Thursday, April 19, 2012

மரக்கடையில் இரண்டு நாட்கள்

நெல்லையில் இருந்த போது எங்கள் வீட்டின் பின்னால் மிக பெரிய வேப்பமரம் ஒன்று இருந்தது.அந்த மரத்தின் அடியில் மட்டும் மண் விட்டு மற்ற இடங்களில் சிமெண்ட் பூசப்பட்டு இருக்கும்.கீழ் வீட்டில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது. மாடிக்கு செல்லும் போது தான் அதன் மிக பெரிய கிளைகளும், பறவைகளும், பறவை கூடுகளும் தெரியும்.மிகவும் பெரியதான அந்த மரம் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய வழவின் பாதி இடத்திற்கு நிழல் தந்தது.எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பாதி இடம் நிழலாக இருக்கும். சீசனில் வேப்பங்கொட்டை சேகரித்து கொண்டே இருப்பார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்.எங்கள் காம்பவுண்டில் பழங்கள் அதிகம் விழாது.

ஒரு நாள் மரம் அறுப்பவர்கள் வந்து மரத்தினை தட்டி பார்த்துட்டு மிக வயசானதால் உள்ளே உலுத்து போய் விட்டதாய் அதற்கு விலை பேசி சென்றார்கள். ஒரு கெட்ட நாளில் அதனை வெட்ட ஆரம்பித்தார்கள்.ஒரு வாரமாய் தினம் வெட்டி வெட்டி சாய்த்தார்கள்.தெருவில் போகிறவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள். ரோடெல்லாம் வேப்ப இலைகள், எப்ப பார்த்தாலும் வேப்ப வாசனை.முழு மரமும் மொட்டையாக்கிய பின் எங்கள் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தின் அடி பகுதியினை கட் செய்து வாசல் வழியே வெளியே எடுத்து போக வாசல் பத்தாது என்பதால் சுவரில் பெரிய அளவில் வட்டமாக ஒரு ஓட்டை போட்டு அதன் வழியே எடுத்து சென்றார்கள். ஒரு 50 பேராவது அதனை அன்று வேடிக்கை பார்த்தோம்.
அப்புறம் ஒரு நாள் அதன் வேர் பகுதியினை பெரிய குழி தோண்டி வெளியில் எடுத்தார்கள்.ஆ வென்று பார்த்து கொண்டேயிருந்தோம்.வேப்ப மரம் வெட்ட பட்ட போது மனது மிகவும் கஷ்டப்பட்டது.


இப்ப ஏன் இந்த கொசுவர்த்தி என்றால் சமீபத்தில் ஒரு மரக்கடையில் முழுதாய் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. புதியதாய் நாங்கள் கட்டிய வீட்டிற்கு மரங்கள் வாங்க ஆசாரியுடன் சென்றிருந்தேன். ஆசாரி படாக் படாக் என்று சொல்லியும் நான் ஜன்னல் சட்டங்களுக்கு வேப்பமரம் தான் வாங்க வேண்டும் என்று பிடிவாதமாய் வாங்கியும் விட்டேன். விசாரித்த வகையில் விலையும் மிக குறைவு, நல்லது என்றும் கேள்வி பட்டேன். ரெட் ஹில்ஸ் பக்கத்தில் அல்மாத்தி என்ற இடத்தில் மரம் நன்றாக இருக்கிறது.அங்கு விலையும் பரவாயில்லை. மரக்கடையில் முழுநாளும் அமர்ந்து மரத்துண்டுகளையும்,அதற்கு செய்யும் சடங்குகளையும் பார்த்த போது எங்க வீட்டின் அந்த பெரிய வேப்ப மரம் தான் நினைவிற்கு வந்தது. அது வெட்டப்பட்டு யார் வீட்டு ஜன்னலுக்கு சட்டமாகியதோ.இப்பொழுது நான் வாங்கி இருப்பது யார் வீட்டு வேப்பமரமோ?


Tuesday, April 17, 2012

புது வீட்டிற்கு வாங்க..


ஆச்சு..2011 அக்டோபரில் கடைசியாக ஒரு பதிவு போட்டது.2012 வருடம் தொடங்கியவுடன் ஒரு பதிவு போடணுமே இல்லைனா உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று பரணில்(ட்ராஃப்டில்) இருந்த ஒரு பதிவினை தூசி தட்டி ஜனவரியில் ஒரு பதிவினை போட்டுட்டு அப்படியே காணா போயாச்சு.

2011 மார்ச்சில் கட்ட ஆரம்பித்த வீட்டினை 2012 மார்ச்சிற்குள் கட்டி முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பதிவுலகமே மறக்க ஆரம்பித்தது. பிப்ரவரியில் புது வீட்டிற்கும் குடி வந்தாச்சு. பழைய வீட்டில் ஏற்கனவே இருந்த ஏர்டெல் நெட் புது வீட்டு ஏரியாவில் நெட்வொர்க் இல்லையென்று கை விரித்ததும் தான் ஆஹா பதிவுலகத்தினை மிகவும் மிஸ் செய்தேன். எல்லோரையும் விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் ஜமீன் பல்லாவரம் ஆனேன். புது வீடு இருப்பது ஜமீன் பல்லாவரத்தில்.

எந்த நேரத்தில் அக்கம் பக்கம் என்று என் ஃப்ளாக்கிற்கு பெயர் வைத்தேனோ என் புது வீட்டின் அக்கம் பக்கத்தில் யாருமே இல்லை. தனி வீடு..செம வெளிச்சம் + செம காற்று.அனுபவித்து கொள்ளணும், ஏன் ஆராயணும்? 10 நாட்கள் முன்பு தான் வீட்டிற்கு நெட் வந்தது. பர பரவென்று இரண்டு மாதங்களாக போகாதவர்கள் வீட்டிற்கு(ப்ளாக்கிற்கு) எல்லாம் கடந்த 10 நாட்களாய் போய் வந்தேன். என் வீட்டிற்கு அனைவரும் வருக.