Tuesday, November 20, 2012

துப்பாக்கி விஷாலுடன்

15 வருடங்களாக நான் பார்க்க வேண்டிய படங்களுக்கு துணையாக என் பசங்க நகுல்,ரிஷியும் பசங்க பார்க்க வேண்டிய படங்களுக்கு துணையாக நானும். பார்த்த படங்கள் குருதி புனல்,காதலுக்கு மரியாதை,மகாநதி,லவ் டுடே,முத்து,இந்தியன்,ஹேராம்,துள்ளாத மனமும் துள்ளும்,குஷி,விருமாண்டி,பத்ரி,ஷாஜஹான்,யூத்,திருமலை,படையப்பா,
சந்திரமுகி,கில்லி,போக்கிரி,காக்க காக்க என்று போய் கொண்டிருந்தோம்.

அப்புறம் சடாரென்று பசங்க இரண்டும் அவர் அவர் ஃப்ரெண்ட்ஸ்களுடன் முதல் நாள் முதல் ஷோ காலை 8 மணிக்கே(வெளங்கிடும்) போக ஆரம்பிக்க தமிழ் படம் பார்க்க துணைக்கு ஆள் கிடைக்காமல் ஞே என்று முழித்து கொண்டு இருந்த போது தான் தம்பி மகன் விஷாலும் யார் கூட படம் பார்க்க செல்வது என்று பலத்த யோசனையில் இருந்த போது இரண்டு பேரும் செட்டானோம்.வில்லு,வேட்டைக்காரன்,சுறா என்றும் தசாவதாரம்,சிவாஜி,எந்திரன்,வேலாயுதம் என்றும் செம செட்டானோம். ஆனாலும் நொந்து போகாமல் செம படம்,சூப்பர் ஃபைட் ,செம பாட்டு என்று விஷாலுடன் சேர்ந்து அவன் மனம் நோக கூடாதே என்று ராகம் பாடி கொண்டு இருந்தேன்.என் வீட்டுக்காரர் உங்களை நம்பி தான் தமிழ் திரையுலக தாயாரிப்பாளர்கள் பொழப்பு நடத்துறாங்கன்னு சொல்வார்.

ஆனாலும் என் பொறுமையினை சோதிக்கும் விதமாய் விஷாலின் கட்டாயத்தின் பேரில் வெடி,சிறுத்தை,ஒஸ்தி என்று நொந்து போனேன்.எனினும் தமிழ் படம் தியேட்டரில் போய் பார்ப்பதை நிறுத்த முடியாமல் நிச்சயம் ஒரு நல்ல படம் விஷாலுடன் சேர்ந்து பார்ப்போம் என்று நம்பினேன்.ஆனால் விதி யாரை விட்டது.ஒரு கல் ஒரு கண்ணாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள்,மசாலே கஃபே,சகுனி என்று பார்த்து தள்ளினோம்.

நண்பன்,பசங்க.வே.ஆடு விளையாடு, வானம்,கோ விஷாலுடன் தான் பார்த்தேன். அப்பாடா ரொம்ப நாள் கழித்து நல்ல படங்கள்.

சகுனி பார்க்கும் போது கார்த்தி ஜெயில் போகும் போது விஷால் தூங்கி விட்டது. படம் முடியும் போது எழுப்பி விட்டேன். வெளியில் வந்து என் மகனின் அப்பாச்சிக்கு காத்து இருக்கும் போது விஷால் சொன்னது.மம்மி, கொஞ்சம் சின்ன படமா எடுத்து இருக்கலாம்ல பாருங்க நான் தூங்கியே விட்டேன் என்றான்.நீ மட்டுமா தூங்கின செல்லம் நானும் கொஞ்சம் தூங்கிட்டேன் என்றேன்.

கடந்த புதனிலிருந்து துப்பாக்கி பார்க்க காத்திருந்து நேற்று மாலை காட்சிக்கு போனோம்.

ப்ளஸ்:

விஜய் விஜய் விஜய் விஜய் விஜய் விஜய்

தங்கையை மீட்டு கொண்டு காரில் வரும் போது காலியான ஜூஸ் டப்பாவில் அப்பாவியாய் முகம் வைத்து கொண்டு ஜூஸ் உறிஞ்சுவது,
சத்யனிடம் சஸ்பென்ஸ் சொல்லாமல் காஜலுடன் ஜூட் விடுவது,
ஐ ஆம் வெயிட்டிங் என்று வில்லனிடம் சொல்வது.இன்னும் இன்னும் விஜய் ராக்ஸ்.
காஜலுக்கு நடிக்க வருகிறது. ஆனால், அவருக்கு சீன்கள் கம்மி.
வில்லன் வித்யுத் ஜம்வால் ஸ்கிரீனில் வரும் போதெல்லாம் செம ஸ்டைலாய் இருக்கிறார். மாடலிங் செய்தவராம்.
நல்ல வேளை விஜய் அம்மா அப்பா,தங்கைகளை அழ வைக்கலை.
தப்பு செய்த அதிகாரிகள் செத்து போகும் விதம். கடைசியில் வில்லன் செய்யும் மாஸ்டர் ப்ளான் செம ட்விஸ்ட்.

மைனஸ்:

கடைசி கப்பல் சண்டை. எந்த டெரரிஸ்டும் அதற்கு ஒத்து கொள்ள மாட்டார்கள்.வேறு மாதிரி புத்திசாலிதனமாய் முடிவு இருந்திருக்கலாம்.
தேவையே இல்லாத பாடல்கள்.
வீட்டிற்குள் தீவிரவாதியினை ஒழித்து வைப்பது.
சத்யனுக்கு இன்னும் நகைச்சுவை சேர்த்திருக்கலாம்.


Wednesday, November 14, 2012

ஒரு அழகு படமும் ஒரு அழுக்கு படமும்

இரண்டாவது முறை வாழ்க்கை கிடைக்காது-
Zindagi Na Milegi Dobara,(ZNMD)

 Zoya Akhtar என்ற பெண் டைரக்டர் எடுத்த படம். Farhan Akhtar தயாரித்து உள்ளார். தம்பி தயாரிக்க அக்கா இயக்கிய படம். HRITHIK ROSHAN,ABHAY DEOL,FARHAN AKHTAR இவர்களுடன் காத்ரீனா கயிஃப் நடித்த படம்.படம் முழுவதும் ஸ்பெயின்,எகிப்தில் எடுக்க பட்டுள்ளது.மூன்று ஃப்ரெண்ட்களும் பேச்சிலராக இருக்கும் போதே வாழ்க்கையை நன்கு அனுபவிக்க ஸ்பெயின் போகிறார்கள்.ஸ்கூபா டைவ்,ஸ்கை டைவ்,புல் ரன் என்று மூன்று வித விளையாட்டுகளில் மூவரும் ஈடுபடுவதை கொஞ்சமா கதையும், நிறைய பணமும் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள். காத்ரீனா,ஹிரித்திக் ரோஷன் காதலும், காரில் மூன்று நண்பர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதும் நல்லாயிருக்கு. Javed Akhtar கவிதை சில காட்சிகளில் வந்து கொண்டே இருக்கிறது. இதர்,உதர்,ஸிந்தஹி,பாரத்,மேரா,துமாரா,கஹாங்,ஹவா,ஹை பஹூத்,அச்சா அப்படி இப்படின்னு 30 வார்த்தைகள் மட்டுமே ஹிந்தியில் தோடா தோடா தெரியும் ஹை. எனவே, கவிதைகளை ரசிக்க முடியலை.

 16 டன் தக்காளி போர்ச்சுகலிலிருந்து ஸ்பெயினிற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கொண்டு வந்து தக்காளி பாட்டை ஷூட் செய்தார்களாம்.இந்த பாடலில் நடித்த பிறகு நால்வரும் ரொம்ப நாளைக்கு தக்காளி சேர்த்த எந்த உணவையும் சாப்பிடவேயில்லையாம்.இந்த பாட்டை பார்த்தாலே ஒரு மாதத்திற்கு தக்காளி வேண்டாம் போல.

                             படத்தில் வரும்  ஊர்கள்,ஹீரோ,ஹீரோயின் அழகோ அழகு.


DELHI BELLY:

முதல் படத்தில் கவிதையை மட்டும் தான் ரசிக்க முடியவில்லை. இதில் நிறைய காட்சிகளை பார்க்கவே முடியவில்லை. டெஸ்ட்டிற்காக லேப்பிற்கு கொடுக்க வேண்டியதை(?) கடத்தல்கார்ருக்கும்,கடத்தல்காரருக்கு கொடுக்க வேண்டிய வைர பார்சலை லேப்பிற்கும் கொடுத்து தொலைப்பதால் என்ன நேரிடுகிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார்கள்.ரொம்ப நேரம் ஆங்கிலத்திலேயே அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். திடீரென்று ஹிந்தியிலும் பேசினார்கள். இது ஹிந்தி படம் தானா? அமீர்கான் தயாரித்து இருக்கிறார். அழகான இம்ரன் இதில் ஒரு சீனில் கூட அழகா இல்லை. டில்லியின் மிக குறுகலான சந்துக்கள்,ஹீரோ தங்கி இருக்கும் அந்த அரத பழைய வீடு என்ன ஒரு வீடு.பார்த்தாலே ஓடி விடலாம் போல இருக்கிறது.  அப்படி ஒரு வீட்டை அமைக்க இண்டீரியர் டிசைனர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்!!! பேச்சிலர்ஸ் வீடு இவ்ளோ மோசமாகவா இருக்கும்.ஒரு அழகான காரையும் நாசமாக்கி.கடத்தல்க்காரர் அசத்தலாய் நடித்து இருக்கிறார். நிறைய ஹிந்தி வார்த்தைகள் தெரியாததால் இதில் வரும் கெட்ட வார்த்தைகள் புரியவில்லை.நல்லதா போச்சு. இந்த படம் தான் தமிழில் ஆர்யா நடிக்க சேட்டை என்ற பெயரில் வர இருக்கிறது. இங்கே ரொம்ப அழுக்கு இல்லாமல் கண்ணியமா வருமா பொறுத்திருந்து பார்ப்போம்.


படத்தில் வரும் ஊர்,ஹீரோ, ஹீரோயின் அழுக்கோ அழுக்கு.