ராத்திரியெல்லாம் முழித்து இருப்பான்.பகல் எல்லாம் தூங்குவான். எங்களை அம்மாகிட்ட விடவே மாட்டான். நடக்க ஆரம்பித்தவுடன் ஓடிக் கொண்டே இருப்பான். நடக்கவே தெரியாது. அவனுடைய ஒரு வயதிலேயே பேசவும் ஆரம்பித்தான். ஸ்கூலில் இருந்து நாங்கள் வரும் வரை காத்து இருப்பான். எங்களை படிக்கவே விடமாட்டான். என்னை அக்கா என்று ஒரு நாளும் கூப்பிட்டதில்லை. வீட்டை தலைகீழாக மாற்றினான். எந்த சாமானும் அதன் இடத்தில் இருந்தால் அவனுக்கு பிடிக்காது. தலையணையை எடுத்து பாத்ரூமில் நனைத்து வைப்பான். டம்ளர், கிண்ணம், கரண்டி எல்லாம் எப்பவும் சேரில் தான் இருக்கும். பேப்பர் கையில் கிடைக்கும் புத்தகம் எதுவும் முழுசாய் இருக்காது. எங்கள் புத்தகங்கள் எல்லாம் அவன் கையில் மாட்டினால் பீஸாகிடும்.
அவனின் மூன்று வயதிற்குள் 3 பூரான்,2 தேள் என அவன் கையிலேயே அடித்து கொன்றான். பூச்சி வந்தது அடிச்சேன் என்று எங்களை கூட்டி கொண்டு காண்பிப்பான். ஒரு முறை உள்ளங்கை புஸ்ஸென்று இட்லி மாதிரி வீங்கி போனது. இவன் செய்யும் சேட்டையை பார்த்த கணக்கு டீச்சரான என் அப்பா இவனை டவுண் ஸ்கூலில் சேர்த்தால் பஸ்ஸில் போய் வருவது சரி படாது என படிக்கிற பிள்ளை எந்த ஸ்கூலிலும் படிக்கும் என்று சொல்லி வீட்டருகே ஒரு பழைய பஞ்சாயத்து பள்ளியில் சேர்த்து விட்டார்.
அன்று ஆரம்பித்தான் அவன் என்ஜாய்மெண்டை. காலை 10 முதல் 4 வரை ஸ்கூல். 9.55க்கும் வண்டியினை எடுத்தால் அந்த வண்டி அடிக்கடி வீட்டிற்கு விசிட் செய்யும். பைக் ஓட்டும் பாவனையில் கையினை வைத்துக் கொண்டு வாயில் டுர் டுர் என்று சத்தம் விட்டுக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பான். 11 மணிக்கு டீ குடிக்க வீடு,12.30க்கு மதிய சாப்பாட்டிற்கு வீடு,3 மணிக்கு மறுபடியும் பால்,டிபன் சாப்பாட வீடு,யாரேனும் விருந்தினர் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு வீட்டினை காண்பிக்க வீடு என்று வீட்டிற்கும் ஸ்கூலிற்கும் அலைவது அவனுக்கு ரொம்ப பிடித்தது. அவன் ஸ்கூலில் ஒன்னாப்பு முதல் அஞ்சாப்பு வரை மொத்தமே 18 பேர் தான் இரண்டே இரண்டு ஆசிரியை தான். வீட்டில் இருக்கும் நேரத்தில் எதாவது மரத்தின் கிளையில் தான் இருப்பான்.
ஆனால், இவன் தான் க்ளாசில் எப்பவும் ஃப்ர்ஸ்ட் ரேங்க். இரண்டு பேர் தான் ஒரு க்ளாஸில். இவன் சேட்டை குறையணும் என்று அம்மா சொல்லி கொடுக்கும் சாமி பாடல், ஸ்லோகங்களை ஸ்கூல் ஆண்டுவிழாவில் சொல்லி பரிசாக வாங்குவான். கணக்கு சூப்பராக போடுவான். மற்ற சப்ஜெக்டிற்கு பெரிசாக அலட்டி கொண்டதேயில்லை.
அஞ்சாப்பு முடித்தவுடன் என் அப்பா ஸ்கூலிலே ஆறாவது முதல் +2 வரை படித்தான். அந்த ஸ்கூல் அந்த ஊரிலேயே இருக்கும் ஒழுங்காய் படிக்காத இரண்டாவது, மூன்றாவது வருடம் ஒரே க்ளாஸில் படிக்கும் மாணவர்களுக்கானது. எனவே, அங்கும் இவன் தான் நல்லா படிப்பான். படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கும் என்பார் என் அப்பா. அவரின் கனவு நிறைவேறியது.
ஆனால் அவன் நல்ல நிலைக்கு வருகையில் அதை பார்க்க என் தந்தை இல்லை. அவனின் 15வது வயதில் அவர் இறந்து விட்டார்.என் திருமணத்திற்கு பிறகும் என்கூடவே தான் இருந்தான். இன்று என்னுடைய தம்பி சாஃப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறான்.
என்றாவது ஒரு நாள் என்னை அக்கா என்று அழைப்பான் என நினைத்தேன். ஆனால்,எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் சில வருடங்களாய் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை என புரிகிறது.முதலில் பேசாமல் இருந்தது மிக கஷ்டமாய் இருந்தது. இப்போது பழகிவிட்டது.
