Wednesday, January 18, 2012

நெல்லையின் சில மனிதர்கள்

நெல்லை டவுணில் எங்க வீட்டிற்கு பக்கத்து வைக்கப்பிள்ளை வழவில் என்றைக்கும் வழக்கம் போல அண்ணன் தம்பி சண்டை. இருவருக்கும் ஒரே அப்பா.அம்மாக்கள் வேறு.அவர்களின் அப்பா அப்போது மிக புகழ்பெற்ற வக்கீல்.அவர்களுக்கு 3 வீடுகள் அந்த வழவுக்குள் இருந்தது. எனவே வக்கீல் பிள்ளை வழவு என்று ஆனது.காலப்போக்கில் வைக்கப்பிள்ளை வழவு என்றாகியது.

இன்னொரு வீட்டில் ஒரு 10 வயது பையன் நாதன் தினம் புட்டார்த்தி அம்மன் கோயிலுக்கு போகாமல் இருக்க மாட்டான். அவன் நெற்றியில் தினம் துன்னூரு சும்மா பளிச்சுன்னு இருக்கும். சே, சின்ன வயதில் இப்படி ஒரு பக்தியா. நானும் என் அம்மா சொல்வது போல் காலேஜிற்கு போகும் போது ஷாட் ரூட்டில் போக வழியிருந்தும் புட்டார்த்தி அம்மன் கோயிலை ஒரு சுற்று சுற்றிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு போவேன்.ஒரு நாள் காலையில் அப்படி போகும் போது அவனை பிடித்து வைத்து சிலர் கண்டித்துக் கொண்டு இருந்தனர்.அவன் பாக்கெட்டில் இருந்து காசுகளை எடுத்துக் கொண்டும் இருந்தனர். விஷயம் இது தான் சார்வாள் தினம் கோயிலுக்கு போனதே அங்கு பூசாரி தட்டில் இருக்கும் காசுக்களை எடுக்கதான். அவனை பிடித்து இழுத்துக் கொண்டு அவன் தாயிடம் போய் ஒப்படைக்கையில் அவன் அம்மா சொன்னது தான் டாப்.கறிவேப்பிலை கொழுந்தாட்டம் ஒன்னே ஒன்னு பெத்து வைச்சுருக்கேன்.என் மகனுக்கு புட்டார்த்தி கொடுக்குறா அது பொறுக்கலையா என்று அந்த கோயில் ஆட்களை பார்த்து கேட்டார்.வந்தவர்கள் அந்த சூப்பர் அம்மாவையும் சேர்ந்து அர்ச்சனை செய்துட்டு போனார்கள்.

இன்னொரு வீட்டில் மாரியப்பன் என்ற ஒரு 10 வயது வாண்டு.கரகாட்டக்காரன் படத்தை 10 தடவை பார்த்தது. சரியான செந்தில் கோட்டி. வாழைப்பழ ஜோக்கிற்காகவே அந்த படத்தினை அப்ப பாப்புலர் தியேட்டரில் 10 தடவை பார்த்தது.

கறிவேப்பிலை கொழுந்து நாதனும், வாழைப்பழ மாரியப்பனும் இப்ப எப்படி இருப்பாங்க? ஒருமுறை நெல்லை போகும் போது தேடி பார்க்கணும்.அப்படியே வைக்கப்பிள்ளை வழவில் சண்டை பற்றி விசாரிக்கணும்.