Thursday, December 09, 2010

என்ன அவசரம் ராஜி?

ராஜியை முதல் முதலில் என் கல்லூரி முதல் வருட முதல் நாளில் பார்த்தேன்.
எங்கள் வகுப்பில் மேக்ஸிமம் அனைவரும் பாவாடை தாவணியில் இருக்க நானும், ராஜியும் சுடிதாரில் இருந்தோம். நாங்கள் படித்த பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் மாணவிகளின் உடைக்கு பட்டபடிப்பு படிக்கும் போது எந்த கட்டுப்பாடும் கிடையாது.

சுடிதார், மிடி, கவுன்,பாவாடை சட்டை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடையில் போகலாம்.
அதனால் காலேஜ் போவதே ஜாலியா இருக்கும்.மூன்றாம் வருடம் தான் சில நாட்கள் சேலையில் சென்று இருக்கிறேன்.

என் அப்பா வேலை விஷயமாய் சென்னை போகும் போதெல்லாம் நல்ல ட்ரெஸ்களை வாங்கி வருவார். எனவே, தினம் விதமாய் ட்ரெஸ் போட்டு போவேன். தான் மட்டும் தான் அப்படி வரணும் என்று ராஜிக்கு அவ்வளாவாக என்னை பிடிக்காது.ஆனாலும் பேசிக் கொள்வோம்.ஏனெனில், என்னுடைய ஃப்ரெண்ட்களில் சிலர் அவளுக்கும் ஃப்ரெண்ட்ஸ்.

மிக ரோஷக்கார பெண் ராஜி. முதல் நாளில் பேசிய சில மாணவிகளிடம் மட்டும்தான் கடைசி வருஷம் வரை ஃப்ரெண்ட்ஸாக இருந்தாள்.

நானோ எங்க டிபார்ட்மெண்ட் இல்லாமல் பஸ் ஃப்ரெண்ட், ஆங்கிலம், தமிழ் கிளாஸ்ஸிற்கு சேர்ந்து உட்காரும் போது பாட்டனி, கெமிஸ்ட்ரி என்று அனைத்து பட்டப்படிப்பு மாணவிகளுடனும் அரட்டை அடிப்பேன்.

அவள் அம்மா கூட ஏதோ சின்ன மனஸ்தாபம் என்று ஃப்ரெண்ட்ஸ்களுடன் இனிமேல் எங்கும் வெளியில் போக மாட்டேன் என்று சொல்லி பிறகு அவள் அம்மா போக சொல்லியும் எங்களுடன் எங்கும் வராத பிடிவாதக்காரி.அவளுடைய அப்பாவிற்கு அவள் மிக செல்லமான பெண்.அதனால் மிக பெருமை படுவாள்.

நான் நேற்று பேசியதை இன்றே மறந்து விடும் ரகம்.

முதல் டெஸ்ட் மார்க் வந்தது. நான் அவளை விட அதிக மார்க் எடுத்திருந்தேன். அப்போதிலிருந்து போட்டி ஆரம்பித்தது.

ஆனால் கடைசி வருடம் வரை நான் தான் முதல்.

கமல் படம் என்றால் இருவருக்கும் உயிர்.நான் டவுணில் இருந்ததால் எல்லா படங்களையும் முதல் வாரமே பார்த்து விட்டு காலேஜிற்கு செல்வேன். என்னிடம் கதை கேட்க க்ளாசே காத்து இருக்கும்.
ராஜி மட்டும் என்னை கண்டுக் கொள்ளவே மாட்டாள்.

ஒரு முறை ஒரு கமல் படம் நான் மார்னிங் ஷோ பார்த்துட்டு வெளியில் வருகிறேன். ராஜி
மதிய ஷோவிற்கு தியேட்டரில் வெயிட் செய்கிறாள். என்னை பார்த்ததும் இந்த படம் உன்னை முந்தி நான் பார்ப்பேன் என்று நினைத்தேன். ஒரு ஷோவில் முந்திட்டியே என்று சொன்னாள்.நான் தான் முதலில் பார்க்கணும் என்று திட்டம் எதுவும் போடவில்லை.

பட்டபடிப்பு முடித்து நான் முதுகலை சேர்ந்தேன். அவள் வீட்டில் கோ-எஜுகேஷன் என்று அவளை முதுகலைக்கு அனுப்பவில்லை.பார்க்கும் இடங்களில் பேசிக் கொள்வோம்.

முதுகலை முடித்து அந்த வருடமே எனக்கு ஜூன் மாதம் 7-ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு ராஜி வந்த போது அவளின் திருமண பத்திரிக்கையினை எனக்கு தந்தாள். ஜூன் 15-ல் அவளின் திருமணம் என்று அப்போது தான் சொன்னாள்.இப்பவும் முந்திட்டே அமுதா என்று சிரித்துக் கொண்டே போனாள்.

அடுத்த வருடம் எனக்கு நகுல் பிறந்தான் ஜூலை 31-ல் அவளுக்கு ஆகஸ்ட் 29-ல் நிவேதிதா பிறந்தாள்.

அடுத்த இரண்டு வருடம் அவளுடன் தொடர்பே இல்லை. கணவ்ருக்கு ட்ரான்ஸ்ஃப்ர் ஆகி கொடைக்கானல் போனதாய் அவளை பற்றி கடைசியாய் நான் தெரிந்து கொண்டேன். போட்ட கடிதங்களுக்கு பதிலே இல்லை.எனவே நானும் செய்வதறியாது இருந்து விட்டேன்.

அதன் பின் ஒரு பத்து வருடங்கள் கழித்து மீனா என்ற இன்னொரு ஃப்ரெண்ட் மூலமாய் ராஜியினை பற்றி தெரிந்தது.

தெரிந்துக் கொள்ளாமல் போயிருக்கலாம் என நினைத்தேன். ராஜியின் குழந்தை 2 வருடத்தில் நிமோனியா தாக்கி இறந்து போனதாம். அவளின் கணவன் மிக பெரிய குடிகாரனாம்.ஒரு முறை கொடைக்கானலில் டூவீலரில் போகும் போது இரண்டு பேரும் கீழே விழுந்து அதில் ராஜிக்கு பெரியதாக அடிப்பட்டு அவள் அம்மா வீட்டில் 2 வருடம் படுத்த படுக்கையாக இருந்து இருக்கிறாள்.

ஃப்ரெண்ட்களிடம் இந்த விஷயத்தினை சொல்ல கூடாது என்று சொல்லி விட்டாளாம். மீனா அவளின் பின் வீட்டில் இருந்ததால் ராஜியினை அடிக்கடி பார்த்து இருக்கிறாள்.

உடல் நிலை மிக மோசமாக ஒரு நாள் ராஜி இறந்தும் விட்டாள். அவள் கணவன் குடித்து குடித்து அடுத்த ஒரு வருடத்திலேயே இறந்தும் போனாராம்.

மிக ப்ரெஸ்டிஜ் பார்க்கும் ராஜிக்கு ஏன் இந்த வாழ்க்கை.எப்பவும் எதிலும் நான் முந்திக் கொள்கிறேன் என்பதில் ராஜிக்கு பொறாமை உண்டு. ஆனால், சாவில் ராஜி முந்திக் கொண்டாள்.

சொந்தத்தில் திருமணம் செய்பவர்களை அவளுக்கு பிடிக்காது.கிண்டல் செய்வாள்.அப்படி செய்தால் சஸ்பென்ஸ் இருக்காது, சுவாரசியமாய் வாழ்க்கை இருக்காது என்பது அவளுடைய வாதம். அவளின் அக்கா, தங்கை இருவரும் சொந்தத்தில் திருமணம் முடித்து நன்றாக இருக்கிறார்கள்.

ராஜி எனக்கு ரொம்ப க்ளோஸான ஃப்ரெண்ட் இல்லை. ஆனால் அடிக்கடி அவளை நினைத்துக் கொள்வேன். திருநெல்வேலி போகும் போதெல்லாம் அவளின் வீட்டிற்கு சென்று அவள் பெற்றோரை பார்த்து விட்டு மிகுந்த மனவலியுடன் அவளை பற்றி நினைவு கூர்ந்து வருகிறேன்.என்ன அவசரம் ராஜி.