Tuesday, June 08, 2010

வெரைட்டி

அங்காடி தெரு பார்த்து விட்டு மிக சோகமாய் அழுகை அழுகையாய் வந்தது. இதற்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா என்று ஒரு இயலாமையாய் இருந்தது.ஆனாலும், ஒரு வேலையும் இல்லாமல் சும்மா திருநெல்வேலியில் இருக்கும் +2,10 படித்த மாணவர்கள் வேறு என்ன தான் செய்ய முடியும்? இந்த வேலையாவது கிடைத்ததே என்று சந்தோஷமாக தான் நிறைய பேர் அந்த மாதிரி கடைகளில் வேலையில் சேருகிறார்கள். சமீபத்தில் சரவணா, ஜெயசந்திரன் கடைகளுக்கு சென்றிருந்தேன். எப்பவும் அந்த பணியாளர்களிடம் நான் எதாவது பேசி விட்டு வருவேன் சொந்த ஊர் பாசம். என்ன சாப்பாடு, எத்தனை நாட்கள் விடுமுறை, எப்ப கடைசியாக ஊருக்கு போனீங்க என்று விசாரிப்பேன்.சில சேல்ஸ் கேர்ள்ஸ் என்னக்கா ரொம்ப நாளா ஆளை காணோம் என்று விசாரிப்பார்கள். இந்த முறை அங்காடி தெரு பார்த்தாச்சா என்று கேட்டேன். ஆமாக்கா, ஹாஸ்டலில் போட்டாங்க பார்த்தாச்சு, நீங்க பார்த்தாச்சா என்று மிக சந்தோஷமாய் கூறினார்கள். வசந்த பாலன் மிகை படுத்தி எடுத்து விட்டாரோ என்று தோன்றியது.


டில்லியில் மெட்ரோ ரயில் திட்டம் அழகோ அழகு.அவ்வளவு சுத்தம்.அவ்வளவு ஒழுங்கு.ஆனால்,ஸ்டேஷனில் வயசானவுங்க போனால் உட்கார ஒரு சீட் கிடையாது.ஸ்டேஷன் உள்ளே போனால் ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல ஒரு பிரமை.காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நாம் இந்த ட்ரைன்களில் பயணம் செய்யலாம். மக்கள் எல்லோரும் ஒழுங்காய் வரிசையில் நின்று ட்ரையினில் ஏறுகிறார்கள்.புது டில்லி ஸ்டேஷனுக்கு அடுத்த ஸ்டேஷன் ராஜிவ் செளக் ஸ்டேஷனில் (அண்டர்கிரவுண்ட்)இறங்கி எஸ்கலேட்டரில் ஏறி மேலே வந்தால் பாலிக்கா பஜாரின் நம்பர் 1 கேட்டிற்கு வந்து விடுகிறது. முழு பஜாரும் அண்டர்கிரவுண்டில். டில்லி போனால் மெட்ரோ மிஸ் செய்யாதீர்கள்.

இரண்டு நாளாக மாலையில் கரண்ட் போவதும் ஒரு மணிநேரத்தில் ஒரு 10 நிமிஷம் வருவதுமாய் ராத்திரி வரை ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தது. எத்தனை முறை ஃபோன் செய்தாலும் ஈ.பியில் எடுக்கவேயில்லை. ராத்திரி 10 மணிக்கு பிறகு நிலைமை சரியானது.என் மகன் கரண்ட் வந்ததும் ஃபோன் செய்தான்.உடனே எடுத்தார்கள். ஏன் அங்கிள் கரண்ட் வந்தா மட்டும் ஃபோனை எடுக்கிறீங்க என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்து விட்டான். அவர் அன்று இரவு நிம்மதியாக இருந்து இருக்கமாட்டார் என்பதில் அவனுக்கு அப்படி ஒரு அல்ப சந்தோஷம்.இன்னொரு நாள் முழு நாள் கரண்ட் இல்லை.அப்படி போனால் மாலை 5 மணிக்கு மேல் தான் வரும். ஆனால், போனவாரம் 4 மணிக்கே வந்தது. உடனே ஃபோன் செய்தவன் இன்னும் ஒரு மணிநேரம் இருக்கே என்ன அவசரம் கரண்டிற்கு என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்து விட்டான். என்னைக்கு ஆட்டோ வரப்போகுதோ தெரியலை.

முன்பெல்லாம் என் இரண்டு பசங்களுக்காக எல்லா விஜய் படங்களும் பார்த்து விடுவேன். கட்டாயம் கூட்டி போகணும். இப்ப என பசங்க பெரிசாகி விட்டார்கள் தப்பித்தோம் என்று நினைத்தால். மேலே ஃபோட்டோவில் இருக்கும் என் தம்பி மகன் விஷால் விஜயின் பெரிய ரசிகனாக உள்ளான். சுறா சூப்பராய் இருக்கும் என்று சொல்லி ஒரே அடம்.சரி என்று கூட்டிப் போனேன். சுறா கிட்ட கடி வாங்கி வந்தேன்.ஆனால் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.


2 comments:

Vidhya Chandrasekaran said...

இன்னும் சுறா பார்க்கமால் எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறேன்:)

மங்குனி அமைச்சர் said...

வசந்த பாலன் மிகை படுத்தி எடுத்து விட்டாரோ என்று தோன்றியது.
///


அமாங்க மேடம்