Monday, September 01, 2014

வீட்டிலே இந்தியா பாகிஸ்தான்..

என் அம்மாவின் அம்மா (எனக்குஅவ்வா) அவரின் 15 ஆவது வயதில் திருமணம் முடித்து என் தாத்தாவின் வீட்டில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் தனது 59 வயது வரை உழைத்து கொண்டே இருந்தார்.அவரை ஏனோ என் தாத்தாவின் தம்பி,தங்கை,அக்கா,அம்மா,அப்பா என யாருக்கும் பிடிக்காது.எப்பவும் வேலை செய்து கொண்டிருந்தாலும் ஏதாவது குறை சொல்லி கொண்டே இருப்பார்களாம். அதிலும் தாத்தாவின் தம்பி என் அவ்வா வரும் போதும் போகும் போதும் தொண்டையை செருமி செருமி எச்சில் துப்புற மாதிரி பாவ்லா செய்வாராம். எதையும் கண்டு கொள்ளாமல் என் அவ்வா வேலை செய்வது மட்டும் நிறுத்தாமல் கடமையாய் செய்து கொண்டிருப்பராம். என் தாத்தாவின் தம்பி அவரின் அக்கா மகளை கட்டி கொண்டார்.என் அவ்வாவின் தம்பி என் தாத்தாவின் தங்கையை மணமுடித்தார். அதன் பின் அவரும் என் அவ்வாவிற்கு எதிரி ஆகிவிட்டார்.

தாத்தாவின் அப்பா சொத்து எதுவும் வாங்க சென்றால் இவர்கள் கூட்டமாக தடுத்து விடுவார்களாம். பணம் கொத்து கொத்தாக இரும்பு பெட்டியில் எண்ணி எண்ணி வைத்து விடுவார்களாம். அதை இந்த கூட்டம் அவ்வப்போது திருடி கொண்டிருக்கும். என் தாத்தா தான் 10ஆவதுடன் நிறுத்தி விட்டதால் தன் தம்பி படிக்க வேண்டும் என்று மிக ஆசை பட்டு 10ஆவது ஃபெயில் ஆன தன் தம்பியினை டூடோரியல் சேர்த்து அதன் பின் தன் முயற்சியால் பி.டி மாஸ்டருக்கும் படிக்க வைத்து(என் தாத்தா ஃபுட்பால் ப்ளேயர்) தன் செல்வாக்கால் லோக்கல் பள்ளியில் வேலையும் வாங்கி வைத்து வீட்டோடு வைத்து கொண்டார். தனது 15ஆவது வயதில் இருந்து தன் தந்தையின் ஹோட்டலில் உழைக்க ஆரம்பித்தார். ஒரு பெரிய வீட்டை வாங்கிய என் தாத்தா அதை தன் அப்பாவின் பெயரில் வாங்கினார். ஒரு ஹோட்டல் தன் சொந்த பெயரில் வாங்கினார். தாத்தாவின் அப்பாவின்  மரணத்திற்கு பிறகு இருந்த வீட்டின் மாடியில் தாத்தாவின் தம்பி குடும்பம் தனி குடித்தனம் சென்று விட்டனர். ஒரு நாள் என் தாத்தா யாரிடமும் சொல்லாமல் தன் பெயரில் இருந்த ஹோட்டலை தன் தம்பியின் பெயருக்கு மாற்றி கொடுத்து விட்டார். பாவம் வாத்யார் தொழிலில் தன் தம்பி கஷ்டப்படுவதாய் நினைத்து அவர் பஞ்சம் பாடவும் இப்படி ஒரு காரியத்தினை செய்து விட்டார். அது சொந்த இடமாகும் அதன் பிறகு ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து அதில் தான் சாகும் வரை என் தாத்தா ஹோட்டல் நடத்தி வந்தார்.

தாத்தாவின் தம்பியால் என் தாத்தாவும் அவ்வாவும் மிகவும் கஷ்டப்பட்டனர்.ஆனாலும் பாசத்தால் என் தாத்தா அவரின் தம்பியை எதுவும் சொன்னதில்லை. ஆனால் காலப்போக்கில் தன் தம்பியுடன்  பேச்சை நிறுத்தி கொண்டார்.தான் சாகும் வரை தன் தம்பியுடன் பேசினதில்லை.  ஆனால், நேருக்கு நேர் சண்டை எதுவும் போட்டதில்லை.

ஒரே வீட்டில் மாடியில் அவர்களும்,கீழே நாங்களும் 1960லிருந்து 2000 வரை 40 வருடங்கள் பேசாமல் குடியிருந்தோம். அவர்களுக்கு கீழே ஒரு ரூமும் அந்த ரூமிலிருந்து மாடிக்கு படி போகும்,கீழே கிச்சனும் உண்டு,எங்கள் வீட்டு ஹாலில் ஒரு பாதியை நடைபாதையாக்கி கிச்சனுக்கு போய் வருவார்கள். அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் ஒரு நாள் கூட பேசி கொண்டதில்லை. எங்கள் வீட்டு விஷேஷத்திற்கு அவர்களை அழைக்க மாட்டோம். அவர்களும் அப்படியே.அக்னிநட்சத்திரம் கார்த்திக்,பிரபு போல அவ்வப்போது  இரு வீட்டாரும் முறைத்து கொள்வார்கள்.என் தாத்தா பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள்.தன் சுய சம்பாத்யத்தில் என் தாத்தா அவரின் அப்பா பெயரில் வாங்கிய வீட்டை 2006-ல் விற்று  அவரின் தம்பி,தங்கைகளுக்கும் பங்கு கொடுத்தாச்சு.

தாத்தாவின் தம்பி குடும்பத்துடன் அதே ஊரில் இருக்கிறார். என் அவ்வா இறக்கும் வரை அவர்கள் அவ்வாவிற்கு செய்த கெடுதல்களை கண்ணீருடன் என்னிடமும் என் தங்கையிடமும் சொல்லி இருக்கிறார்கள். இப்பவும் என் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் இன்றும் கூட அந்த குடும்பத்தை எங்காவது பொது இடத்தில் பார்த்தால் எனக்கு அப்படி ஒரு கோவம் வரும். அப்படியே ஒதுங்கி விடுவேன். அவர்களுடன் நான் சாகும் வரை பேசாமல் இருப்பதே என் அவ்வாவிற்கு நான் செய்யும் நன்றியாக நினைத்து இருக்கிறேன். என் அவ்வா செய்த தப்பெல்லாம் என் தாத்தாவை திருமணம் செய்தது மட்டுமே.

5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அவர்களுடன் நான் சாகும் வரை பேசாமல் இருப்பதே என் அவ்வாவிற்கு நான் செய்யும் நன்றியாக நினைத்து இருக்கிறேன்.//
அம்மா!
தங்கள் அம்மம்மாவுக்கு (அவ்வா) அவர்கள் செய்தது பெரிய தப்பு. ஆனாலும் நீங்களும் அதை ஏன் செய்கிறீர்கள். மன்னித்து விடுங்கள்.
தேடிச் செல்ல வேண்டாம், ஆனால் கண்டால் முறைக்க வேண்டாம்.
இக்குணத்தால் நான் இழந்தது அதிகம்.
"குற்றம் பார்க்கில் சுற்றமில்லை"
இந்தியா - பாகிஸ்தானும் இணைய வேண்டும்.
இது உங்களுக்கு நான் கூறும் புத்திமதியல்ல, என் அனுபவத்தைப் பகிர்கிறேன்.
தவறாகக் கொள்ள வேண்டாம்.

அமுதா கிருஷ்ணா said...

54 வருடங்களாக என் அம்மா பேசுவதில்லை.இப்பவும் என் அம்மா என்னுடன் இருக்காங்க. எனக்கும் அவுங்கள பார்த்தா பேசவே தோணாது. நான் பிறக்கும் முன்னாலிருந்து பேசறதில்லை. என் அம்மா,அவ்வா அவர்களின் வாழ்க்கையில் அனுபவித்த எல்லா கஷ்டங்களுக்கும் அந்த கூட்டம் தான் காரணம்.பேசணும்னு ஆசையே இல்லை.பேசாட்டா யாருக்கும் நஷ்டமும் இல்லையே..எனினும், உங்கள் நல்லெண்ணத்திற்கு ஒரு சல்யூட யோகன் பாரிஸ்..

வெங்கட் நாகராஜ் said...

பல வீடுகளில் இப்படித் தான்.... :(

Vetirmagal said...

எங்கள் வீட்டிலும் இதே கதை தான். என் கணவர் எல்லாரும் நன்றாக இருக்க பாடுபட்டார். இப்ப யாரும் கண்டுக்கிறது இல்லை.

பர குடும்பங்கள் ஒற்றுமையாக ஒருவரையும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்த்து வியப்பு அடைந்திருக்கிரேன்.நம் கொடுப்பினை என்று மனசை தேத்துகிறேன்.

Avargal Unmaigal said...


உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..