Thursday, February 26, 2015

கைப்பிள்ளயின் திட்டு வாங்கும் வைபவம்!!!

நெல்லையில் ஃப்ரெண்ட் ஒருவரின் வீட்டை குடியிருப்பவரிடம் போராடி சாவியை வாங்கி இன்னொரு நெல்லை ஃப்ரெண்ட் மூலமாக புரோக்கரிடம் 2014 ஃபிப்ரவரியில் சாவி கொடுத்து வந்தோம்.நாங்கள் சொன்ன விலைக்கு மிகவும் குறைச்சலாக கேட்டதால் பொறுமையாக இருந்து அடுத்த மாதம் புவ்வாக்கு என்ன செய்வது என்ற நிலைமையில் வட்டி கணக்கு பார்த்து மோசமில்லாத விலைக்கு ஒருவர் கேட்கவும் அக்டோபர் -2014  அட்வான்ஸ் வாங்கி டிசம்பரில் மிச்ச பணத்தை வாங்கி பத்திரம் முடிக்கலாம்னு இருந்தோம்.

டிசம்பரில் 2014 பத்திரம் போடலாம்னு நெல்லை நோக்கி பயணம். அங்கே போனா ஃப்ரெண்டின் கணவரின் தங்கையிடம் நாங்க வாங்கி வைத்திருந்த பவர் இப்போது செல்லாதுன்னு சொல்லிட்டாங்க.தங்கை இருப்பதோ விசாகப்பட்டிணம். போய் புது பவர் வாங்கி அதை அங்கே ரிஜிஸ்டர் ஆஃபிசில் ரிஜிஸ்டர் செய்துட்டு வரவேண்டும்னு சொல்லிட்டாங்க. சரியென்று டிசம்பர் 27 விசாக்கிற்கு புறப்பட்டாச்சு.

மறுநாள் அங்கே என் கணவருக்கு தெரிந்தவர் அவரால் முடிந்த உதவியை செய்து தருவதாக சொல்லவும் அவரிடம் விபரம் சொல்லி அந்த தங்கையின் வீட்டிற்கு போனோம்.

அங்கே தங்கையின் கணவருக்கு என்னை பார்த்தாலே பிடிக்கவில்லை. மூணாவது மனிதனுக்கு எங்க வீட்டு பிரச்சனையில் என்ன தலையீடு என்கிற கேள்வி. எங்களுக்கு உதவி செய்ததாக சொன்னவர் அந்த ஊரில் பெரும் புள்ளி. எனவே, என்னை பார்த்தவுடன் இப்ப எல்லாம் உடனே சைன் போட முடியாது. என் மனைவிக்கு உடம்பு சரியில்லை அப்படி இப்படின்னு குரைக்க ஆரம்பித்தான். ஆஹா இது வேலைக்கு ஆகாதுன்னு தோணுச்சு. ஃப்ரெண்ட் வீட்டில் படிக்கும் ரெண்டு பிள்ளைகள், உடல் நிலை சரியில்லாத கணவர் என்று கஷ்டம் அமுதா கூடவே இருந்து பார்ப்பதால் தான்  ஹெல்ப் செய்றாங்கன்னு என் ஃப்ரெண்ட் அழுகாத குறையாக அவரிடம் கெஞ்சினார். அவனுக்கு என் மேல் கோப பட்டால் நான் இதிலிருந்து ஒதுங்கி விடுவேன் என்ற எண்ணத்தில் என் மேல் எரிச்சல் பட்டு கொண்டே இருந்தான். அந்த பெண் கொடுத்த காஃபியை அப்படியே வச்சுட்டு நான் வீட்டிற்கு வெளியில் போய் நின்று கொண்டேன். கடைசியில் சைன் போட வருவதாய் ஒத்து கொண்டான். சரி நாங்கள் ரெடி செய்துட்டு சொல்கிறோம்னு அவன் வீட்டை விட்டு வெளியில் வந்தோம் .

ஆனால் அந்த ஏரியா ரிஜிஸ்ட்ரார் அதை கொண்டு வா இதை கொண்டு வான்னு சொல்லவும் அவரோடு தெலுங்கில் மல்லுக்கட்டுவிட்டு சென்னைக்கு திரும்பினோம்.

வைசாக்கில் கணவரின் நண்பர் நீங்க திரும்ப அலைய வேண்டாம். டாக்குமெண்ட்டை அனுப்பி வையுங்க நான் சைன் வாங்கி அனுப்புகிறேன்னு சொன்னார். நெல்லைக்கு போய் டாகுமெண்ட் ரெடி செய்து அதை கூரியரில் ஆந்திரா அனுப்பி வச்சுட்டு  காத்து இருந்தோம்.

என் கணவர் 15 நாட்களில் இரண்டு முறை என்ன அண்ணன் அந்த வேலை முடிஞ்சுடுமான்னு கேட்டு வைத்தார். அவர் இந்தோ அந்தோன்னு 15 நாட்கள் கடத்தவும் 15 ஆவது நாள் மாலை அவருக்கு ஃபோன் செய்தேன்.

 முடிச்சு தர்றேன்னு சொல்லிட்டா முடிச்சதும் சொல்லுறேன், இல்லைங்க தங்கையின் கணவர் எதேச்சும் பிரச்சனை செய்றாரோ, எங்களுக்கு நெல்லையில் இருந்து தினம் ஃபோன் வந்து கொண்டே இருக்கு பதில் சொல்ல முடியலை அதான் என்ன ஆச்சுன்னு கேட்டேன்னு பொறுமையாய் சொன்னால், அதெல்லாம் அவன் வம்பு செய்தால் நான் சொல்ல மாட்டேனா? வேணும்னா நெல்லைக்கு அவனை கூட்டி போய் ஒரு பத்து லட்சம் கொடுத்து சைன் வாங்கிகோங்கன்னு கோபமாய் என்னிடம் பேசவும் என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் அதுவா கொட்டுது. இவர் இப்படி கோவிப்பார் என்று நான் நினைக்கவேயில்லை. நமக்கு தெரிந்தவர் எதற்கு சாதாரணமாக நான் பேசியதற்கு இப்படி கோபபடணும்னு எனக்கு இன்னுமே புரியலை. என் தலையெழுத்து திட்டு வாங்கணும் என்று இருக்கும் போது என்ன செய்றது.

நெல்லையில் வீட்டை வாங்குபவர் + புரோக்கர் ரிஜிஸ்டருக்கு டிடி எடுத்து 10 நாட்களுக்கு மேலாகிறது இன்னும் சைன் ஏன் வாங்கி வரலைன்னு தினம் 10 தடவை ஃபோன் செய்து கொண்டே இருக்க அந்த பிரசரால் தான் நான் ஆந்திராவுக்கு ஃபோன் செய்து வாங்கி கட்டினேன்.

 இது திட்டு வாங்கும் வருடம் போல். முதலில் ஒரியாக்காரனிடம் (தங்கையின் கணவன்) கண்ணாப்பிண்ணான்னு இங்கிலிஷ் திட்டு. இப்ப என் கணவருக்கு தெரிந்தவரிடமே தெலுங்கு கலந்த தமிழ் திட்டு.நெல்லையில் போன வருடம் சாவி வாங்கும் வரை அந்த வீட்டில் குடியிருந்தவனிடம் நெல்லை தமிழ் திட்டு. இப்படி நெல்லையில் ஆரம்பித்து விசாகப்பட்டினம் வரை ஆளாளுக்கு திட்டுறாங்களேன்னு ஒரே சுய பச்சாதாபம்.

ஏந்தான் இந்த பிரச்சனையில் தலையை நுழைத்தோம்னு ஒரே அழுகாச்சியா போச்சு. ஆனாலும் என் ஃப்ரெண்ட்டிடம் தைரியமாக காண்பித்து கொண்டேன். எப்படியும் முடித்து தானே ஆகணும் இன்னும் எவ்ளோ நாளானாலும் நல்ல நாள் என்று ஒரு நாள் வந்து தானே ஆகணும் என்று நம்பிக்கை. அடுத்த மாதத்திற்கு வீட்டு வாடகை கொடுக்க கூட கையில் பணம் இல்லாத நிலை என் ஃப்ரெண்டிற்கு.

கடைசியில் 24 ஜனவரியில் கையெழுத்து போட்டு விட்டதாக வைசாக் நாத்தனார் என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் செய்து சொன்னார். என்னிடம் கோபித்து கொண்ட அந்த பெரியவருக்கும் என் ஃப்ரெண்ட் நன்றி தெரிவித்து ஃபோன் செய்தார். அங்கேயிருந்து பத்திரம் வருவதற்கு காத்து இருந்தோம்.கையெழுத்து போடப்பட்ட பத்திரம் வந்தது…அதை எடுத்து கொண்டு நெல்லைக்கு போய் வீட்டை வித்து பணத்துடன் ஊர் திரும்பினோம்.இப்பல்லாம் யாரும் யாருக்கும் உதவி செய்வதில்லை எதனால் என்பது  புரிந்தது.



2 comments:

ஹுஸைனம்மா said...

வாசிச்ச எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்குங்க. பாவம் நீங்க...

ஆனா, உண்மைதாங்க, யாருக்கும் உதவின்னு செய்யப் போகவே பயம்மாருக்கு. பாவமாவுமிருக்கு.

(இந்த ரணகளத்திலயும், “இவன் ரொம்ப நல்ல்ல்லவேன்னு சொன்னாங்கம்மா” ஜோக் ஞாபகம் வருது. சாரிங்க. :-)))))) )

Dubukku said...

அம்மாடியோவ் படிக்கவே தலை சுத்துது. நீங்க வைசாக்கும் திருநெல்வேலிக்கும் அசால்ட்டா போய் திட்டு வாங்கிட்டு வந்திருக்கீங்க. ஆனா பிரதி பலன் பாக்காம நீங்க செஞ்ச உதவி பெரிய விஷயம் அவங்களோட நல்ல்லெண்ணம் உங்களோட இருக்கும். உங்களுக்கு தேவையான போது இதே மாதிரி ஒரு நல்ல உள்ளத்திடமிருந்து உங்களுக்கும் கிடைக்கும்