Sunday, February 28, 2010

ஹயக்ரீவரிடம் சொல்லியாச்சு அவர் பார்த்துப்பார்..


திங்கள் கிழமையிலிருந்து +2 பரீட்சைகள் ஆரம்பம். என் அம்மா கேட்டு கொண்டதை அடுத்து சிங்கம்பெருமாள் அருகில் இருக்கும் செட்டிபுண்ணியம் கோயிலுக்கு +2 எழுத போகும் என் பையன் ரிஷியை கூட்டிக் கொண்டு இன்று காலையில் 6 மணிக்கே போனோம்.பேனா, பென்சில், ஹால் டிக்கெட் என்று கையில் வைத்துக் கொண்டு கோயிலில் ஒரே பசங்க கூட்ட்ம்.பெரிரிரிய கியூ.காரை விட்டு இறங்கியதுமே தெரிந்து விட்டது.2 மணிநேரமாவது ஆகும் தரிசனத்திற்கு என்று. நாங்கள் சீக்கிரம் வந்து விட்டதாய் நினைத்து இருந்தால். எங்களுக்கு முன்னாடி இவ்ளோ பேரா.

ஸ்பெஷல் (10 ரூபாய்) டிக்கெட் எடுத்து போனதால் அரைமணி நேரத்தில் அர்ச்சனை முடித்து வெளியில் வர முடிந்தது. கோயில் பிரகார சுவற்றில் எல்லாம் பரீட்சை நம்பரும், பெயரும் எழுதப் பட்டுள்ளது. இங்கு எழுதக் கூடாது என்று பெரிய எழுத்தில் எழுதி இருப்பதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. குமுதம் ஜோதிடம் இதழில் இந்த கோயிலை பற்றி எழுதியதிலிருந்து இங்கு நல்ல கூட்டம். பரீட்சை சமயத்தில் கோயிலை சுத்தி இருக்கும் செட்டி புண்ணியம் கிராமம் ஜே ஜே என்று இருக்கிறது. கோயிலில் பெண்களை விட பையனகள் தான் அதிகம் இருந்தார்கள்.

சிங்கம் பெருமாள் கோயிலிருந்து 3 கிமீ மேற்கில் இந்த தேவனந்தஸ்வாமி கோயில் அமைந்து உள்ளது. 60சி தாம்பரத்திலிருந்து போகும் ஒரே பஸ் ஆகும். சிங்கம் பெருமாள் கோயில் பஸ் ஸ்டாண்டிலிருந்து போக வர ஆட்டோ கிடைக்கிறது. 350 வருட பழைமையான இந்த கோயிலின் கருவரையில் வரதராஜ பெருமாள் இருக்கிறார். ஹயக்ரீவரின் சிலை கடலூர் திருவஹிந்தபுரத்திலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. ஏலக்காய் மாலை இங்கு ஹயக்ரீவருக்கு சூடப்படுகிறது. லஷ்மி இல்லாமல் தனியே இங்கு இருக்கிறார் யோக ஹயக்ரீவர் என்பதால் இந்த கோயில் மிக விஷேசமாம். பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்து போன அரக்கர்களிடமிருந்து வேதங்களை மீட்க விஷணு இப்படி யோக ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தாராம்.

Wednesday, February 17, 2010

ஓ, அதான் இந்த டைரி பத்திரமாய் இருக்கிறதா!!!

எல்லோரும் டைரியில் உள்ளது பற்றி எழுதிகிறார்களே..நாமும் தேடுவோம் என்று பழைய புத்தக குவியலில் தேடினேன்,தேடினேன் கடைசியில் ஒரு சின்ன டைரி கிடைத்தது.டைரியின் வருடம் 1987. முதல் பக்கத்தில் Miss.R.Amutha(B.A Third Year) என எழுதி, என் வீட்டின் அட்ரஸ் எழுதி, வீட்டின் டெலிபோன் நம்பர் 24449 (இத்தூண்டா) என்று எழுதி,weight 42 kg என எழுதி வைத்துள்ளேன்.

ஜனவரி முழுவதும் வாரம் ஒரு நாள் நான் பார்த்த படங்களின் பெயர்களும், நான் கட்டிய புது உடைகளை பற்றியும் இருக்கின்றது. ராஜமரியாதை,பூ விழி வாசலிலே,சிறைப்பறவை,காதல் பரிசு,வெளிச்சம்,சிப்பிக்குள் முத்து என்று ஒரு மாதத்தில் ஆறு படங்கள் பார்த்து உள்ளேன். திருநெல்வேலியில் படங்களை விட்டால் வேறு வழி கிடையாது.இன்று ரோஸ் கலர் சுடிதார் போட்டேன்,லைட் மஞ்சள் காட்டன் புடவை என்று ஒரு நான்கு நாட்கள் உடைகள் பற்றி எழுதி உள்ளேன். காலேஜ் விட்டதும் வீட்டிற்கு வராமல் என் ஃப்ரெண்ட்ஸ்களுடன் அரட்டை அடித்து உள்ளேன் வாரத்தில் இரண்டு நாட்கள். யார் யாருடன் அரட்டை,என்ன பேசினோம் என்று எழுதவில்லை.

பிப்ரவரி : ஒரு ஃப்ரெண்டு கல்யாணத்திற்கு போனதும் அங்கே பழைய ஃப்ரெண்ட்ஸை சந்தித்ததும் எழுதி உள்ளேன். பிப்ரவரி 13-ல் பக்தவச்சலம் இறந்து உள்ளார். காலேஜ் லீவ் என்பதால் அன்று சொல்வதெல்லாம் உண்மை என்ற படத்திற்கு ஃப்ரெண்ட்ஸுடன் போய் இருக்கிறேன். பிப்ரவரி 17-ல் என் பிறந்த நாள் அன்று க்ளாசில் எல்லோரும் மேஜர் சாரி ஒரே மாதிரி கட்டி உள்ளோம். (ரோஸ் கலர்). இதற்கு இடையில் அவ்வப்போது நடந்த இண்டெர்னல் பரீட்சை பற்றி, அதனில் எடுத்த மார்க் பற்றி உள்ளது.

மார்ச்: பல் வலி வந்து ரொம்ப கஷ்ட பட்டு இருக்கிறேன். சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு ஆனால், அதனை பற்றி டைரியில் எழுதி இருக்கிறேன்.வரலாறு மிக முக்கியம். 3 நாட்கள் காலேஜுற்கு மட்டம். டெல்லி கணேஷ் ட்ராமா ஜங்ஷன் சங்கீத சபாவில் பார்த்து இருக்கிறேன். மாத கடைசியில் ஒரு காலேஜ் டூர் போய் இருக்கிறேன். கொடைக்கானல், மதுரை, வைகைடேம் மூன்று நாட்கள். வந்து சின்னதம்பி பெரிய தம்பி,முத்துக்கள் மூன்று ரெட்டைவால் குருவி பார்த்து உள்ளேன்.

ஏப்ரல்: ஊரிலிருந்து என் அத்தை வந்து உள்ளார்கள் இரண்டு நாட்கள். அவர்கள் திரும்பி போன நாளில் ரொம்ப கவலையாக இருந்தது என்று எழுதி வைத்து உள்ளேன். ரொம்ப பாசக்கார பிள்ளை நான். அதற்கு அடுத்த பக்கங்களில் என் க்ளாஸ்மேட்ஸ்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கி இருக்கிறேன். மொத்தம் 30 பேர்கள் என்னை பற்றி எழுதி இருக்கிறார்கள் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள பக்கங்களில் அவர்கள் எழுதி கொடுத்தது இருக்கிறது. ஓ அதான் இந்த டைரி பத்திரமாய் இருக்கிறதா?? கொஞ்சப்பக்கங்களுக்கு பின்னால் ஒரு பக்கத்தில் மேத்தாவின் இந்த கவிதையை எழுதி இருக்கிறேன்.

கத்தி மாதிரிக்
கண்கள் என்றேன்
என்
இதயத்தின் மீதுதான்
தீட்டிப் பார்க்கப்போகிறாய்
என்பதை
தெரிந்து கொள்ளாமல்

அதன் பின் உள்ள பக்கங்களில் ஒன்றும் எழுதப்படாமல் இருக்கிறது.

ஒரு உண்மை டைரி இது.கலப்படம் இல்லாதது.

Tuesday, February 16, 2010

விஜய் ஒரு இடியட்!!



நடிகர் விஜய் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற அமீர்கானின் 3-இடியட்ஸின் தமிழ் படத்தில் ஒரு இடியட்டாக நடிக்க முடிவு செய்து உள்ளார். டைரக்‌ஷன் விஷ்ணுவர்த்தனாம்.மற்ற இரு இடியட்ஸ் யாராக இருக்கும். சூர்யா,ஜெய்,பிரசன்னா,மாதவன் இவர்களில் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும்.எப்படியோ செம ஸ்டைலான விஜய்யை பார்க்கலாம். விஜய் எடுத்தது மிக நல்ல முடிவு.

ஐரிஷ் அம்மாவா தமிழ் அம்மாவா!!!


விஜய் சேனலில் குழந்தை வளர்ப்பில் சிறந்தவர்கள் அந்தக்கால கன்சர்வேடிவ் அம்மாக்களா அல்லது இந்த கால மாடர்ன் அம்மாக்களா என்ற தலைப்பில் நீயா, நானா கோபிநாத் சிறப்பாக நடத்தினார்.

கன்சர்வேடிவ் அம்மாக்கள் சொல்வதை எதனையும் இந்த கால அம்மாக்கள் தங்கள் குழந்தை வளர்ப்பில் கேட்டு கொள்வதில்லை. எதை எடுத்தாலும் இண்டர்நெட்டில் தாங்கள் படிப்பதாகவும், டாக்டர் சொல்லும் விதத்தில் தான் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதாகவும் சொன்னார்கள்.

அந்த கால அம்மாக்கள் சொன்னதில் முக்கியமானது.இப்ப குழந்தைகள் எதனை கேட்டாலும் இந்த கால பெற்றோர் வாங்கி கொடுத்து கெடுக்கிறார்கள், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்த சொல்லி தருவதில்லை, சொந்தபந்தங்களை சொல்லி வளர்ப்பதில்லை,தாய் பால் கொடுப்பதில்லை,இப்படி இல்லை இல்லை அதிகம் இருந்தன.

மறுத்து பேசிய இளம் அம்மாக்கள் நேரில் சொந்தபந்தங்களை காண்பிக்க நேரம் இல்லை எனவே, ஃபோட்டோ ஆல்பத்தில் அடிக்கடி சொந்தபந்தங்களை காண்பிக்கிறோம். மரியாதை செலுத்தாத குழந்தைகளை கண்டிக்கிறோம். நாங்கள் அனுபவிக்காததை தான் எங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம் என்று சொன்னார்கள்.

இளம் அம்மாக்கள் தங்கள் கணவனை தனிமையில் எப்படி எல்லம் செல்லமாக அழைப்போம் என்பதனை வெட்கப்படாமல் சொன்னார்கள். அதனை கேட்டு கொண்டிருந்த அந்த கால அம்மாக்களின் முகத்தில் தான் வெட்கம் தெரிந்தது.

ஐரிஷ் அம்மாக்கள் தான் அதிகமாக தங்கள் குழந்தைகளை கவனிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், 12 முதல் 14 வயது வரை குழந்தைகளை கண்காணிப்பதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறதாம்.

இந்த அரங்கில் அந்த கால அம்மாக்கள் 19 வ்யது வரை குழந்தைகளை நன்கு கண்காணிக்க வேண்டும் என்று கூறினர். இந்த கால அம்மாக்களோ சுதந்திரமாக தங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புவதாக கூறினர்.

இது வருத்தம் தரும் செய்தியாக இருந்தது. இந்தியாவில் தான் குழந்தை வளர்ப்பு மிக சரியானது என்ற என் நினைப்பில் மண்ணை போட்டது. உலகிலேயே ஐரிஷ் பெற்றோர் தான் சரியான பெற்றோர் என்பது ஆய்வின் முடிவாம். இந்திய பெற்றவர்கள் ஒரு மாயையில் இருப்பது போல் தெரிகிறது. சுதந்திரம் என்பது நம் குழந்தைகளை அதிக பிரசங்கி ஆக்குவதிலும், ஆடை குறைப்பிலும் இல்லை என்று உணர வேண்டியது இன்றைய மாடர்ன் அம்மாக்களே.