முத்து,இந்தியன்,ஹேராம்,துள்ளாத மனமும் துள்ளும்,குஷி,விருமாண்டி,பத்ரி,ஷாஜஹான்,யூத்,திருமலை,படையப்பா,
சந்திரமுகி,கில்லி,போக்கிரி,காக்க காக்க என்று போய் கொண்டிருந்தோம்.

அப்புறம் சடாரென்று பசங்க இரண்டும் அவர் அவர் ஃப்ரெண்ட்ஸ்களுடன் முதல் நாள் முதல் ஷோ காலை 8 மணிக்கே(வெளங்கிடும்) போக ஆரம்பிக்க தமிழ் படம் பார்க்க துணைக்கு ஆள் கிடைக்காமல் ஞே என்று முழித்து கொண்டு இருந்த போது தான் தம்பி மகன் விஷாலும் யார் கூட படம் பார்க்க செல்வது என்று பலத்த யோசனையில் இருந்த போது இரண்டு பேரும் செட்டானோம்.வில்லு,வேட்டைக்காரன்,சுறா என்றும் தசாவதாரம்,சிவாஜி,எந்திரன்,வேலாயுதம் என்றும் செம செட்டானோம். ஆனாலும் நொந்து போகாமல் செம படம்,சூப்பர் ஃபைட் ,செம பாட்டு என்று விஷாலுடன் சேர்ந்து அவன் மனம் நோக கூடாதே என்று ராகம் பாடி கொண்டு இருந்தேன்.என் வீட்டுக்காரர் உங்களை நம்பி தான் தமிழ் திரையுலக தாயாரிப்பாளர்கள் பொழப்பு நடத்துறாங்கன்னு சொல்வார்.

ஆனாலும் என் பொறுமையினை சோதிக்கும் விதமாய் விஷாலின் கட்டாயத்தின் பேரில் வெடி,சிறுத்தை,ஒஸ்தி என்று நொந்து போனேன்.எனினும் தமிழ் படம் தியேட்டரில் போய் பார்ப்பதை நிறுத்த முடியாமல் நிச்சயம் ஒரு நல்ல படம் விஷாலுடன் சேர்ந்து பார்ப்போம் என்று நம்பினேன்.ஆனால் விதி யாரை விட்டது.ஒரு கல் ஒரு கண்ணாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள்,மசாலே கஃபே,சகுனி என்று பார்த்து தள்ளினோம்.

நண்பன்,பசங்க.வே.ஆடு விளையாடு, வானம்,கோ விஷாலுடன் தான் பார்த்தேன். அப்பாடா ரொம்ப நாள் கழித்து நல்ல படங்கள்.

சகுனி பார்க்கும் போது கார்த்தி ஜெயில் போகும் போது விஷால் தூங்கி விட்டது. படம் முடியும் போது எழுப்பி விட்டேன். வெளியில் வந்து என் மகனின் அப்பாச்சிக்கு காத்து இருக்கும் போது விஷால் சொன்னது.மம்மி, கொஞ்சம் சின்ன படமா எடுத்து இருக்கலாம்ல பாருங்க நான் தூங்கியே விட்டேன் என்றான்.நீ மட்டுமா தூங்கின செல்லம் நானும் கொஞ்சம் தூங்கிட்டேன் என்றேன்.

கடந்த புதனிலிருந்து துப்பாக்கி பார்க்க காத்திருந்து நேற்று மாலை காட்சிக்கு போனோம்.

ப்ளஸ்:

விஜய் விஜய் விஜய் விஜய் விஜய் விஜய்

தங்கையை மீட்டு கொண்டு காரில் வரும் போது காலியான ஜூஸ் டப்பாவில் அப்பாவியாய் முகம் வைத்து கொண்டு ஜூஸ் உறிஞ்சுவது,
சத்யனிடம் சஸ்பென்ஸ் சொல்லாமல் காஜலுடன் ஜூட் விடுவது,
ஐ ஆம் வெயிட்டிங் என்று வில்லனிடம் சொல்வது.இன்னும் இன்னும் விஜய் ராக்ஸ்.
காஜலுக்கு நடிக்க வருகிறது. ஆனால், அவருக்கு சீன்கள் கம்மி.
வில்லன் வித்யுத் ஜம்வால் ஸ்கிரீனில் வரும் போதெல்லாம் செம ஸ்டைலாய் இருக்கிறார். மாடலிங் செய்தவராம்.
நல்ல வேளை விஜய் அம்மா அப்பா,தங்கைகளை அழ வைக்கலை.
தப்பு செய்த அதிகாரிகள் செத்து போகும் விதம். கடைசியில் வில்லன் செய்யும் மாஸ்டர் ப்ளான் செம ட்விஸ்ட்.

மைனஸ்:

கடைசி கப்பல் சண்டை. எந்த டெரரிஸ்டும் அதற்கு ஒத்து கொள்ள மாட்டார்கள்.வேறு மாதிரி புத்திசாலிதனமாய் முடிவு இருந்திருக்கலாம்.
தேவையே இல்லாத பாடல்கள்.
வீட்டிற்குள் தீவிரவாதியினை ஒழித்து வைப்பது.
சத்யனுக்கு இன்னும் நகைச்சுவை சேர்த்திருக்கலாம்.


Wednesday, November 14, 2012

ஒரு அழகு படமும் ஒரு அழுக்கு படமும்

இரண்டாவது முறை வாழ்க்கை கிடைக்காது-
Zindagi Na Milegi Dobara,(ZNMD)

 Zoya Akhtar என்ற பெண் டைரக்டர் எடுத்த படம். Farhan Akhtar தயாரித்து உள்ளார். தம்பி தயாரிக்க அக்கா இயக்கிய படம். HRITHIK ROSHAN,ABHAY DEOL,FARHAN AKHTAR இவர்களுடன் காத்ரீனா கயிஃப் நடித்த படம்.படம் முழுவதும் ஸ்பெயின்,எகிப்தில் எடுக்க பட்டுள்ளது.மூன்று ஃப்ரெண்ட்களும் பேச்சிலராக இருக்கும் போதே வாழ்க்கையை நன்கு அனுபவிக்க ஸ்பெயின் போகிறார்கள்.ஸ்கூபா டைவ்,ஸ்கை டைவ்,புல் ரன் என்று மூன்று வித விளையாட்டுகளில் மூவரும் ஈடுபடுவதை கொஞ்சமா கதையும், நிறைய பணமும் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள். காத்ரீனா,ஹிரித்திக் ரோஷன் காதலும், காரில் மூன்று நண்பர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதும் நல்லாயிருக்கு. Javed Akhtar கவிதை சில காட்சிகளில் வந்து கொண்டே இருக்கிறது. இதர்,உதர்,ஸிந்தஹி,பாரத்,மேரா,துமாரா,கஹாங்,ஹவா,ஹை பஹூத்,அச்சா அப்படி இப்படின்னு 30 வார்த்தைகள் மட்டுமே ஹிந்தியில் தோடா தோடா தெரியும் ஹை. எனவே, கவிதைகளை ரசிக்க முடியலை.

 16 டன் தக்காளி போர்ச்சுகலிலிருந்து ஸ்பெயினிற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கொண்டு வந்து தக்காளி பாட்டை ஷூட் செய்தார்களாம்.இந்த பாடலில் நடித்த பிறகு நால்வரும் ரொம்ப நாளைக்கு தக்காளி சேர்த்த எந்த உணவையும் சாப்பிடவேயில்லையாம்.இந்த பாட்டை பார்த்தாலே ஒரு மாதத்திற்கு தக்காளி வேண்டாம் போல.

                             படத்தில் வரும்  ஊர்கள்,ஹீரோ,ஹீரோயின் அழகோ அழகு.


DELHI BELLY:

முதல் படத்தில் கவிதையை மட்டும் தான் ரசிக்க முடியவில்லை. இதில் நிறைய காட்சிகளை பார்க்கவே முடியவில்லை. டெஸ்ட்டிற்காக லேப்பிற்கு கொடுக்க வேண்டியதை(?) கடத்தல்கார்ருக்கும்,கடத்தல்காரருக்கு கொடுக்க வேண்டிய வைர பார்சலை லேப்பிற்கும் கொடுத்து தொலைப்பதால் என்ன நேரிடுகிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார்கள்.ரொம்ப நேரம் ஆங்கிலத்திலேயே அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். திடீரென்று ஹிந்தியிலும் பேசினார்கள். இது ஹிந்தி படம் தானா? அமீர்கான் தயாரித்து இருக்கிறார். அழகான இம்ரன் இதில் ஒரு சீனில் கூட அழகா இல்லை. டில்லியின் மிக குறுகலான சந்துக்கள்,ஹீரோ தங்கி இருக்கும் அந்த அரத பழைய வீடு என்ன ஒரு வீடு.பார்த்தாலே ஓடி விடலாம் போல இருக்கிறது.  அப்படி ஒரு வீட்டை அமைக்க இண்டீரியர் டிசைனர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்!!! பேச்சிலர்ஸ் வீடு இவ்ளோ மோசமாகவா இருக்கும்.ஒரு அழகான காரையும் நாசமாக்கி.கடத்தல்க்காரர் அசத்தலாய் நடித்து இருக்கிறார். நிறைய ஹிந்தி வார்த்தைகள் தெரியாததால் இதில் வரும் கெட்ட வார்த்தைகள் புரியவில்லை.நல்லதா போச்சு. இந்த படம் தான் தமிழில் ஆர்யா நடிக்க சேட்டை என்ற பெயரில் வர இருக்கிறது. இங்கே ரொம்ப அழுக்கு இல்லாமல் கண்ணியமா வருமா பொறுத்திருந்து பார்ப்போம்.


படத்தில் வரும் ஊர்,ஹீரோ, ஹீரோயின் அழுக்கோ அழுக்கு.

Tuesday, October 30, 2012

வெரைட்டி- அக்டோபர்(2012)

போத்தீஸ் புதிய கடை ஜி.என்.செட்டி ரோடில் திறந்து இருக்கிறார்கள். விலை அதிகம் என்று தோன்றுகிறது. 10 மாடிகளுக்கும் எக்ஸ்கலேட்டர் வைத்திருப்பது அருமை. அதான் விலை ஜாஸ்தியோ. கடையின் அகலம் சிறியது. கார் பார்க்கிங்கிற்கு சைடில் நிறைய இடம் விட்டிருக்கிறார்கள். முதன் முதலில் திருநெல்வேலியில் இவர்கள் கடையினை திறந்த போது நானும் என் தங்கையும் அங்கு போனதை பற்றி பேசி கொண்டே இந்த புதுக் கடையில் ஒன்றுமே எடுக்காமல் சும்மா சுத்தி பார்த்துட்டு திரும்பிவிட்டோம். அங்கிருந்து நிறைய பேர் பழைய போத்திஸுக்கு வழி கேட்டு கொண்டும், ஆட்டோ வைத்து கொண்டும் இருந்தார்கள்.

 எலக்ட்ரிக் ட்ரையினில் ஃப்ர்ஸ்ட்க்ளாஸில் தி.நகர் போய் கொண்டிருந்த போது கிண்டியில் ஒரு கிராமத்து பையனும் பெண்ணும் ஏறினார்கள்.அவர்களிடம் இது ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் என்று சொன்னதும் அடுத்த பெண்கள் கம்பார்ட்மெண்ட்டில் அந்த பெண் மட்டும் ஓடி போய் ஏறி விட்டது. அந்த பையனிடம் அடுத்த ஸ்டேஷனில் பெட்டி மாறிவிடு என்று சொல்லி கொண்டிருக்கும் போதே வந்து கொண்டிருந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் சைதா பேட்டை ஸ்டேஷன் வரும் போது கரெக்டா அந்த பையனை பிடித்து விட்டார். தெரியாமல் ஏறிட்டேன் என்று அந்த பையன் கெஞ்சியதை சிறிதும் மதிக்கவில்லை.கீழே இறக்கி வசூலிக்க ட்ரை செய்து கொண்டிருந்தார். பாவம் அந்த பையன் கையில் ஒரு 500 அல்லது 1000 ரூபாய் மட்டுமே இருந்திருக்கும். அந்த பெண்ணும் இறங்கி கெஞ்சி கொண்டிருந்தது. நிறைய பேர் தெரியாமல் ஏறி இப்படி மாட்டி கொள்கிறார்கள்.தீவாளி ட்ரெஸ் வாங்க போய் கொண்டிருந்தவர்களுக்கு தண்டம்.அடிக்கடி இப்படி தெரியாமல் சிலர் ஏறி தண்டம் அழுகிறார்கள்.ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் பெட்டியின் வெளியில் ஏதாவது டார்க் கலர் பெயிண்டாவது அடித்து வைக்கலாம்.ஃபர்ஸ்ட் க்ளாஸ் என எழுதி இருப்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

 கார் ஆக்ஸிடெண்ட்டால் ஏற்பட்ட முதுகு பிரச்சனைக்கு டச் தெரபி போகலாம் என்று ஃப்ரெண்டிடம் விசாரித்ததில் பல்லாவரம் கண்டோன்மெண்ட் ஸ்கூலில் திங்கள், வியாழகிழமைகளில் மாலையில் ட்ரீட்மெண்ட் எடுத்து கொள்ளலாம் என்று தெரிந்து நேற்று போய் வந்தேன். சித்தா டாக்டர் ஒருவரிடம் கன்சல்ட் செய்து கொண்டு அவர் சொன்ன ஒரு தொடுவர்மத்தை அங்கிருந்த வாலண்டியர்ஸ் செய்து விடுகிறார்கள். செய்யும் போது உடனே பாரம் குறைந்த மாதிரி இருந்துச்சு. ஆயில் ஒன்றும் கொடுத்து இருக்கிறார்கள். வலி இல்லை.ஏதோ முதுகில் வெயிட்டாக இருப்பது போல ஒரு உணர்வு. அங்கே நான் போன போது 50க்கும் மேற்பட்டவர்கள் ரெகுலராக வருவது தெரிந்தது. சுகர்,பி.பி. கை,கால், இடுப்பு, முதுகு, கழுத்து வலிக்கு நிறைய பேர் வருவது தெரிந்தது. 8 சிட்டிங்கிற்கு 200 ரூபாய் தான் வாங்குகிறார்கள். எண்ணெய்க்கு 100 ரூபாய். திருமூலர் வர்ம ஆராய்ச்சி நிலையம் இந்த மையத்தை நடத்துகிறது.

2021 வரை கரெண்ட் பிரச்சனை இருக்க தான் செய்யுமாம்.கரெண்ட் உற்பத்தி அதிகரித்தாலும் உபயோகமும் அதிகரிக்கும் அதனால் பிரச்சனை தான். எல்லா மாநிலங்களுக்கும் குஜராத் தவிர இதே பிரச்சனை அடுத்த இரண்டு வருடங்களில் வருமாம். . இப்பவே மேட்டூர், வடசென்னையில் போடப்பட்ட புது ப்ராஜ்க்டுகள் முடிவடைந்த நிலையில் இருந்தாலும் உற்பத்தி ஆன கரெண்டை எடுத்து செல்ல துணை மின்நிலையங்கள் அமைக்க நில கையகப்படுத்தும் நடவடிக்கை பேப்பர் வடிவிலேயே இருக்கிறதாம். அதை விரைந்து முடிப்பதை விட்டுட்டு முதலமைச்சர் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதி வருவதை அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதாம். கிடைக்கும் மின்சாரத்தை சிக்கனமாய் பயன்படுத்துவோம்.


Tuesday, October 23, 2012

S ஆக பார்த்தேன்

சின்ன s :  சாப்பிடுறோமோ இல்லையோ தினப்படி சமையல் செய்து செய்து அலுத்து போய் இதிலிருந்து ஒரு இரண்டு நாளாவது எஸ் ஆவது எப்படின்னு தீவிரமாய் யோசித்து திருப்பதிக்கு எஸ் ஆகலாம் என்று உடனே திட்டம் போட்டு என் மகன்களும்,கணவரும் அந்த கூட்டதிற்கு நாங்கள் வரலை என்று எஸ் ஆக என் சித்தி, அவரது பெண்,என் தம்பி அவரின் மனைவி,என் தங்கை என்று ஒரு படையுடன் திருமலைக்கு போன புதன் கிழமை(17) எஸ் ஆனேன்.புதனன்று திருமலையில் கூட்டமே இல்லை. பத்தோடு பதினோரு ஆளாக நின்று 600 ரூபாய்க்கு ரூம் போட்டு, நந்தகம் என்ற புத்தம் புது ரூமில் நாங்கள் தான் பால் காய்ச்சி குடியேறினோம்.ரூம் இருந்தது புதிய அன்ன பிரசாத பில்டிங் பக்கத்தில். இரவு தர்ம தரிசனம் 10 மணிக்கு போனால் 12 மணிக்கெல்லாம் சாமி கும்பிட்டு வெளியில் வந்து லட்டு வாங்கி ரூமிற்கு வர 1 மணி ஆனது.

என் சித்தி பெண் கட்டாயம் அங்க பிரதட்சணம் செய்யணும் இது வரை செய்ததே இல்லைக்கா என்று கூறவும் சரியென்று அப்படியே தூங்காமல் புஷ்கரணி சென்று இரண்டு முங்கு போட்டுட்டு(இரவு 1.30க்கு) அங்கபிரதட்சண கியூவில் நின்று கொண்டோம்.செம குளிர். அங்கபிரதட்சணம் செய்து இன்னொரு முறை சாமி தரிசனம் செய்து ரூமிற்கு காலை 4.30 க்கு வந்து பிறகு தூங்கினோம்.எதற்கும் இருக்கட்டும் என்று அங்கபிரதட்சண் டோக்கன் முதல் நாள் இரவு 7 மணிக்கே வாங்கி வைத்திருந்தோம். அடுத்த நாள் பிரம்மோத்ஸ்வம் காலை மாலை பார்த்து விட்டு மறுநாள் வெள்ளி காலை சென்னை வந்தோம். இப்படி இரண்டு நாள் குடும்ப பொறுப்பிலிருந்து மிக ஆனந்தமாய் எஸ் ஆனேன். வந்து பார்த்தால் இங்கே பெய்து கொண்டிருந்த பயங்கர மழையிலிருந்தும் எஸ் ஆகி இருக்கிறேன்.

பெரிய S: என் கணவருடன் வேலை பார்க்கும் முருகன் என்பவரின் திருமணத்திற்கு பெரம்பலூர் செல்லலாம் என்று நண்பரின் Vento காரில் சனியன்று (20th) மதியம் 3 மணிக்கு நானும் என் கணவரும் அவரின் இரண்டு நண்பர்களும் கிளம்பினோம். குரோம்பேட்டை ப்ரிட்ஜ் பக்கம் போகும் போது எருமை மாடு கூட்டம் ரோடை க்ராஸ் செய்யவே மிக பொறுமையாக வண்டியினை ஓட்டி அப்படியும் ஒரு எருமை மாட்டின் பின்புறம் கொஞ்சமாய் காரின் முன்பகுதியில் இடித்து கார் ஜெர்க் ஆகி மேலும் நிதானமாக காரை ஓட்டினார் நண்பர் சேகர். திண்டிவனம் பக்கமாய் போய் கொண்டிருந்த போது ரோடில் எங்களுக்கு முன்னாடி சென்ற லாரியும், அதற்கு முன்னாடி சென்ற கார்களும் மிக மெதுவாக செல்லவே நாங்களும் வலது பக்கமாய் மெதுவாக சென்று கொண்டே என்னவோ ஆக்ஸிடெண்ட் போல இருக்கே என்னது என்று இடது பக்கமாய் பார்த்து கொண்டே பேசி கொண்டே போன போது டமால் என்று எங்கள் காரின் வலது பக்க பின்பகுதியில் ஒரு மாருதி முரட்டு தனமாய் மோதி எங்கள் கார் கன்னாபினாவென்று இடது பக்க ரோட்டோரமாய் போய் நிறுத்தப்பட்டது.நான் ட்ரைவர் சீட்டிற்கு பின்னால் இருந்தேன்.

தலை முன்னாடி சீட்டில் மோதி முதுகு நான் இருக்கும் சீட்டிலே மோதி அப்படி இப்படி குழுங்கி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. போச்சு போச்சு என்று காரை விட்டு மூவரும் இறங்கி காரின் பின்னாடி ஓடி சென்று பார்க்கும் போது நான் காரை விட்டு இறங்காமல் வலது பக்கமாக திரும்பி பார்க்கிறேன் எங்களை வந்து மோதிய மாருதி அப்பளமாய் முன் பகுதி நொறுங்கி நின்று கொண்டு இருக்கிறது. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. காரில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.ஒரு அரை மணிநேரம் கழித்து 6 மணிக்கு கொஞ்சம் மனம் அமைதியானவுடன் நான் எதிரில் சென்னை போகும் பஸ்சில் ஏறி வீட்டிற்கு வந்து விட்டேன். என் கணவர் அவர் நண்பர்கள் போலீஸ் அது இதுவென்று அல்லாடி காலையில் வீடு வந்தனர். காரை க்ரேன் வச்சு தான் தூக்கி போனார்களாம்.அந்த சமயம் எங்காச்சும் வலிக்குதா என்று தலையினை கை கால்களை தடவி தடவி பார்த்து கொண்டோம். எனக்கு முதுகில் வலது பக்கம் மட்டும் கொஞ்சமாய் வலி இருக்கிறது.நண்பர் ஒருவருக்கு கழுத்தில் வலிக்கிறதாம்.எப்படி இப்படி எஸ் ஆனோம் என்பதே ஆச்சரியமாய் இருக்கிறது.

 எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு ப்ரைவேட் பஸ்ஸை எதிரில் வந்த ஒரு லாரி மீடியன் தாண்டி நேராக இடித்து தள்ளி பஸ் ட்ரைவர் இறந்து விட மற்றவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருந்த போது தான் 15 வண்டிகளுக்கு பின்னாடியே சென்ற எங்கள் கார் இப்படி ஆனது. மாருதி ஸ்பீட் கண்ட்ரோல் செய்யமுடியாமல் எங்கள்  மீது மோதி விட்டது.

எருமை மாட்டினை இடிக்கும் போதே பயணத்தை ரத்து செய்திருக்கணுமோ.ஒரு பிராத்தனையும் இல்லாமல் திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்தது தான் காப்பாற்றியதோ,வீட்டு வேலைகளிலிருந்து எஸ் ஆக நினைத்து உலகத்தை விட்டே எஸ் ஆக பார்த்தேனே என்று ஏகமாய் குழப்பங்கள்.

Tuesday, October 16, 2012

ட்ரையின் குடும்பம்

ரொம்ப தூரம் ட்ரையினில் போனது சென்னையில் இருந்து அஸ்ஸாமில் இருக்கும் கெளஹாத்திக்கு.சென்னையில் வியாழக்கிழமை காலை 6.20 ற்கு ஏறி கல்கத்தா மறுநாள் வெள்ளி காலை 11 மணிக்கு போனது.அப்படியே நியூஜல்பைகுரி,காமாக்யா வழியாக சனிக்கிழமை காலை 6 மணிக்கு அஸ்ஸாம் தலைநகர் கெளஹாத்திக்கு போய் சேர்ந்தோம்.48 மணிநேரப் பயணம். அங்கிருந்து காரில் மேகாலயா தலைநகர் ஷில்லாங் போய் சேர்ந்தோம்.என் இரு மகன்களையும் ட்ரையினில் சீட்டில் பிடித்து உட்கார வைக்கவே பெரும்பாடு படணும்.ஏசியில் இருக்க பிடிக்காமல் இரண்டும் கேட் அருகிலேயே போய் அமர்ந்து கொள்ளும்.நைட் தான் ஒழுங்கா சீட்டிற்கு வரும்.நேரத்திற்கு சாப்பாடு,படிக்க புத்தகம்,பாட்டு கேட்க ஐ-பாட் வெளியில் வேடிக்கை என்று நாட்கள் போனதே தெரியவில்லை. போகும் போது கிருஷ்ணா,கோதாவரி,பிரம்மபுத்திரா என்று நிறைய தண்ணீருடன் கூடிய பெரிய ஆறுகள். அருணாசல்பிரதேஷில் திபுருகார் வரை ட்ரையின் போகிறது. (60 மணி நேரம்).
சென்னை - ஜம்முதாவி போனோம். (நேராக போனால் 55 மணிநேரம்) ஆனால் டில்லியில் ஒரு நாள் தங்கி அன்று இரவு ஜம்மு கிளம்பினோம். எனவே கெளஹாத்தி போனது தான் அதிக நேரம் ட்ரையினில் இருந்ததாக கணக்காகிறது.


ஒரு முறை ட்ரையினில் திண்டுக்கல்லிற்கு போகும் போது திருச்சிக்கு முன்பு டால்மியாபுரம் அருகில் காலை 4 மணிக்கு ட்ரையின் நின்றது.ஒரு மணிநேரம் ஆகியும் ட்ரையின் நகரவேயில்லை.எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு கூட்ஸ்  டிரெயில் ஆகி விட்டதாம்.விசாரித்ததில் எப்ப ட்ரையின் கிளம்பும் என்றே தெரியாது என்றார் ட்ரைவர். நான் என் குழந்தைகளுடன் ட்ரையினை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் நடந்து சென்று அங்கிருந்த ஒரு கிராமத்தில் தோட்டம்,கிணற்று மேட்டுடன் இருந்த ஒரு வீட்டில் பெர்மிஷன் கேட்டு எங்கள் குடும்பம் குளித்தே விட்டோம். என் கணவர் என்னை திரும்ப ட்ரையினில் விட்டு விட்டு அந்த கிராமத்தில் இருந்த ரிக்‌ஷாவில் ஏறி பக்கத்தில் இருந்த ஒரு ஊருக்கு போய் காலை சாப்பாடு,பசங்களுக்கு பால் எல்லாம் வாங்கி வந்தார்.மாலையில் திண்டுக்கல் போய் சேர்ந்தோம்.

 திருநெல்வேலியிலிருந்து திண்டுக்கல்லிற்கு பஸ்ஸில் வந்து கொண்டு இருந்த போது ராஜீவ் காந்தி இறந்த செய்தி.நைட் ஒரு மணிக்கு விருதுநகருக்கு 3 கி.மீ முன்னாடியே பஸ்கள் நிறுத்த பட்டன.நடந்தே விருது நகர் வந்து அங்கு கிடைத்த ஒரு பாடாதி ரூமில் தங்கி அடுத்த நாள் பஸ்கள் எதுவும் ஓடாததால் அங்கேயே இருந்தோம்.என் கணவர் ஸ்டேஷன் போய் அன்று மாலை முத்து நகர் எக்ஸ்பிரஸ் வருகிறது அதில் திண்டுக்கல் போய் விடலாம் என்று சொல்லவே அன்று ட்ரைனால் தான் தப்பித்தோம். இரவு திண்டுக்கல் வந்து நிம்மதியானோம்.

மங்களூரிலிருந்து கோவா வரை ட்ரையினில் இரண்டாவது வகுப்பில் பயணம் செய்ய வேண்டும். அவ்வளவு அருமையான கொங்கன் ரயில்வே பாதையாகும்.மிகப்பெரிய சுரங்கப்பாதைகளும்,ஆறுகளும்,பச்சை பசேலென்று எதை பார்ப்பது என திண்டாட வேண்டும்.

ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சால்மர் வரும் போது ஓர் இடத்தில் மெல்லிய சலித்தமாதிரியான மண் துகள்கள் ட்ரையின் எங்கும் பரவியது. வாயெல்லாம் மண்.அந்த இடம் போக்ரான். வாஜ்பாய் பிரதமராய் இருந்த போது அணுவெடிப்பு நிகழ்த்திய பாலைவன பகுதியாகும். ட்ரைன் போற வேகத்தில் அப்படி ட்ரையினே மண்.

 இப்பவும் சென்னையில் எங்கேனும் போக வேண்டும் என்றால் என் சாய்ஸ் எலக்ட்ரிக் ட்ரையின் தான். என் மகன் நகுல் அவனின் 10 வயது வரை பெரியவனாகி ஏசிகார் வாங்கி அதில் அமர்ந்து ரயில்வே கேட் அருகில் நிறுத்தி போற வர ட்ரைன்,குட்ஸ் வண்டிகளை பார்த்து கொண்டே இருப்பேன்மா என்பான்.அப்போது அவனுடைய மிக பெரிய ஆசை அது ஒன்று தான்.எங்கள் குடும்பமே ட்ரையினில் பயணிப்பதை மிக விரும்பும்.ட்ரையினில் ஏறியதும் side lower berth-க்கு இப்பவும் சண்டை போட்டு கொள்வோம்.என் கணவர் ரயில்வேயில் இருந்த போது ரிசர்வ் செய்ற போதே இரண்டு சைட் லோயர் கேட்டு வாங்கி வருவார்.என் சின்ன மகன் Rishi ட்ரையின் போகாத ஊருக்கு வரவே மாட்டான்.பஸ் என்றால் வரவில்லை என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லி விடுவான்.ரயில் போகும் ஊரில் தான் அவனுக்கு பெண் பார்க்கணும்.

ஒரு முறை தெரிந்த ட்ரைவர் ஒருவருடன் சேர்ந்து இரண்டும் அவர் கூடவே இஞ்சினில் 3 மணிநேரம் பயணம் செய்தார்கள்.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அடிக்கடி இப்படி ட்ரையின் பயணம் செய்வதற்கு காரணம் எங்களுக்கு டிக்கெட் ஃப்ரீ.
 

Friday, October 12, 2012

மாற்றான் (1811)



இப்போதைய தாய்லாந்தில் (சயாம் என்பது முந்தைய பெயர்) Chang and Eng Bunkers 1811--ல் ஒரு மீனவருக்கு   ஒட்டியே பிறந்தனர். 1843-ல் இரட்டை சகோதரிகளை மணம் செய்து கொண்டனர். சங்கிற்கு 10 குழந்தைகளும், எங்கிற்கு 11 குழந்தைகளும் பிறந்தனர். 1874 ஜனவரியில் நிமோனியா தாக்கிய சங் தூக்கத்திலேயே இறந்து விட மருத்துவர்கள் அவர் உடலை சங்கிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து பிரித்து விட முடிவு செய்தும் எங் அதற்கு ஒத்து கொள்ளாமல் 3 மணிநேரம் கழித்து இறந்து விட்டார்.

இன்றைய காலாமானால் மிக எளிதாக மருத்துவர்கள் இவர்களை உயிருடனே பிரித்து இருப்பார்கள். இறந்த இவர்களின் ஒரே லிவரை இன்றும் பென்சில்வேனியா மியூசியத்தில் வைத்து இருக்கிறார்கள். இவர்களுடைய 200 ஆவது பிறந்த நாளை போன வருடம் இவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் ஒன்று கூடி கொண்டாடி இருக்கிறார்கள்.




ஒட்டி பிறந்த இந்த இரட்டை சகோதரிகள் டோரி,லோரி போன செப்டம்பர் 14-ல் தங்கள் 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்கள்.
இப்படி பிறக்கும் இரட்டையர்களுக்கு சயாமிஸ் இரட்டையர்கள் என்று பெயர். லோரி Ten-pin பவுலர்.டோரி பாடகராம். தலை ஒட்டி பிறந்த இவர்களை பிரிக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.ஆனால் எல்லோருடைய  கணிப்பையும் மீறி 50 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்கள். டோரி தன் பெயரை ஜார்ஜ் என்று மாற்றி கொண்டார். சிறிய வயதிலிருந்து இவருக்கு ஆண் போல் இருக்க தான் பிடித்துள்ளதாம். இவரால் நடக்க முடியாது. வீல் சேரில் அமர்ந்துக் கொள்ள அதை மற்றவர் தள்ளிக் கொண்டே நடக்கிறார். இவர்கள் வசிப்பது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில்.லோரியின் உயரம் 5’1.ஜார்ஜின் உயரம் 4’4.
என்ன வாழ்க்கை.

ரிலீஸான முதல் மூன்று நாட்கள் இனிமேல் எந்த தமிழ் படமும் பார்க்க கூடாது என்று சகுனி முதல் நாள் பார்த்து விட்டு சபதம் போட்டு இருக்கிறேன். என் மகன் நகுல் காலை 8 மணிஷோவிற்கு போய்விட்டு அப்படியே ஆஃபிஸ் போய் இருக்கிறான்.அவன் நல்லாயிருக்குன்னு சொன்னா, இன்னும் ப்ளாக்கர்ஸ் சொன்னா மட்டுமே மாற்றான் படம் பார்க்கும் எண்ணம். அது வரை உண்மையான மாற்றான்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Thursday, September 27, 2012

வெரைட்டி (2012 செப்டம்பர்)

விமானத்தில் பயணம் செய்து  கொண்டு இருக்கும் போது குழந்தை பிறந்தால் பிறப்பு சான்றிதழில் பிறந்த இடம் என்ன போடுவது? 30,000 அடி உயரம் என்றா? குழந்தையின் சிட்டிசன்ஷிப்? இதற்கு தீர்வாக UNO பறந்து கொண்டிருக்கும் ஃப்ளைட் எந்த நாட்டுடையதோ அந்த நாட்டின் பெயரை குழந்தையின் சிட்டிசன்ஷிப்பாக குறிப்பிட சொல்கிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது பணிபெண்களுக்கு பிரசவம் பார்க்க ட்ரையினிங்கே கொடுத்து வருகிறதாம். ஏனெனில் வருடம் ஒரு முறை அவர்களின் ஃப்ளைட்டில் பிரசவம் நடக்கிறதாம். இந்த குழந்தைகளுக்கு பிறக்கும் போதே அவசரம் தான்.அப்பெல்லாம் அம்மாக்கள்,பாட்டிகள் வீட்டிலேயே இந்த ரூமில் அவன் பிறந்தான், அந்த ரூமில் இவன் பிறந்தான் என்று காண்பிப்பார்கள்.

அமெரிக்காவில் தன் அப்பாவையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறார் வலாரி என்ற 60 வயது பெண். கணவர் இறந்த பிறகே அவருக்கு இந்த உண்மை தெரிந்து உள்ளது. என்ன கொடுமை இது.


"Feeling cool. Today Dumped My ex-girlfriend.Happy independence Day" அப்படிங்கிற தன் காதலனின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு  ஜார்கண்ட்டை சேர்ந்த பெங்களூரு ஐ.ஐ.எம்மில் படித்த மாலினி என்ற பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.ஸ்டேட்டஸ் போட்ட அறிவாளி ரூர்க்கி ஐ.ஐ.டி மாணவராம்.என்ன படிச்சு என்ன யூஸ்?

புரூனே சுல்தானின் பெண் கல்யாணம் செப்டம்பர் 22-ல் நடந்ததாய் பேப்பரில் படித்தேன்.சரி நகை விற்கிற விலையிலே 11 குழந்தைகளை பெற்ற சுல்தான் நகை நட்டுன்னு தன் பெண்ணிற்கு என்ன போட்டார்னு கொஞ்சம் நெட்ல ஆராய்ந்ததில் இந்த சுல்தானுக்கு சுக்கிரன் செம உச்சம். நம்ம திருப்பதி வெங்கியையே முந்திடுவார் போல இந்த புரூனே நாட்டு சுல்தான்.அந்த நாட்டில் 167,000 பேரல் ஆயில் ஒரு நாளைக்கு எடுக்கப்படுகிறதாம்.மலாய் மொழியும்,இஸ்லாமும் தான் பெரும்பான்மையினரின் மொழியாக,மதமாகவும் உள்ளது. அங்கு அரசு ஆஸ்பத்திரியில்  கிடைக்காத ட்ரீட்மெண்டிற்கு மக்களை மேல் நாடுகளுக்கு அரசே தன் செலவில் அனுப்பி வைக்குமாம். அங்கு இரண்டு பேர்களுக்கு ஒரு கார் இருக்குதாம். இருக்காதா பின்ன பெட்ரோல் இப்படி சல்லிசா கிடைச்சா?சுல்தானின் அரண்மனையில் 1788 அறைகளாம்.சுல்தான் 3000 கார்கள் வைத்திருக்கிறாராம்.சரி சரி சொர்க்கமே என்றாலும் அது நம்மை ஊரை போல வருமா?



Thursday, September 20, 2012

ஓ இது தான் ஹார்ட் அட்டாக்கா?

 போன வியாழக்கிழமை(13/09)வழக்கம் போல நான் காலை 6.30க்கு எழுந்து வரும் போது அம்மா விஜய் டிவி பார்த்துக் கொண்டே (அந்த டைமில் டீ கையில் இருக்கும்) நிறைய வெள்ளை பூண்டினை உரித்து கொண்டு இருந்தார்கள். சமையலுக்கு இப்பவே உரிக்கிறார்கள் போல என்று என்னம்மா இவ்ளோ பூண்டு காலங்காத்தால என்றதும் உடம்பு ரொம்ப வலிக்குதும்மா காலையில் பூண்டு சட்னியும், மதியத்திற்கு மிளகு குழம்பும் செய்யலாம் என்றார்கள்.

ஓகே என்று சொல்லிட்டு பேப்பர் படிச்சுட்டு,காஃபி குடிச்சிட்டு கிச்சனுக்கு போனேன். காயெல்லாம் கட் செய்துட்டு,மிக்சி போட்டுட்டு அம்மா குழம்பு வைக்க வாங்க என்றதும் அம்மா கிச்சனுக்கு வந்து மிளகு குழம்பு செய்தார்கள். கோஸ் தாளித்துக் கொண்டு இருக்கும் போது ரொம்ப வேர்க்கிறது கொஞ்ச நேரம் ஃபேனில் உட்கார்ந்துட்டு வரேன்மா என்று அவர்களின் ரூமிற்கு போனார்கள். போனவர்கள் இரண்டே நிமிடத்தில் வெளியில் வந்து மூர்த்தி எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு என்று என் கணவரிடத்தில் சொல்லவும் நான் உடனே அடுப்பை ஆஃப் செய்துட்டு ஓடி போய் அப்படியே சேரில் உட்கார வைக்க தொடுகிறேன் அப்படி வேர்த்து போய் இருந்தார்கள்.வாந்தி வர மாதிரி இருக்கு.நெஞ்சும் வலிக்குது என்று சொல்லவும் உடனே அடுத்த 20 நிமிடத்தில் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டோம்.

உடல் மொத்தமும் வேர்த்து போய் கையெல்லாம் சில்லென்று இருந்தார்கள். எமர்ஜென்சியில் உடனே ட்ரிப் ஏற்றி,பி.பி.இசிஜி பார்த்து கொண்டே இருக்கும் போது கார்டியாலஜிஸ்ட் வந்து உடனே ஆஞ்சியோகிராம் செய்ய அழைத்து போய்,அடைப்பு இருக்கிறது என்று ஆஞ்சியோ ப்ளாஸ்டியும் செய்து மேஜராய் அடைப்பிருந்த இடத்தில் ஸ்டெண்ட் பொறுத்தி விட்டார்கள். அரை மணிநேரத்தில் அம்மாவிற்கு மிக சுறுசுறுபாய் அனைத்தும் செய்து விட்டு டாக்டர் எங்களை அழைத்து அவர்கள் செய்த ப்ரொசீஜரை கம்ப்யூட்டரில் என்ன செய்தோம் என்று அருமையாக விளக்கினார்.

மூன்று நாட்கள் ஐ.சி.யூ வாசம்,மூன்று நாட்கள் ரூமில் இருந்து செவ்வாய் இரவு வீட்டிற்கு வந்து விட்டோம். ஹாஸ்பிட்டலில் தெரிந்து கொண்டது ஹார்ட் அட்டாக் வருவது ஒருவரது குடும்பத்து சொத்தல்ல அது யாருக்கு வேண்டுமானாலும் வரும் நமது தேசத்து சொத்து என்று.மிக சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போனதால் காப்பாற்றி விட்டோம். அம்மாவிற்கு பி.பி கடந்த 15 வருடங்களாக உண்டு அதற்கு மருந்தும் எடுத்து கொள்கிறார்கள்.  சுறுசுறுப்பான அம்மா இப்ப படுக்க முடியாமல் தவிக்கிறார்கள். பத்ராசலம்,பண்டரிபுரம்,துவாரகா,இன்னொரு முறை காசி இவை அவர்கள் போக நினைத்த லிஸ்டில் பாக்கி இருக்கும் ஊர்கள். கட்டாயம் போய் வருவோம் என்ற நம்பிக்கையில்

Tuesday, September 11, 2012

பெண்களும் அரசியலும்

இன்றைய அரசியல் தானே நாளைய வரலாறு. பெண் என ஒதுங்காமல் தைரியமாய் அரசியிலில் ஈடுபடுகிறார்களே என்று அரசியலில் இருக்கும் ஜெயலலிதா,சுஸ்மா,ஜெயந்தி நடராஜன்,மம்தா பேனர்ஜி போன்றவர்கள் மீது மரியாதை உண்டு.நாமும் அரசியிலில் ஏதாவது பங்கெடுக்கலாமா என்ற எண்ணம் கூட உண்டு.

 வட்டம்,கட்டம்,சதுரம்,கவுன்சிலர்,மேயர் அப்படி இப்படி என்று எதாவது ஆகலாமா? என்ற ஆசை கூட உண்டு. விமர்சனங்கள்,அடாவடிகள்,பணப்பற்றாக்குறை,குடும்ப முன்னேற்றம் என ஆயிரத்தெட்டு காரணங்களுக்கு பயந்து கொண்டு அரசியல் எண்ணத்தினை செயல் படுத்த முயலவில்லை.நான் கொஞ்சம் அழுமூஞ்சி வேறு எனவே இந்த பழம் புளிக்கும் என்றும் பாவம் அரசியல் பிழைத்து கொள்ளட்டும் என்றும், சரியாக கத்தியோ, அரிவாளோ பிடிக்க தெரியாது என்றும்,ஒழுங்கா ஒரு லட்சத்தை லட்சணமா எண்ண கூட தெரியாது என்றும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. ஓட்டு மட்டும் கட்டாயம் போட்டு விடுவேன். 

இலங்கை வெளியிட்டு இருக்கும் அந்த கார்ட்டூனை பார்த்து விட்டு அந்த பத்திரிக்கையில் பணிபுரிபவர்களில் பெண்களே கிடையாதா? என்றே தோன்றியது.

முதல்வரின் தைரியம் எப்பவுமே பாராட்டுக்குரியது.இங்கே,அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை,அவர்களின் குணநலன்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. அந்த கார்ட்டூனை வெளியிட்டு இருக்கும் நம் பதிவுலக சகோதரர்கள் அனைவரும் அதை எடுத்து விடுங்கள். கார்ட்டூன் என்றால் சிந்தனையுடன் சிரிப்பும் வர வேண்டும். இது ஒரு வக்கிரம் பிடித்தவனின் வக்கிரமான வெளிப்பாடு. அதை வெளியிட்டு நம் பதிவின் தரத்தினை குறைத்து கொள்ள வேண்டாம். இதனை அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் எதிர்த்து குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும். பதிவுலகில் நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

Friday, September 07, 2012

திருமணத்தை சொதப்புவது எப்பூடி?


என் கணவரின் அண்ணா 5 வருடங்களுக்கு முன் அவரது 50 ஆவது வயதில் இறந்து விட்டார்.அவருக்கு ஒரே பெண். என் கணவர் அவரின் அண்ணா இல்லாததால் திருமணத்தினை இங்கே சென்னையில் நடத்தலாம் என்றார். திருமணம் ஆகஸ்ட் 20-ல் செய்யலாம் என மாப்பிள்ளை வீட்டாரும் கூறவே அந்த தேதியும் முடிவானது. புதியதாக கட்டப்பட்ட எங்கள் வீட்டிற்கு 18 ஆம் தேதி காலையில் இருந்தே சொந்தங்கள் வர ஆரம்பித்தனர்.

சமையல் செய்ய எங்கள் தூரத்து சொந்தக்காரர் நாகலெஷ்மியும் அவரின் அம்மா ஜெயாம்மாவும் 17 ஆம் தேதியில் திண்டுக்கல்லிலிருந்து வைகையில் சென்னை வந்தனர். சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய் என்று நான்கு நாட்களும் வீட்டில் 35லிருந்து 40 ஆட்கள் வரை தங்கியிருந்தோம். அந்த கால திருமணம் போல சொந்தக்காரர்கள் ஒரே வீட்டில் தங்கி இருந்து திருமணம் செய்தது பெண்ணின் அப்பா இல்லாத குறையினை போக்கியது. திருமணத்திற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு ECR-ல் உள்ள IG RESORT -ற்கு இரு வேன்கள்,மூன்று கார்களில் சொந்தங்கள் கிளம்பினார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மதியமே ரிசார்டிற்கு வந்து விட்டார்கள். இரவு நிச்சயதார்த்தம் முடித்து ரிசார்ட்டில் அருமையான டின்னர்.

மறுநாள் காலை  அங்கிருந்த நீச்சல் குளத்தில் ஆண்களும், குழந்தைகளும் இஷ்டம் போல ஆட்டம் போட்டனர்.


காலை உணவு முடித்து திருவிடந்தை கோயில் அருகில் இருக்கும் சின்ன திருமண மண்டபத்தில் ”வைத்து” (நான் திநெவேலி ஆக்கும்) திருமணம் முடித்தோம்.
இங்கே ஒரு சின்ன 
திருவிடந்தை கோயிலில்  திருமண தேதி பற்றியும், திருமணத்திற்கு என்ன நடைமுறை என்பது பற்றியும் விசாரிக்க, போன மாத தொடக்கத்தில் 2 முறை போனேன். திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பு தான் அப்ளிகேஷன் கொடுப்போம் அதை நிரப்பி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்( Gazetted officer)  கையெழுத்து வாங்கி திருமணத்திற்கு 5 நாட்கள் முன்பு கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்று மற்ற விபரங்கள் எதுவும் கூறாமல் அங்கிருந்த பெண் அலுவலர் ஏறக்குறைய விரட்டியே விட்டார்.அவர் காலை மடக்கி சம்மணம் போட்டு சேரில் ரெஸ்ட்டாக அமர்ந்து ஃபேன் சூப்பர் ஸ்பீடில் சுத்த யாரோ ஒருவருடன் அலுவலக ஃபோனில் பேசி கொண்டிருந்த போது இதை விசாரிக்க போனது எனது தப்பு.பெண்ணும், பையனும் வெளியூர் எனவே கொஞ்சம் முன்னாடி அப்ளிகேஷன் கொடுக்க கூடாதா என்று ”பயந்து” கொண்டே கேட்டதற்கு இங்கே  பெங்களூர், ஹைதையில் இருந்தெல்லாம் வந்து திருமணம் செய்கிறார்கள் அவர்களுக்கே 10 நாட்கள் முன்னாடி தான் எல்லாம் என்று சொல்லி அப்பவும் அந்த ஃபோனை என் மீதான கோபத்தில் கூட கீழே வைக்கவில்லை அந்த புண்ணியவதி.

சரி என்று  திருவிடந்தை கோயிலில் திருமணம் என்று பத்திரிக்கை அடித்து எல்லாருக்கும் கொடுத்தாச்சு. திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பாக எங்கள் வீட்டிற்கு திருமண பத்திரிக்கை வைக்க வந்த கல்யாண பெண் அவர் அம்மாவுடன்  அப்ளிகேஷன் வாங்க கோயில் ஆஃபிசிற்கு சென்ற போது தான் அந்த கோயிலில் காலை 6- 7.30 மணி முகூர்த்தம் மட்டுமே திருமணம் செய்ய அனுமதி என்று தெரிந்தது. அட தேவுடா இது என்ன கொடுமை என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் கோயில் கூறும் முகூர்த்தத்தில் திருமணம் ”வைத்து” கொள்ளலாமா என்று கேட்டால்.அவர்கள் நீங்கள் ஏன் முதலிலேயே முகூர்த்த நேரம் பற்றி

விசாரிக்கவில்லை, சாரிக்கவில்லை,ரிக்கவில்லை,வில்லை,லை என்று  கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டார்கள். (பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் அவர்களுக்கு வேணுமாம்.)

சரி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே கோயில் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன மண்டபத்தினை பிடித்து உடனே பணத்தினை கொடுத்து புக் செய்து கொண்டோம். உடனே மண்டப அலங்காரம்,ஐயர்,மேளம் என்று அனைவரையும் பிடித்து அட்வான்ஸ் கொடுத்து விட்டோம்.

எனவே,9-10.30 என குறித்த நேரத்திலேயே மண்டபத்திலே கல்யாணம் முடித்து திருவிடந்தை கோயிலிற்கு பெண் மாப்பிள்ளையினை சாமி கும்பிட அனுப்பி வைத்தோம். திரும்ப ரிசார்ட்டிற்கு வந்து மதிய சாப்பாடும் (அது முக்கியம் இல்லையா) சாப்பிட்டோம்.கோயில்,ரிசார்ட் தூரம் 5 கி.மீ. திங்கள் மாலை 4 மணியளவில் என் வீட்டிற்கு இப்போது மாப்பிள்ளை வீட்டார் சிலரும் சேர்ந்து வந்தோம்.

சொதப்பல்கள்:

1.திருமண நாளை மட்டும் குறிப்பிட்டு பத்திரிக்கை அடியுங்கள் என்று கரடியாய் கத்தியும் முதல் நாள் இரவு நிச்சயதார்த்தம் என்று பெண்ணின் தாய் ரிசார்ட் பெயரை பத்திரிக்கையில் அடித்து விட்டார். முதலிலேயே இது பற்றி டிஸ்கஸ் செய்யவில்லை. அவரின் சென்னை சொந்தங்கள் அந்த ரிசார்ட்டிற்கு முதல் நாள் இரவு வந்து விட்டார்கள்.அந்த ரிசார்ட் மெயின் ரோடில் இல்லை. எனவே, அங்கு இரவில் வந்த கார்களுக்கு என் தம்பிகள் வழி சொல்லியே நொந்து விட்டார்கள். வந்தவரில் ஒரு பெரியவர் யாருப்பா இந்த ரிசார்ட் ஐடியா கொடுத்தது என்று மிகவும் திட்டி இருக்கிறார்.இருட்டில் வழி தெரியாமல் அலைந்த எரிச்சல். என் தம்பி ஆமாம் சார் நானும் இங்கே வர ரொம்ப கஷ்டப்பட்டேன் யாரோட ஐடியாவோ தெரியலை என்று எனக்கு அவரோடு சேர்ந்து அர்ச்சனை செய்தானாம்.பிறகு சிரித்து கொண்டே என்னிடம் வந்து சொன்னான்.எக்ஸ்ட்ராவா வந்தவர்களுக்கும் சாப்பாடு போட்டு ரிசார்ட் மேனேஜர் எங்களை டேமேஜ் ஆக்காமல் மேனேஜ் செய்து விட்டார்.

2. பத்திரிக்கை அடிக்கும் முன் பெண்ணின் அம்மாவிடமும்,கோயில் பெண்ணிடமும் டிஸ்கஸ் செய்யாததால் கடைசி நேர டென்ஷன் ஆஃப் பல்லாவரம் ஆனேன். முருகன்,சிவன் கோயில்களில் காலை எந்நேரமும் முகூர்த்தம் இருக்கும். பெருமாள் கோயிலில் அப்படி இல்லை என்று தெரிந்து கொண்டோம்.

3. முன்று நாட்களும் பகல், இரவு  என கிட்டத்தட்ட 12 ஃபேன்கள் என் வீட்டில் ஓடியதாலும், மதிய நேரங்களில் முழுவதும் ஒரு ஏ.சி ஓடியதாலும் சிங்கிள் ஃபேஸ் மட்டுமே இருக்கும் என் வீட்டில் திருமணத்தன்று நடுராத்திரி 2 மணியளவில் கரண்ட் போய் விட்டது.

4.மறுநாள் காலை 5 மணிக்கு என் மாமா மகன் கயிற்றில் வாளியினை கட்டி சம்ப்பிலிந்து தண்ணீர் கிணத்தில் இறைப்பது போல இறைத்து இரண்டு பெரிய ட்ரம்களில் என் உதவியுடன் நிரப்பினான். நான் தான் கயிறும்,வாளியும் எடுத்து கொடுத்தேனாக்கும்.மேலே டேங்கில் இருந்த தண்ணீரை டாய்லெட்டிற்கு மட்டும் யூஸ் செய்யுமாறு வந்திருந்த மக்களுக்கு ரூம்,ரூமாக என் கையெத்துடன் சர்க்குலர் அனுப்பினோம்.

5. பக்கத்து வீட்டிற்கு மிக்சியுடன் சென்று தேங்காய்,தக்காளி சட்னி செய்தோம். கல்யாணத்தில் சட்னி இல்லை என்று யாரும் குறை சொல்லிட கூடாது இல்லையா.  மதிய சமையலுக்கு தேங்காய் போட்டு வைத்து கொண்டோம்.காலையில் ரவா புட்டு,இட்லி,தோசை,இரண்டு வகை சட்னி+ சாம்பார். உளுந்த வடை கேன்சலானது அனைவருக்கும் வருத்தமாயிருந்தது. இந்த கடங்கார கரண்ட்டால் வடை போச்சே....
10 மணியளவில் எலக்ட்ரீஷியன் வந்தார். மெயின் ஃபோர்டில் ஒரு வயர் நன்கு எரிந்து போய் இருந்ததை இரண்டே நிமிடத்தில் மாற்றி கொடுத்து காலை டிஃபன் திருப்தியாய் சாப்பிட்டு சென்றார்.

6.இந்த திருமண வைபவத்தால் கஷ்டப்பட்டது சத்தியமாய் நான் இல்லை. வந்திருந்தவர்களை பார்த்து மிரண்டு கஷ்டப்பட்டது ரீனாவும், ரியோவும் தான். பாவம் எப்பவும் வெராண்டாவில் கட்டுண்டு கிடந்தார்கள்.

7.மாலை ஆர்டர் கொடுத்த தாம்பரம் பூக்கடைக்கு ஞாயிறு காலையிலிருந்தே மூன்று முறை ஃபோன் செய்தேன். ஆமாம்மா.”மாலைக்கு, மாலை” 4.30 க்கு வந்திடுங்கள் என்று சொன்னார். அதை நம்பி காரில் தாம்பரம் பாலத்தடியில் இருக்கும் பூக்கடைக்கு என் மகனுடன் போனால்  அப்போது தான் ஒரு கூட்டமே திருமண மாலையினை தள்ளாடியவாறே கட்டி கொண்டு இருக்கிறார்கள். ஒரு மணி நேரம் எங்களை காக்க வைத்து பிறகு மாலையினை கொடுத்தார்.இனிமேல் நானே மாலை கட்டி கொள்வேன்.அவ்வ் ஒரு மணிநேரத்தில் அவர்களின் தொழில் சீக்ரெட்டை கத்துக் கொண்டேன். இவ்ளோ சம்பாதித்தும் அனைத்தையும் டாஸ்மார்க்கிற்கே கொடுப்பார்கள் போல. கன்னா,பின்னாவென்று குடிகாரா மாலைக்காரருடன் குடிக்காத நான் சண்டை போட்டேன்.


திருமணத்திற்கு பிறகு:

என்னருமை மகன்கள் அடித்த கமெண்ட்: ஏம்மா, நம் வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் மனுஷங்க தானே.ஊரில இருந்து தானே வந்தாங்க. மார்ஸிலே இருந்து வரலையே.எதற்கு இவ்ளோ டென்ஷன்,இவ்ளோ காம்ப்ளிகேஷன்? என்று சிறிதும் அலட்டிக்காமல் கேட்டார்கள்.இருவரும்,முக புத்தகம்,செல்ஃபோன் என எதையும் இந்த 4 நாட்களில் மிஸ் செய்யவில்லை.

நாங்கள் எடுத்த முடிவு:  நானும், என் கணவரும் இந்த இரு மகன்களும் அவுங்க கல்யாணம் எங்கே என்று எங்களிடம் சொல்லிட்டு செஞ்சாங்கன்னா???? அங்கே நேரே போய் அட்டெண்ட் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம்.

நன்றி: IG ரிசார்ட்டின் மானேஜர் மிக குறைந்த வாடகை வாங்கி கொண்டு நீங்கள் அட்ஜஸ்ட் செய்தால் எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம் என்ற அனுமதி கொடுத்தார். இரவு கூட்டம் அதிகம் வந்த போதும் சாப்பாட்டிற்கு திண்டாட்டம் இல்லாமல் செய்தார்.

நீதி: சமையல் செய்ய வந்த ஜெயாம்மா ஆகஸ்ட் 31 திடீரென்று மாரடைப்பால் திண்டுக்கல்லில் இறந்து விட்டார். வயது 65.இங்கே 10 நாட்கள் முன்பு சுறுசுறுப்பாக எங்கள் வீட்டில் வேலை செய்த அந்த ஜீவன் இன்று இல்லை என்பதை நினைக்கவே முடியவில்லை. யாருக்கும் எதுவும் எப்பவும் நடக்கலாம்.

எனக்கு கிடைத்த பல்பு:

இந்த கல்யாணம் காதல் கல்யாணமாம்.அதை பெண்ணோ, அவளின் அம்மாவோ கடைசி வரை என்னிடம் கூறவில்லை.

 காதல் சொதப்பவில்லை.கல்யாணம் தான் கொஞ்சம் சொதப்பி கடைசியில் சூப்பரா நடந்துடுச்சு.

அட போங்கப்பா எங்கே இருந்தாலும் நல்லாயிருங்க.

அடுத்து யாருக்காவது திருமணம் நடத்தி வைக்க வேண்டுமா? என்னை அணுகவும்.

இப்படிக்கு வெட்டிங் ப்ளானர்

Monday, September 03, 2012

150 குழந்தைகள்

சிந்தியா 7 வருடங்களுக்கு முன்பு ஸ்பெர்ம் டொனேஷன் மூலம் அம்மாவானார்.நெட்டில் யார் யாரெல்லாம் தான் ஸ்பெர்ம் பெற்றவர் மூலம் தாயானார்கள் என்று தேடி ஒரு க்ரூப் ஒன்று ஏற்படுத்தினார்.தன் மகனுக்கு யார் யாரெல்லாம் பிரதர்ஸ்,சிஸ்டர்ஸ் என்று பார்த்தால் 150 பேர் அகப்பட்டனர்.

ஒரு மனிதரின் ஸ்பர்ம் டொனேஷன் மூலமாக 150 பெண்கள் அம்மாவானவர்கள்.அதாவது 150 பேருக்கும் ஒரே அப்பா.இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இந்த 150 பேருக்கும் தகவல் பரிமாற்றம் இல்லையெனில், திடீரென்று ஒரு நாள் யாரோ இருவர் சந்திக்கும் போது வேறு மாதிரியான உறவு ஏற்பட்ட்டால் அது சமுதாயத்தினை பெருமளவில் பாதிக்கும். அந்த அப்பாவிற்கு இருக்கும் நோய் அனைத்து 150 குழந்தைகளுக்கு வர சான்ஸ் உள்ளது.

வருடத்திற்கு 50,000 குழந்தைகள் இப்படி டோனர் ஸ்பெர்ம் மூலம் அமெரிக்காவில் பிறக்கிறதாம்.அப்படி பிறக்கும் குழந்தைகள் பற்றிய விபரங்கள் இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்கின்றனர்.

கெளரவர்கள் 100 பேர் பொய் இல்லை என்றே தோன்றுகிறது. நம் புராணங்கள் நிஜமோ என்று தோன்றுகிறது. என்ன இருந்தாலும் இந்தியா ரொம்ப முன்னோடி தான்.

தகவல்கள் கிடைத்த தளங்கள்


Thursday, August 02, 2012

அவள் விகடனில் அமுதா அடடா !!!

14/ஆகஸ்டு/2012 அவள் விகடன் இதழில் நெட் டாக்ஸ் என்ற பிரிவில் இந்த இதழின் வலைப்பூவரசியாக தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.நானும் ரவுடி தான்..ரவுடி தான்..ரவுடி தான்..

ஜூலை 31-ல் இந்த நியூசை முதலில் தெரிவித்த ஹூஸைனம்மாவிற்கு நன்றிகள்.அன்று என் மகனின் பிறந்த நாள்.எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.இது சம்பந்தமாக என் மெயிலிற்கு வந்து குவிந்திருக்கும் வாசக கடிதங்களுக்கு (நிஜம்மாஆ) பதில் எழுதும் வேலை இருப்பதால் அடுத்த பதிவில் சந்திப்போம்.

Wednesday, July 25, 2012

வெரைட்டி (ஜூலை 2012)

தெரிந்த பெண்ணின் ஒரு மாத பெண் குழந்தையினை பார்க்க போனோம்.ஓடி விளையாடி கொண்டிருந்த 3 வயது மூத்த ஆண் குழந்தையினை பற்றி பேசி கொண்டு இருந்தோம். ஸ்கூல் அட்மிஷன் சாருக்கு வாங்கியாச்சா என்று கேட்டேன். பாப்பாக்கு அட்மிஷன் கிடைச்சிருச்சு. பையனுக்கு தான் ஜூனில் திரும்ப வர சொல்லி இருக்கிறார்கள் என்றார்.நான் ஜெர்க்காகி இப்போதானா ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தீங்க என்று மனசுக்குள் நினைத்து கொண்டே என்னது பாப்பாக்கு அட்மிஷனாஆஆஆஆஆ??

 பையனுக்கு ஸ்கூல் அட்மிஷனிற்கு 2012 ஜனவரியில் சிஷ்யா (அடையாறு) போனார்களாம். யாராவது சேராமல் இருந்தால் ஜூனில் பையனுக்கு அட்மிஷன் தரோம். இப்போ உங்க வயிற்றில் இருந்த குழந்தைக்கு வேணா அட்மிஷன் தரோம் என்று சொல்லி இருக்கிறார்கள். வயிற்றில் இருந்த குழந்தைக்கு 2015 ஜூனில் ஸ்கூல் சேர்க்க அட்மிஷன் வாங்கி வந்து இருக்காங்க. அட தேவுடா!! ஃபீஸெல்லாம் வாங்கலையாம். பிழைக்க தெரியாத ஸ்கூல் நிர்வாகமோ?? 1000 ரூபாய் மட்டும் கட்டி விட்டு ஃபோன் நம்பர் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து வந்தார்களாம்.

இளையராஜா பொண்டாட்டி தேவை என்ற பார்த்திபன் படத்திற்கு போட்ட பாடல் தான் வசந்த் கேளடி கண்மணி என்ற படத்தில் இடம் பெற்ற ”நீ பாதி நான் பாதி கண்ணே”என்ற பாடலாம். வசந்த் மிக அருமையாக படமாக்கி இருப்பார்.இளையராஜாவின் NOthing But Wind என்ற இசைத்தொகுப்பிற்காக போடப் பட்ட மியூசிக் தான் ”வளையோசை கலகலவென” என்ற கமலின் சத்யா படப்பாடலாம். ரேடியோ மிர்ச்சியில் செந்தில் சொன்ன நியூஸ் இது. இன்னும் நிறைய பாடல்கள் பற்றி சொன்னார். மறந்துடுச்சு.

 கரூரில் பெட்ஷீட்,தலையணை உறை என்று இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எனக்கும் என் சொந்தக்களுக்கும் வாங்கி அங்கிருந்தே லாரியில் பார்சல் போட்டு விட்டு வந்து விடுவேன். வீட்டில் அனைவரும் வந்து பங்கிட்டு பிரித்து கொள்வோம். எப்பவும் இல்லாத அளவில் இந்த முறை அங்கே விலையேற்றம்.

போன மாதம் தன் இஞ்சினியரிங் படிப்பை முடித்த என் ஃப்ரெண்ட் ஜெயாவின் பெண் வைஷ்ணவி ஏர் ஃபோர்சில் பைலட் வேலைக்கு தேர்வாகி உள்ளார். 5000 பேர் சென்னையில் எழுதிய தேர்வில் 300 பேர் செலக்ட் செய்யப்பட்டு மைசூர் அழைக்கப்பட்டு, முதல் நாளில் 300 பேர் 30 நபர்களாகி அடுத்த 5 நாட்களில் அது 7 நபர்களாக ஆஃபிசர் ரேங்கிற்கு குறைக்க பட்டு...கடைசி நாளில் அந்த 7 பேரில் 3 பேர் மட்டும் பைலட் வேலைக்கு தேர்ச்சி பெற்று உள்ளார்கள். ஹைதையில் ஒன்றரை வருடம் பயிற்சி. பெண்ணின் தந்தை ஆர்மியில் COLONEL ரேங்கில் இருக்கிறார்.

Monday, July 02, 2012

தயிருக்கு லீவ் லெட்டர்..


விஷால்  சாப்பிட தயிர் சாதம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவான்.தயிர் சாப்பிட்டால் அவனுக்கு வாந்தி வரும்.எனவே,சின்னதில் இருந்தே அதற்காக கட்டாய படுத்தவில்லை.தயிரின் வாசமே அவனுக்கு பிடிக்காது.போன வருடம்  பஸ்ஸில் வரும் மிஸ் கிட்ட  தயிர் அவனுக்கு ஆகாது எனவே ஸ்கூலில் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.எனவே, தயிர் பற்றி ஒன்றும் அவனிடம் கேட்பது இல்லை.விடுமுறை நாட்களில் வீட்டிலும் தயிர் சாப்பிடுவதில்லை.

இந்த வருடம் ஸ்கூல் போக ஆரம்பித்ததில் இருந்து மதியம் தயிர் சாதம் இவனுக்கும் தருவார்கள் போல.தர வேண்டாம் என ஸ்கூல் பஸ்ஸில் வரும் டீச்சரிடம் சொன்ன போது விஷாலுக்கு தயிர் அலர்ஜி என்று ஒரு லெட்டர் எழுதி தர சொன்னார்கள்.நானும் லெட்டர் கொடுக்க மறந்து மறந்து போனேன். வெள்ளியன்று ஸ்கூலில் இருந்து வந்ததும் விஷால் கேட்டது..மம்மி நீங்க எப்ப கர்ட் ரைஸிற்கு லீவ் லெட்டர் எழுதி தர போறீங்க??? ஆஹா தயிருக்கு லீவ் லெட்டரா? எப்படி எழுதுவது.ஹெல்ப் ப்ளீஸ்.



Wednesday, June 20, 2012

வீடு மாத்திக்கலாமா

டைட்டானிக் பொண்ணு நடிச்ச படம்னா ஆவென்று படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன். அப்படி சமீபத்தில் HBO-வில் உட்கார்ந்த படம் தான் THE HOLIDAY. காதலில் தோற்று போன இரண்டு பெண்கள் தங்கள் வீட்டினை ஹாலிடேயில் தங்குவதற்காக எக்சேஞ்ச் செய்து கொள்கிறார்கள். டைட்டானிக் பொண்ணு KateWinslet(ஐரிஷ்) Cameron Diaz (அமெண்டா) இருவரும் ஒரு நாள் வாழ்க்கையே வெறுத்து போய் Home exchange website -ல் சந்தித்து கொள்கிறார்கள். ஐரிஷ் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் அமெண்டாவின் மிக பெரிய வீட்டிற்கும், அமெண்டா ஐரிஷின் இங்கிலாந்தின் குளிர் பிரதேசத்தில் இருக்கும் ஒரு சிறிய வீட்டிற்கும் ஹாலிடேவிற்கு ஷிஃப்ட் ஆகிறார்கள். மனம் வெறுத்த நிலையில் இருக்கும் இருவருக்கும் ரொமான்ஸ் தேவை படுகிறது. அமெண்டாவிற்கு ஐரிஷின் சகோதரரருடனும், ஐரிஷிற்கு அமெண்டாவின் பக்கத்து வீட்டு பையனுடனும் ரொமான்ஸ் ஆகிறது. இங்கு நான் சொல்ல வந்தது அதை பற்றி அல்ல!!! Home Exchage என்று நிஜமாவே ஒரு வெப்சைட் இருக்கிறதா என்று பார்த்ததில் ஆஹா இருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு ப்ளாக்இருக்கிறது.

சரி இந்தியாவில் இருக்கிறதா என்று பார்த்ததில் அடடா இருக்குதே..

நாமும் காஷ்மீர்,கோவா,ஷில்லாங்,கேரளா போன்ற இன்னும் பிற இடங்களுக்கு லீவில் வீட்டை மாத்திக் கொண்டு போனால் ஆஹா நல்லாதான் இருக்கும். ஆனால், நான் இருக்கும் சென்னைக்கு யார் அப்படி விரும்பி வீடு மாத்தி வர போகிறார்கள்.இவையெல்லாம் படத்தில் மட்டுமே சாத்தியம் இல்லையா???


Wednesday, June 06, 2012

வெரைட்டி - 2012 (ஜூன்)

எங்களுக்கு தெரிந்த பெண் டூவீலரில் சோழிங்கநல்லூரிலிருந்து நாவலூர் போய் கொண்டு இருந்த போது சோழிங்க நல்லூர் தாண்டியதும் இருவர் தங்கள் வண்டியினை இவரின் டூவீலருக்கு முன்னால் க்ராஸ் செய்து  உள்ளார்கள்.இவர் வண்டியினை வேகம் குறைக்கும் முன்பு முன்னால் சென்ற வண்டியில் இருந்து ஏதோ ஒழுகி உள்ளது.அதில் இவர் வண்டி ஸ்லிப் ஆகி வண்டியினை நிறுத்தி என்னவென்று முன்னால் எட்டி பார்க்கவும் முன்னால் வண்டியில் சென்றவர்கள் மிக அருகாமையில் அவர்களின் வண்டியினை நிறுத்தி ஒருவன் கத்தியினை காட்டி கத்தாதே குத்திடுவேன் என மிரட்ட இன்னொருவன் தன் கையில் இருந்த கட்டிங் ப்ளேயரில் அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை கட் செய்து கொண்டு பறந்து விட்டார்கள்.

மிக தைரியமான அந்த பெண் ஓரமாய் நின்று கொஞ்ச நேரம் அழுது விட்டு தன் வீட்டிற்கு ஃபோனில் விபரத்தினை சொல்லி விட்டு கொஞ்ச தூரம் தள்ளி உள்ள கடையில் அமர்ந்து இருந்தாராம்.தாம்பரத்திலிருந்து அவரின் அப்பா அங்கு வரும் வரை அவர் உடல் நடுங்கி கொண்டே இருந்ததாம். எவ்வளவோ சொல்லியும் போலீசில் சொல்லவில்லை. தினமும் அந்த வழியில் செல்ல வேண்டி இருப்பதால் பயமாக இருக்கிறது என்று சொல்கிறார்.பழைய மகாபலிபுரம் சாலையில் நிறைய போலீசுகள் சுற்றி கொண்டே தான் இருக்கிறார்கள். இப்படி கம்ப்ளெயிண்ட் செய்யாதது தான் அந்த திருடர்களுக்கு சாதகமாய் போய் விடுகிறது. அந்த திருடர்கள் டிப் டாப்பாய் இருந்தார்களாம். கழுத்துக்கு அருகில் கத்தி வந்தால் நம் தைரியம் அவ்வளவு தான் போலிருக்கிறது.

+2,10த் ரிசல்ட் வந்தால் நான் தெரிந்தவர்கள் யாரும் எழுதி இருந்தாலும் ரிசல்ட் கேட்கவே மாட்டேன். ஆனாலும், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விபரம் அதுவா காத்து வாக்கில் நமக்கு வந்து சேரும்.
ஒருவர் தன் மகனுக்கு கோயம்புத்தூர் புகழ் பெற்ற காலேஜில் 12 லட்சம் கொடுத்து ஆட்டோமொபைல் கோர்ஸ் விலைக்கு வாங்கி உள்ளதை ஏதோ சாதித்து விட்டது போல் கூறினார்.அரசாங்கத்தில் 21 வருடம் வேலை பார்த்து கடைசியில் வரும் செட்டில்மெண்ட் கூட அவ்வளவு இருக்காதே.
ஒருவர் தன் மகனுக்கு ஒன்றரை லட்சம் கொடுத்து முகப்பேரில் ஒரு இண்டர்நேஷனல் பள்ளியில் ப்ரீ.கே.ஜி சீட் வாங்கி விட்டாராம். இந்த இரண்டில் எது பரவாயில்லை என்று “ஙே” முழி முழித்து கொண்டு நான்.சில பல வருடங்கள் கழித்து இவர்கள் என்னாவானார்கள் என்று மட்டும் விசாரிக்க வேண்டும்.

எப்பவும் குடும்பத்துடன் போகும் சம்மர் டூர் இந்த முறை போகவில்லை.புதியாதாய் வீடு கட்டி குடி புகுந்து 4 மாதங்கள் தான் ஆகிறது.நோ டப்பு. எனவே ஏற்கனவே போய் வந்த காஷ்மீர்,ஊட்டி டூர் ஃபோட்டாக்களை பார்த்து கொண்டு பொழுது போகிறது.



எல்லா வருடமும் போலவே இந்த வருடமும் வெயில் சென்னையில் வறுத்து எடுக்கிறது. எல்லா வருடமும் போலவே நாங்களும் ஆஹா என்ன அருமையான வெயில், எங்கே தொட்டாலும் எப்படி சுடுகிறது, கண்ணெல்லாம் எப்படி எரிகிறது,பாத்ரூம்,கிச்சன் குழாயில் எல்லாம் வெந்நீர் எப்படி அதுவா வருகிறது என்று அணு அணுவாய் ரசித்து கொண்டு இருக்கிறோம்.

போன மே மாதத்தில் வீட்டிற்கு வந்த ரியோ


இப்போ ரியோ

டெர்ரரா இருக்கான்.சேர்ந்த இடம் அப்படி.நகுல்,ரிஷி,விஷால் வரிசையில் இப்போ ரியோவுடன் பொழுது போகுது.




Wednesday, May 23, 2012

கவுன்சிலிங் - பெற்றோருக்கு தேவை

ஒவ்வொரு வருடமும் இதே திருவிழா தான். அதான் 10,12 ஆம் வகுப்பு ரிசல்ட் வரும் திருவிழாவினை தான் சொல்கிறேன். பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் அவர்களால் என்ன படிக்க முடியும் என்பது கட்டாயம் அவர்களை பெற்றவர்களுக்கு தெரிந்து இருக்கும். இருந்தும் பெரும்பாலான பெற்றோர்கள் பாசாங்கு செய்கிறார்கள். ஏன் இந்த பாசாங்கு. ஒவ்வொரு தாய் தந்தையும் தங்கள் பிள்ளைகளின் மார்க் சீட்டினை எடுத்து தங்கள் மார்க் சீட்டுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, மாமன் வீட்டு மார்க் சீட்டுகளுடன் ஒப்பிடவே கூடாது. எதை விதைக்கிறோமோ அது தானே அறுவடை செய்ய முடியும்.


இன்று இரண்டு பாடங்கள் ஃபெயில்
ஆகி இருக்கும் ஒரு மாணவியின் பெற்றோர் போன மாதம் முழுவதும் தன் ஒரே பெண்ணை மெடிக்கல் சேர்க்க 20 லட்சங்களை எப்படி புரட்டுவது வீட்டினை விற்பதா, நிலத்தினை விற்பதா என்று குழம்பி கொண்டு விலையும் பேசி கொண்டு இருந்தார்கள். கடந்த 4 வருடங்களாக அவர்கள் நாமக்கல் பள்ளிக்கு மட்டும் 5 லட்சங்கள் செலவு செய்து இருப்பார்கள்.முதல் ராங்க் வாங்கியிருக்கும் அதே நாமக்கல்லில் தான் அவர்களின் பெண்ணும் படித்தது. கடந்த ஒரு மாதமாக இருக்கும் எல்லா மெடிக்கல் எக்ஸாம்களையும் அந்த பெண் எழுதி கொண்டு இருந்தது. இப்போ பார்த்தா இரண்டு பாடங்களில் ஃபெயில்!!!! 

ஆயிரத்திற்கு மேல் எடுத்திருக்கும் இன்னொரு மாணவனின் பெற்றோர் இரண்டு தினங்களாய் கோயம்புத்தூரில் புகழ் பெற்ற காலேஜ் வாசலில் அப்ளிகேஷன் வாங்க ரூம் போட்டு காத்து இருந்து இன்று 1150க்கு மேல் மார்க் வராததால் ஏமாந்து போய் அவர்களின் ஊருக்கு திரும்பி பயணம் செய்கின்றனர்.

இன்னொரு உறவினர் பெண் ஃபோனில் ஒரே அழுகை. 1056 மார்க் எடுத்த தன் மகள் 1150 வரும் என்று இருந்தாளாம். அந்த பெண் உம்மென்று இருக்கிறது. அம்மாக்கள் தான் ஒரே அழுகை. 1056 எடுத்தாலும் அதே இஞ்சினியரிங் தானே சேர்க்க போகிறார்கள். என்ன சேரப் போகும் காலேஜ் இரண்டாவது தர வரிசையில் இருக்கும். எப்படியும் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை கிடைக்க போகிறது. ஆனால்,எதற்கு இந்த பெற்றோர்கள் இவ்வளவு அலட்டி கொள்கிறாகள். எதற்கு இவ்ளோ மெண்டல் ப்ரஷர்.

இந்த இஞ்சினியரிங்,மெடிக்கலை விட்டால் வேறு படிப்பு இருப்பது பெரும்பாலான பெற்றோருக்கு ஒரு படிப்பாகவே தோன்றவில்லை. போன வருடம் 50 ஆயிரம் இஞ்சினியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்கிறது நியூஸ். முதல் பத்து இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அடுத்த பத்து வருடங்களில் என்ன ஆனார்கள் என்றால் அப்படி ஒன்றும் சொல்லி கொள்வது மாதிரி இல்லையாம். +2வில் அதிக மார்க் எடுக்கும் மாணவர்களே அரியர்ஸ் வைத்து கொண்டு கஷ்டப்படுகிறார்களாம்.

இந்த முறை பிசிக்ஸ் அப்ளிகேஷன் ஓரியண்ட் முறையில் கேள்வி அமைந்ததால் நாமக்கல் மாவட்டத்தில் பிசிக்ஸில் தேர்ச்சி பெற்றவர்கள் எடுத்து இருக்கும் மார்க்குகள் கம்மி தானாம். இவர்களில் ஒருவர் கூட IIT-தேர்ச்சி பெறுவதில்லையாம்.

10 ஆம் வகுப்பில் 300லிருந்து 400 வரை வாங்கும் மாணவர்கள் பெரும்பாலும் +2வில் 850லிருந்து 950 தான் மார்க வாங்குகிறார்கள். பெற்றோர்களுக்கு இஞ்சினியரிங் பேய் பிடித்து ஆட்டுவதால் வேறு குருப்பில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதே இல்லை. படிக்க முடியுமா இல்லையா என்று யோசிப்பதே இல்லை. அவன் படிச்சிட்டான், இவன் படிச்சுட்டான் நம் பிள்ளையும் படிக்க வேண்டும் என்ற பேராசை மட்டுமே இருப்பதால் முதல் க்ரூப்பில் சேர்த்து விட்டு அதன் பிறகு +2 மார்க் பார்த்து விட்டு ஒரே புலம்பல் தான்.

இஞ்சினியரிங் படித்து விட்டு கால் சென்டர் வேலை எத்தனை பேர் பார்க்கிறார்கள்.டூரிசம்,மேனஜ்மெண்ட்,ஹோட்டல் இண்டஸ்ட்ரிஸ் என எத்தனையோ வாய்ப்புக்கள். பெரும்பாலானவர்கள் அத்தகைய படிப்புகளை முதலில் மதிப்பதே இல்லை. முதல் இரண்டு வருடங்கள் இஞ்சினியரிங்கில் நிறைய அரியர்ஸ் வைத்து விட்டு அதன் பிறகு ஆர்ட்ஸ் காலேஜில் ஏதோ ஒரு கோர்ஸ் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம், எத்தனை வருடங்கள் வேஸ்ட்? படிக்க முடியவில்லை என்றால் அதற்கு ஏற்ற மாதிரி கோர்ஸ்களில் குழந்தைகளை சேர்த்து விட்டு முன்னேற வழி செய்வது தான் பெற்றவர்களுக்கு அழகு.ஆனால்,பெருமைக்காக,நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலுமே பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

தெரிந்த ஒருவர் +2வில் ஃபெயில். இளங்கலை,முதுகலை,எம்.பில் வரலாறு படித்து விட்டு இன்று அரசாங்க காலேஜில் புரொஃபசர். இன்னொருவர் காலேஜில் படித்த பட்டத்தினை வாங்கவே இல்லை. ஆனால் இன்று காலேஜில் ஃப்ரெஞ்ச் புரொஃபசர்.என்னவோ போங்க இந்த இஞ்சினியர் மாயை என்று தான் ஒழியுமோ.பெற்றோருக்கு தான் டாக்டர்களிடம் கவுன்சிலிங் அவசியம்.

Monday, May 07, 2012

பெயரால் ஒரு காமெடி

திண்டுக்கல்லில் இருக்கும் எங்கள் குடும்ப நண்பர் இந்திரா அவருக்கு தெரிந்தவர்களின் பெயர்களை பெரும்பாலும் சுருக்கமாக தான் கூப்பிடுவார்.அமுதான்ன்னா அம்மு,கீதான்னா கீ, நிவேதிதான்னா நிவி,சுகன்யா எனில் சுகி இப்படி.சரியான சுறுசுறுப்பு.அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஜாம், ஜூஸ் செய்து தருவது தன் சகோதரர்களுக்கு வத்தல்,வடாம்,கஞ்சி மாவு அது இது என்று அவர் உடல் உழைப்பால் செய்ததை பார்சல் செய்து கொடுத்துட்டே இருப்பார்.நாம் போனால் கூட எதாவது வீட்டிலே செய்தது என்று பார்சல் கொடுக்காமல் இருக்க மாட்டார். 

ஒரு முறை அவரின் தம்பி மனைவியின் வயதான அம்மா இறந்து விட்டார்.அதன் பிறகு வந்த நாட்களில் அவ்வப்போது அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு எதாவது சாப்பாடு பார்சல் இவர் வீட்டில் இருந்து தான். ஒரு நாள் அவசரமாய் மதுரை போக வேண்டி இருக்கவே பச்சை மொச்சை,முருங்கைக்காய்,கறி, கோலா உருண்டை போட்டு நல்ல காரசாரமாய் குழம்பு செய்து அதை ஒரு பெரிய தூக்கு சட்டியில் ஊற்றி வீட்டு வேலைக்காரரிடம் இதை இழவு வீட்டில கொடுத்துடு நான் மதுரை போகிறேன் என்று சொல்லி கிளம்பி போய் விட்டார்.

இழவு வீட்டில் சாதம் மட்டும் செய்து விட்டு 1 மணியாச்சு,2 மணியாச்சு,2.30 ஆச்சு பசி பொறுக்காமல் என்ன இந்திரா குழம்பு கொடுத்து விடுறேன்னு சொன்னியே எங்க குழம்பு என்று கேட்க இவர் உடனே வீட்டிற்கு ஃபோன் செய்து கேட்கவும் ஆமாக்கா நான் இளவக்கா வீட்டில் 12.30 மணிக்கே கொடுத்துட்டேனே என்று வேலைக்காரர் சொல்லி இருக்கிறார். என்னது இழவு அக்கா வீடா?? என்னடா சொல்ற? அக்கா நீங்க தானே இளவக்கா வீட்டில் கொடுக்க சொன்னீங்க என்று சொல்லவும் தன் தவறை உணர்ந்தார்.இவர் கொடுக்க சொன்னது இழவு வீடு.அவர் கொடுத்ததோ இளா வீடு என்ற இளவரசி வீடு.

இதில் காமெடி என்னவென்றால் அந்த இளவரசி வீட்டில் இருப்பது அவரும் அவர் அம்மா மட்டும் தான் என்னடா இது ஒரு சட்டி நிறைய குழம்பு எதற்கு என்று அவருக்கு கொஞ்சமும் டவுட் வரலை இந்திரா மதுரை போறதால் 2 நாட்களுக்கு சேர்த்து கொடுத்துட்டு போனதாய் நினைத்து நன்கு மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு மீதியினை ஃப்ரிட்ஜில் பத்திரபடுத்தி வைத்தார்களாம். ஆஹா சுருக்கமாய் பெயர்களை சொல்வதால் வந்த பிரச்சனையா? இழவு வீட்டிற்கு வேலைக்காரர் செய்த தவறை சொல்லவும் மதியம் 3 மணியானதால் ஹோட்டலில் சாப்பாடு தீர்ந்து போனதால் வெறும் தயிர்,ஊறுகாய் வைத்து சாப்பிட்டார்களாம்.







Thursday, April 19, 2012

மரக்கடையில் இரண்டு நாட்கள்

நெல்லையில் இருந்த போது எங்கள் வீட்டின் பின்னால் மிக பெரிய வேப்பமரம் ஒன்று இருந்தது.அந்த மரத்தின் அடியில் மட்டும் மண் விட்டு மற்ற இடங்களில் சிமெண்ட் பூசப்பட்டு இருக்கும்.கீழ் வீட்டில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது. மாடிக்கு செல்லும் போது தான் அதன் மிக பெரிய கிளைகளும், பறவைகளும், பறவை கூடுகளும் தெரியும்.மிகவும் பெரியதான அந்த மரம் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய வழவின் பாதி இடத்திற்கு நிழல் தந்தது.எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பாதி இடம் நிழலாக இருக்கும். சீசனில் வேப்பங்கொட்டை சேகரித்து கொண்டே இருப்பார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்.எங்கள் காம்பவுண்டில் பழங்கள் அதிகம் விழாது.

ஒரு நாள் மரம் அறுப்பவர்கள் வந்து மரத்தினை தட்டி பார்த்துட்டு மிக வயசானதால் உள்ளே உலுத்து போய் விட்டதாய் அதற்கு விலை பேசி சென்றார்கள். ஒரு கெட்ட நாளில் அதனை வெட்ட ஆரம்பித்தார்கள்.ஒரு வாரமாய் தினம் வெட்டி வெட்டி சாய்த்தார்கள்.தெருவில் போகிறவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள். ரோடெல்லாம் வேப்ப இலைகள், எப்ப பார்த்தாலும் வேப்ப வாசனை.முழு மரமும் மொட்டையாக்கிய பின் எங்கள் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தின் அடி பகுதியினை கட் செய்து வாசல் வழியே வெளியே எடுத்து போக வாசல் பத்தாது என்பதால் சுவரில் பெரிய அளவில் வட்டமாக ஒரு ஓட்டை போட்டு அதன் வழியே எடுத்து சென்றார்கள். ஒரு 50 பேராவது அதனை அன்று வேடிக்கை பார்த்தோம்.
அப்புறம் ஒரு நாள் அதன் வேர் பகுதியினை பெரிய குழி தோண்டி வெளியில் எடுத்தார்கள்.ஆ வென்று பார்த்து கொண்டேயிருந்தோம்.வேப்ப மரம் வெட்ட பட்ட போது மனது மிகவும் கஷ்டப்பட்டது.


இப்ப ஏன் இந்த கொசுவர்த்தி என்றால் சமீபத்தில் ஒரு மரக்கடையில் முழுதாய் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. புதியதாய் நாங்கள் கட்டிய வீட்டிற்கு மரங்கள் வாங்க ஆசாரியுடன் சென்றிருந்தேன். ஆசாரி படாக் படாக் என்று சொல்லியும் நான் ஜன்னல் சட்டங்களுக்கு வேப்பமரம் தான் வாங்க வேண்டும் என்று பிடிவாதமாய் வாங்கியும் விட்டேன். விசாரித்த வகையில் விலையும் மிக குறைவு, நல்லது என்றும் கேள்வி பட்டேன். ரெட் ஹில்ஸ் பக்கத்தில் அல்மாத்தி என்ற இடத்தில் மரம் நன்றாக இருக்கிறது.அங்கு விலையும் பரவாயில்லை. மரக்கடையில் முழுநாளும் அமர்ந்து மரத்துண்டுகளையும்,அதற்கு செய்யும் சடங்குகளையும் பார்த்த போது எங்க வீட்டின் அந்த பெரிய வேப்ப மரம் தான் நினைவிற்கு வந்தது. அது வெட்டப்பட்டு யார் வீட்டு ஜன்னலுக்கு சட்டமாகியதோ.இப்பொழுது நான் வாங்கி இருப்பது யார் வீட்டு வேப்பமரமோ?


Tuesday, April 17, 2012

புது வீட்டிற்கு வாங்க..


ஆச்சு..2011 அக்டோபரில் கடைசியாக ஒரு பதிவு போட்டது.2012 வருடம் தொடங்கியவுடன் ஒரு பதிவு போடணுமே இல்லைனா உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று பரணில்(ட்ராஃப்டில்) இருந்த ஒரு பதிவினை தூசி தட்டி ஜனவரியில் ஒரு பதிவினை போட்டுட்டு அப்படியே காணா போயாச்சு.

2011 மார்ச்சில் கட்ட ஆரம்பித்த வீட்டினை 2012 மார்ச்சிற்குள் கட்டி முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பதிவுலகமே மறக்க ஆரம்பித்தது. பிப்ரவரியில் புது வீட்டிற்கும் குடி வந்தாச்சு. பழைய வீட்டில் ஏற்கனவே இருந்த ஏர்டெல் நெட் புது வீட்டு ஏரியாவில் நெட்வொர்க் இல்லையென்று கை விரித்ததும் தான் ஆஹா பதிவுலகத்தினை மிகவும் மிஸ் செய்தேன். எல்லோரையும் விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் ஜமீன் பல்லாவரம் ஆனேன். புது வீடு இருப்பது ஜமீன் பல்லாவரத்தில்.

எந்த நேரத்தில் அக்கம் பக்கம் என்று என் ஃப்ளாக்கிற்கு பெயர் வைத்தேனோ என் புது வீட்டின் அக்கம் பக்கத்தில் யாருமே இல்லை. தனி வீடு..செம வெளிச்சம் + செம காற்று.அனுபவித்து கொள்ளணும், ஏன் ஆராயணும்? 10 நாட்கள் முன்பு தான் வீட்டிற்கு நெட் வந்தது. பர பரவென்று இரண்டு மாதங்களாக போகாதவர்கள் வீட்டிற்கு(ப்ளாக்கிற்கு) எல்லாம் கடந்த 10 நாட்களாய் போய் வந்தேன். என் வீட்டிற்கு அனைவரும் வருக.

















Wednesday, January 18, 2012

நெல்லையின் சில மனிதர்கள்

நெல்லை டவுணில் எங்க வீட்டிற்கு பக்கத்து வைக்கப்பிள்ளை வழவில் என்றைக்கும் வழக்கம் போல அண்ணன் தம்பி சண்டை. இருவருக்கும் ஒரே அப்பா.அம்மாக்கள் வேறு.அவர்களின் அப்பா அப்போது மிக புகழ்பெற்ற வக்கீல்.அவர்களுக்கு 3 வீடுகள் அந்த வழவுக்குள் இருந்தது. எனவே வக்கீல் பிள்ளை வழவு என்று ஆனது.காலப்போக்கில் வைக்கப்பிள்ளை வழவு என்றாகியது.

இன்னொரு வீட்டில் ஒரு 10 வயது பையன் நாதன் தினம் புட்டார்த்தி அம்மன் கோயிலுக்கு போகாமல் இருக்க மாட்டான். அவன் நெற்றியில் தினம் துன்னூரு சும்மா பளிச்சுன்னு இருக்கும். சே, சின்ன வயதில் இப்படி ஒரு பக்தியா. நானும் என் அம்மா சொல்வது போல் காலேஜிற்கு போகும் போது ஷாட் ரூட்டில் போக வழியிருந்தும் புட்டார்த்தி அம்மன் கோயிலை ஒரு சுற்று சுற்றிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு போவேன்.ஒரு நாள் காலையில் அப்படி போகும் போது அவனை பிடித்து வைத்து சிலர் கண்டித்துக் கொண்டு இருந்தனர்.அவன் பாக்கெட்டில் இருந்து காசுகளை எடுத்துக் கொண்டும் இருந்தனர். விஷயம் இது தான் சார்வாள் தினம் கோயிலுக்கு போனதே அங்கு பூசாரி தட்டில் இருக்கும் காசுக்களை எடுக்கதான். அவனை பிடித்து இழுத்துக் கொண்டு அவன் தாயிடம் போய் ஒப்படைக்கையில் அவன் அம்மா சொன்னது தான் டாப்.கறிவேப்பிலை கொழுந்தாட்டம் ஒன்னே ஒன்னு பெத்து வைச்சுருக்கேன்.என் மகனுக்கு புட்டார்த்தி கொடுக்குறா அது பொறுக்கலையா என்று அந்த கோயில் ஆட்களை பார்த்து கேட்டார்.வந்தவர்கள் அந்த சூப்பர் அம்மாவையும் சேர்ந்து அர்ச்சனை செய்துட்டு போனார்கள்.

இன்னொரு வீட்டில் மாரியப்பன் என்ற ஒரு 10 வயது வாண்டு.கரகாட்டக்காரன் படத்தை 10 தடவை பார்த்தது. சரியான செந்தில் கோட்டி. வாழைப்பழ ஜோக்கிற்காகவே அந்த படத்தினை அப்ப பாப்புலர் தியேட்டரில் 10 தடவை பார்த்தது.

கறிவேப்பிலை கொழுந்து நாதனும், வாழைப்பழ மாரியப்பனும் இப்ப எப்படி இருப்பாங்க? ஒருமுறை நெல்லை போகும் போது தேடி பார்க்கணும்.அப்படியே வைக்கப்பிள்ளை வழவில் சண்டை பற்றி விசாரிக்கணும்.