Tuesday, January 22, 2013

விடிய விடிய பேசணும்

எப்ப மீட் செய்தாலும் பார்த்து பல வருஷம் ஆன மாதிரி விடிய விடிய பேசி விடிந்ததும் காலை 6 மணிக்கு நான் எழுந்து வழக்கம் போல் என் வேலையினை பார்க்க தொடங்க எழுந்திருக்கவே முடியலைக்கா இனிமேல் உங்க கூட பேசவே கூடாது என்று ஒவ்வொரு முறையும் சிரித்துட்டே சொல்லுவாள்.

ஏனெனில் காலையில் கன்னாபின்னாவென எல்லோரிடமும் திட்டு வாங்குவோம். நாங்க இருவரும் திண்டுக்கல்லில் சுத்தாத இடம் கிடையாது.ஹைனட்டிக் ஹோண்டாவிற்கு அவள் தான் எப்பவும் ட்ரைவர்.மதிய வேளைகளில் திடீரென்று வீட்டில் யாருக்கும் தெரியாமல் தியேட்டருக்கு எஸ்ஸாகி விடுவோம். அப்புறம் வந்து மண்டகப்படி தான்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,சோழவந்தான் திருவிழா, மதுரை என்று திடீரென்று பக்தி ரசம் சொட்ட சொட்ட ஒரே கோயில் சுற்று தான். 4 வருடங்கள் தொடர்ச்சியாக திருப்பதிக்கு 10 நாட்கள் ஸ்ரீவாரி சேவாக்கு சென்று அங்கு தினம் சேவை செய்வதை இருவரும் மிக விரும்பி செய்தோம்.எதற்கு சிரிக்கிறோம் என்று தெரியாது சிரித்து கொண்டே இருப்போம்.அங்கு சேவாக்கு வந்திருந்த ஒருவர் உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்குது சுத்தி போடுங்க மேடம் என்று ஒரு நாள் சொல்லி சென்றார். எங்கள் குலதெய்வம் ஐயர்மலை எப்ப மலை ஏறினாலும் ஒரு துண்டின் ஒரு முனையினை பிடித்து கொண்டு அவள் முன்னேற நான் இன்னொரு முனையினை பிடித்து கொண்டு பின்னேறுவேன்.அப்பவும் பேசிக் கொண்டே.

 என் மாமா  இருவரில் ஒருவர் ஆணாக இருந்தால் கல்யாணம் செய்து கொடுத்து இருப்பேன் என்பார் கிண்டலாக.  குடும்பத்தில் எதாவது திருமணம் என்றால் ஒரு 10 பேரின்(கஸின்ஸ்) நகைகளை ஒன்றாக்கி நீ இதை ரிஷப்ஷனுக்கு போட்டுக்கோ, இதை திருமணத்திற்கு போட்டுக்கோ என்று ஒரு பேப்பரில் லிஸ்ட் எழுதி வைத்து கொண்டு எல்லோருக்கும் மேக்கப் செய்து விட்டு நாங்கள் இருவரும் கடைசியில் தான் பேசி கொண்டே ரெடியாவோம்.

அவளுக்கு திருமணம் ஆனது. இரண்டு குழந்தைகள். 6 வயதில் பையனும்,5 வயதில் பெண்ணும்.  நாங்க முன்பு மாதிரி சுத்த முடிவதில்லை. ஆனாலும், பார்க்கும் போதெல்லாம் விடிய விடிய பேசுவது மட்டும் இன்னும் தொடர்கிறது.

ஜனவரி 18 ஆம் தேதி இரவு கை,கால் மரத்து போன மாதிரி உணரவும் அவள் கணவருடன் டூவீலரில் ஹாஸ்பிட்டல் போயிருக்கிறாள். போய் என்ன ஏதுவென்று டாக்டர்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே ஸ்ட்ரோக் வந்து வலது பக்கம் செயல் இழந்து விட்டது.20 ஆம் தேதி திருச்சியில் அவளை ஹாஸ்பிட்டலில் பார்த்த போது முதன் முதலாக இருவரும் பேசாமல் 20 நிமிடங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை.பொங்கி வந்த அழுகையினை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு என்ன வித்யா இந்த வருடம் திருப்பதிக்கு ஸ்ரீவாரி சேவாக்கு ஏப்ரலில் போலாமா, மேயில் போலாமா என்று கேட்கவும் சின்னதாய் ஒரு சிரிப்பு அவள் முகத்தில்.ரொம்ப வீக்கா இருக்க அதான் பேச முடியலை.சீக்கிரம் எழுந்திருக்கும் வழியினை பாரு அப்படி இப்படின்னு தனியா நான் மட்டும் அவள் பதிலையே எதிர்பார்க்காமல் பேசிட்டு வந்திருக்கேன். ஹாஸ்பிட்டலில் டிஸ்சார்ஜ் செய்ததும் கேரளாவிற்கு சிகிச்சைக்கு போகலாம் என்று அவளின் டாக்டர் தம்பி முடிவு செய்து இருக்கிறான். யாரை நொந்து கொள்வது? பரம்பரையாக ஒரு நோய் வரும் என்றாலும் கூட 35 வயதில் இப்படி எல்லாம் நடக்குமா? அந்த இரண்டு குழந்தைகளும் என்ன பாவம் செய்தனர்?என்ன செய்தால் அவள் குணமடைவாள் என்று தெரியாமல் விதியினை நொந்து கொண்டு நாங்கள் இருக்கிறோம்.

வித்யா என் மாமாவின் பெண். என் கணவருக்கு அண்ணா பெண். சிறிய வயதில் நாங்க இருவரும் திண்டுக்கலில் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்ததால் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். நான் அத்தை பெண்,சித்தப்பா மனைவி என்றாலும் என்னை அக்கா என்றே கூப்பிடுவாள்.

வரும் மார்ச் மாதம் அவளுக்கு மிகவும் பிடித்த தொழிலான பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போவதாய் மிக நம்பிக்கையாய் நியூஇயர் விஷ் செய்த போது கூறினாள்.அவளின் ரொம்ப நாள் கனவு அது.

அவளின் நியாயமான கனவு நிறைவேற வேண்டும். யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை.


கட்டாயம் நாங்களிருவரும் விடிய விடிய பேசுவோம் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.

Wednesday, January 09, 2013

இதெல்லாம் நமக்கு சரிபடாதா?

காலை 7.30க்கு பள்ளி என்பது தமிழக அரசின் புது ஐடியா.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் வரும்.எனவே இரவில் எந்த டி.வி சீரியலில் மாட்டாமல் குழந்தைகள் சீக்கிரம் தூங்க பழகி விடுவார்கள்.பெற்றோரும் தான். இந்த அரசு பஸ்கள் காலையில்,முக்கியமாக மதியத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே என்பது போல் கூட்டம் இல்லாமல் ஃப்ரீயாக செல்லலாம். கண்டக்டர்களும் பள்ளிகளுக்கு அருகில் நிறுத்தி அமைதியான முறையில் ஏற்றி வருவார்கள். இப்போ மாதிரி குழந்தைகளை கண்டாலே பஸ்ஸை நிறுத்தாமல் ஓடுவதை போல் செய்ய மாட்டார்கள். சாலைகள் இந்த நேரத்தில் கொஞ்சம் ட்ராஃபிக் குறைவாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சைக்கிளில் சென்று வருவதை விரும்பி சைக்கிள் உபயோகம் அதிகமாக சான்ஸ் இருக்கே.

காலையில் கஞ்சி,ஜூஸ்,பால் போன்று நல்லா இரண்டு பெரிய க்ளாஸ் கொடுத்து,காலை சாப்பாட்டை கையில் கொடுத்து விடுவதால்(சப்பாத்தி,பூரி போன்று) குழந்தைகள் ஆரோக்யமாக இருக்குமே. மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்து முழு சாப்பாட்டை சூடாக காய்கறி,கீரைகளுடன் சாப்பிடலாம்.ப்ரைமரியில் படிக்கும் குழந்தைகள் மதியம் வீட்டில் 2 மணிநேரம் தூங்கலாம்.

 பள்ளிகளில் மதிய சாப்பாட்டிற்கு பிறகு ஒரு மணிநேரம் எந்த விதத்திலும் குழந்தைகளை ஒரு பாடத்தின் மீது கவனம் செய்ய வைக்க முடியவே முடியாது. எப்படா பெல் அடிக்கும் என்ற மனநிலையில் தான் கட்டாயத்தின் பேரில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.அந்த நேரத்தில் பெரும்பாலும் போர்டில் எழுதி போடும் வேலை தான் பெரும்பாலும் ஆசிரியர்களின் வேலையாக இருக்கும். புதியதாக பாடம் சொல்லி தருவதை மதிய நேரத்தில் அவாய்ட் செய்து விடுவர்.

 இந்த நேரப்படி அம்மா வேலைக்கு போகாமலோ இல்லையென்றால் பாட்டி,தாத்தா அவர்கள் வீட்டிலோ இருக்க வேண்டும். அப்போதான் இந்த முறை நல்லாயிருக்கும்.எனவே கூட்டு குடும்பத்தின் அருமை மக்களுக்கு புரியும்.இல்லாட்டி ஏற்கனவே மாலை 4,5 மணியிலிருந்து வேலைக்கு போன அம்மாவிற்கு காத்து இருக்கும் குழந்தைகள் இப்போ மதியத்திலிருந்து காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். AFTER SCHOOL என்ற பள்ளிகள் அல்லது டியூஷன் செண்டர் புற்றீசல் போல் முழைத்து சம்பாதிக்க தொடங்கும். மேட்னி-ஷோக்கள் தியேட்டர்களில் கொடிக்கட்டும். டீன் - ஏஜ் குழந்தைகள் நன்கு சுத்த ஆரம்பிக்கும்.டைம் அதிகம் கிடைப்பதால் மாணவர்களின் நெட் உபயோகம் அதிகரிக்கும்.

 தனியார் பள்ளிகள் மாணவர்களை மதியம் விட்டால் கூட ஆசிரியர்களை மதியம் வீட்டிற்கு விட ரொம்ப யோசிப்பார்கள். ஆசிரியர்கள் 4 மணிவரை கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுக்கும் வீடு மற்ற வேலைகள் இருக்குமென்ற கவலையே கொள்ள மாட்டார்கள்.இதில் பெரும் பாதிப்பு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தான். தனியார் பள்ளிகளில் 90% பெண்கள் தான் ஆசிரியராக பணியில் இருக்கிறார்கள். ஆசிரியர் பணியில் ஈடுபாடு இனி வரும் காலங்களில் இந்த நேர மாற்றத்தால் இளைஞர்களுக்கு குறைந்து விட வாய்ப்பு உள்ளது.


 என்ன செய்யலாம்?

3 கி.மீட்டருக்குள்ளே தான் வீடும் பள்ளியும் இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெற்றோரும் கட்டாயம் கடைபிடித்தாலே இந்த பிரச்சனை பெரிதும் தீரும்.சைக்கிளுக்கென்று சாலையில் தனி பாதை ஏற்படுத்தினால் இன்னும் நல்லாயிருக்கும்.சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு பள்ளியில் ஏதேனும் மார்க் உண்டு என்று கூறினால் சோம்பேறிகளாகி கொண்டு இருக்கும் மாணவ சமுதாயம் சைக்கிளை உபயோகப்படுத்த தொடங்கும்.தனியார் பள்ளிகள் சம்பாதிக்க வேண்டி வாங்கி வைத்திருக்கும் பேருந்துகளை தொலைவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பயன் படுத்தலாம்.


 என் பையன்கள் இருவரும் தாம்பரம் கேந்திரிய வித்யாலயாவில் 10 வருடம் படித்தனர். அப்போது காலை 7.30-2 மணி வரை பள்ளி நேரம்.காலை 8.30க்கு டிஃபன் ப்ரேக். டவுண் பஸ்ஸில் 3 கி.மீட்டர் சென்று வந்தார்கள். காலை கூட்டம் இருந்தாலும் மதியம் அரசு பேருந்தில் அந்த பள்ளி மாணவர்கள் மட்டுமே சந்தோஷமாக வருவார்கள். அந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களை விட மிக சுறுசுறுப்பாய் இருப்பார்கள் இதை நான் மற்ற பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன்.நேரிலும் பார்த்து இருக்கிறேன். மதியத்திலிருந்து இரவு வரை நேரம் அதிகம் இருக்கும்.வீட்டு பாடங்கள் படிக்க செய்ய அதிக நேரம் இருக்கும்.மற்ற டியூஷ்னகளுக்கும் செல்ல நேரம் கிடைக்கும்.இந்தியாவில் இருக்கும் அனைத்து கேந்திரிய வித்யாலயாவும் இந்த நேரத்தில் தான் செயல்பட்டன. ஷில்லாங்,ஊட்டியில் இருக்கும் குழந்தைகளும் காலை குளிரில் இந்த நேரத்திற்கு பழக்கபட்டே இருக்கிறார்கள்.

நான் சிட்டியில் இருக்கும் பள்ளிகளை மட்டும் கருத்தில் கொண்டு இதை எழுதி இருக்கிறேன். கிராமத்து பள்ளிகளுக்கு இந்த டைம் சரி படுமா தெரியலை. எனினும் மதிய நேரத்தில் வீட்டிற்கு வருவதால் அவர்களுக்கும் பிரச்சனை இருக்காது என்றே நினைக்கிறேன். தூரமாய் இருக்கும் வீட்டிற்கு இருட்டும் முன்பே போகலாம் .இருட்ட ஆரம்பிக்கும் முன்பே பாடங்களை பாதியாவது படித்து முடிக்கலாம். (கரெண்ட் பிரச்சனை).பார்க்கலாம் என்ன டைம் அரசு முடிவு செய்கிறார்கள் என்று?