Friday, October 30, 2009

ஒரு பெண்ணிற்கு 3 கணவர்கள்...

ட்ரூ லவ் அண்ட் ட்ரூ செக்ஸ்
நேஷனல் ஜியாகிரஃபிக் சேனலில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் டைட்டில் இது. இந்தியாவில் ஹிமாசல பிரதேசத்தில், நேபாளத்தில் சில கிராமங்களில் வாழும் மூஸ்டாங்க் என்னும் மக்களை பற்றிய டாகுமெண்டரி இது. இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகான ரம்மியமான ஒரு கிராமம். மக்கள் அனைவரும் ஒரு வகையான குல்லா அணிந்து உள்ளனர். பெண் ஒருத்தி அண்ணன், தம்பி என்று வரிசையாக 3 அல்லது 4 பேர் வரை மணந்து உள்ளார்களாம். நமக்கு அறிமுகப்படுத்த பட்ட பெண்ணிற்கு இரண்டு கணவர்கள். 5 குழந்தைகள். எந்த கணவரின் குழந்தைகள் எது என்று தனக்கு தெரியும் என்றும் ஆனால் குழந்தைகள் 2 பேரையும் அப்பா என்று அழைக்கும் என்று மிக வெட்கப்பட்டுக் கொண்டு சொன்னார். மேலும்,அந்த பெண்கள் வீட்டு வேலை பார்ப்பது தான் கஷ்டமாக உள்ளது என்று சொன்னார்கள். கூட்டு குடும்பமாய் இருப்பதால் எப்போதும் வேலை வேலை என்று சலித்து கொண்டார்கள். அந்த ட்ரைபல் கூட்டத்தில் முதுநிலை வரை படித்துவிட்ட ஒரு பெண் இந்த சமூகம் மாற வேண்டும் என்று கூறினார். அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.

இன்னொரு கிராமத்தில் ஒரு ஆணிற்கு 2 அல்லது 3 மனைவிகள் உள்ள்து.ஆனால், அந்த கணவர்கள் தங்கள் மனைவிகளை தனி தனியே வீடு பார்த்து வைத்து இருப்பதாக கூறினார்கள். மூத்த மனைவிகள் பேட்டி கொடுக்கும் போது அநியாயத்திற்கு வெட்கப்பட்டார்கள். இரண்டாவது மனைவி வந்ததிற்கு கோபம் வரவில்லையா என்று கேட்டதிற்கு எதற்க்கு கோபம் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்கள்.

Wednesday, October 21, 2009

ஆட்டோகிராஃப்-2

நான் +2 படிக்கும் போது ஏதோ காரணமாய் திண்டுக்கல் போன என் அப்பாவிற்கு அங்கு வைத்து ஹார்ட் அட்டாக் வந்து விட்டது. 3மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க டாக்டர் சொல்லிவிட்டார். என் தம்பிகள் சின்ன கிளாஸில் படித்ததால் உடனே அவர்களுக்கு ஸ்கூலில் இடம் கிடைத்து திண்டுக்கல்லில் சேர்ந்து விட்டார்கள். நான் +2என்பதால் ஸ்கூலில் 2மாதங்கள் இடம் கிடைக்காமல் ஸ்கூல் ஸ்கூலாக அழைந்து கொண்டு இருந்தேன். என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்பதை விட என் படிப்பு போச்சே என்று தான் நான் ஒரே அழுகை.படிப்பில் ஒன்றும் புலி இல்லை.ஜாலிக்காக ஸ்கூல் போற கேஸ் நான். 2மாதங்கள் கழித்து எனக்கு திண்டுக்கல் அவுட்டரில் ஒரு ஸ்கூலில் +2இடம் கிடைத்தது. நான் +1ல் படித்தது,மேத்ஸ்,பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,காமர்ஸ்(என்ன் அருமையான காம்பினேஷன் - திருநெல்வேலியில்) +2முதல் 2மாதங்களும் இந்த குரூப் தான். இப்ப திண்டுக்கல்லில் காமர்ஸ்க்கு பதில் பயாலஜி.

ஸ்கூல் எனக்கு பிடிக்கவேயில்லை. முதலில் ஸ்கூலில் இடம் கிடைக்கவில்லை என்று அழுத நான் இப்ப ஸ்கூல் போக அழுதேன். வேண்டும் என்றே பஸ்ஸை மிஸ் செய்தேன் நிறைய நாட்கள்.எனவே, அடிக்கடி மாமா யாராவது பைக்கில் விட்டு வருவார்கள். எனவே, தப்பிக்க முடியாது. 3மாதங்களுக்கு பின் அம்மா,அப்பா திருநெல்வேலிக்கு போய் விட்டார்கள்.

நான் படிச்ச லட்சணம்:

பயாலஜி: படம் வரைய வேண்டும் என்றால் பென்சிலை எப்படி பிடிக்கவேண்டும் என்றே தெரியாத ஒரு அப்பாவி நான். என் தாத்தா ஹோட்டல் வைத்து இருந்தார் அதில் வேலை பார்த்த +2வரை படித்த ஒரு கிராமத்து பையன் எனக்கு ரிகார்ட்ஸ் எல்லாம் மிக அழகாக வரைந்துக் கொடுத்தான். எனக்கு படம் வரைய வேண்டும் என்றால் அந்த பையன் சாயங்காலங்களில் வீட்டிற்கு வந்து விடுவான். அவனுக்கு படம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு. வேலையிலிருந்து எஸ்கேப் எனவே நிறைய நேரம் எடுத்து அழகாய் வரைவான்.தவளையின் குறுக்கு வெட்டு தோற்றம் தெரிந்து என்ன ஆகப் போகுது, மூளை எப்படி இருந்தால் என்ன குரோம்சோம், மகரந்தம் அது இது என்று ஒன்றும் புரியாமல் தேமே என்று இருப்பேன் கிளாசில். ஆனால் செடிகள், பூக்கள் பற்றி படிக்க பிடித்தது.

கெமிஸ்ட்ரி: நான் புதியதாய் சேர்ந்த ஸ்கூலில் கெமிஸ்ட்ரி டீச்சர் நான் சேரும் முன்பே அனைத்து ரிகார்ட்ஸ், லேப் எல்லாம் முடித்து விட்டு லீவில் போய்விட்டார்கள். எனவே, ஒரு பி.எஸ்ஸி முடித்த டெம்பரரி டீச்சர் தான் கிளாஸ் எடுத்தார்கள். பியூரட்,பிப்பெட் எது என்று தெரியாமலே +2பைனல் லேப் எக்ஸாம் போன ஒரு ஆள் நானாக தான் இருப்பேன். எனக்கு கொடுக்க போகும் சால்ட்டை பற்றி முன்னமே சொல்லி விட்டார்கள். இன்னொரு பெண் எடுக்கும் ரீடிங்கை எனக்கு வாங்கி கொடுத்து விட்டார்கள். வெற்றிகரமாய் ரிக்கார்ட்ஸுக்கு 49மார்க்கும் போட்டாச்சு.ஒரு ஈக்வேஷனும் புரியல்லை. சும்மா சோப் தயாரிப்பது எப்படி, சலவை சோடா உபயோகங்கள் என்ன என்ற மாதிரி சின்னப்புள்ளை தனமான கேள்விகளுக்கு ஆனால் வாழ்க்கைக்கு உபயோகமான பதில்களை படித்து வைத்து ஒப்பேத்தினேன்.

பிசிக்ஸ்: பிசிக்ஸாவது படிக்கலாம் என்றால் ஒரு சின்ன வயது மாஸ்டர் இருந்தார். அவருக்கு ஏனோ பெண்களுக்கு கிளாஸ் எடுப்பது ரொம்ப எரிச்சலாய் இருந்தது.இதுகளுக்கு சொல்லி கொடுத்து என்ன கிழிக்க போறாங்க என்ற எண்ணத்திலேயே எப்பவும் வெடு வெடு என்று இருப்பார்.என்ன எழுதினாலும் ஒழுங்காய் மார்க் போடமாட்டார். ஒரு பெரிய ஸ்கேல் பிஸிக்ஸ் லேபில் இருக்குமே அதை வைத்துக் கொண்டு பெண் பிள்ளைகளை தான் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அடிப்பார். ஒரு நாள் என் தலையில் அந்த ஸ்கேல் வைத்து லேசாக அடித்து விட நான் அப்பாவிடம் சொல்லிவிட அப்பா போன் செய்து ஹெட்மிஸ்டரிடம் திட்டிவிட்டார். அப்பா அப்பொழுது டீச்சர் அஸோஷியனில் மாநில செகரட்டரி. அதிலிருந்து நீ படி இல்லை என்னவோ செய் என்று அந்த மாஸ்டர் என்னை ஒரு குடம் தண்ணீர் என் தலையில் கவிழ்த்து விட்டு விட்டார்.ஆனால், அதன் பிறகு அவர் யாரையும் அடிக்கவில்லை. எனவே, ஸ்டூண்டஸ் மத்தியில் ஒரு கெளரவம் எனக்கு கிடைத்தது. அதானே அவசியம்.

மேத்ஸ்: மேத்ஸ் டீச்சரோ செம ஓல்டு. அப்படியே நோட்ஸ் வைத்துக் கொண்டு போர்டில் எழுதிவிட்டு போய் விடுவார். ஒரு மண்ணும் புரியாது. மேத்ஸ் டீச்சர் பெண் நான். நானாவது டியூஷன் போறாதாவது.வரது வரட்டும் என்று புரிந்ததை வைத்து மேத்ஸ் கிளாசை ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

லாங்க்வேஜ்: இங்கிலீஷ் டீச்சர் மட்டும் தான் பிடிக்கும். ரொம்ப அழகா இருப்பாங்க.ரொம்பனா ரொம்பவே. அப்பதான் படித்து முடித்து விட்டு ஸ்கூலில் சேர்ந்து இருந்தாங்க. சினிமா பற்றி எல்லாம் பேசுவாங்க. என் கஷ்டத்தினை உணர்ந்தாங்க. தமிழ் டீச்சரோ ரொம்ப அலட்டல் பேர்வழி . ஒரு முறை அடுத்த நாள் தமிழ் பரீட்சை இருக்க நான் முதல் நாள் ஈவினிங் ஷோ மண்வாசனை படம் பார்க்க தியேட்டர் போனால் எனக்கு பின்னாடி சீட்டில் தமிழ் டீச்சர் அவர்கள் கணவருடன். அதில் இருந்து என்னை அவர்க்ளுக்கு பிடிக்காமல் போயிடுச்சு. ரேவதியை எனக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு.

இப்படி ஒரு ஸ்கூல் எனக்கு தேவைதான். அப்பா சொன்னார். அடுத்த வருடம் சேர்ந்துக் கொள். இந்த வருடம் வீட்டிலேயே இரும்மா என்று அடங்கினால் தானே. நான் அந்த வருடமே +2முடிக்கவேண்டும் இல்லைனா என்னோட செட்டில் எல்லோரும் காலேஜ் போக நான் மட்டும் +2வா என்று ஒரே ரகளை செய்து இப்படி ஒரு அருதபழசு ஸ்கூலில் அப்பவே லஞ்சம் கொடுத்து சேர்ந்தேன்.

இதற்கு முன் எப்பவும் தாத்தா வீடு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் லீவில் தான் வருவேன். படிக்க ஒன்றும் இருக்காது. எப்பவும் ஒரே ஆட்டம். வீட்டில் எப்பவும் ஒரே கூட்டம் இருக்கும். மதிய வேளைகளில் ௨0-25பேருக்கு சமையல் செய்வார்கள் பாட்டி. கூட்டு குடும்பம். சொந்தக்காரர்கள் அடிக்கடி வந்து போவார்கள். இந்த சூழ்நிலையில் ஸ்கூலுக்கு போவேன் வருவேன் ஒன்றும் பிடிக்காமலே. ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு மிகவும் பிடித்தது. என் தாத்தா வீட்டிற்கு முன்னால் ஒரு பல்டாக்டர் கிளினிக் இருந்தது. அந்த டாக்டரின் தம்பி ரவி காலெஜில் படிச்சுட்டு இருந்தான்.தினம் மாலை வேலைகளில், சனி,ஞாயிறுகளில் அங்கு ஒரு சேரில் அமர்ந்து பேப்பர் வாசித்துக் கொண்டும் ஒரு சின்ன டீவியில் ஏதேனும் பார்த்துக் கொண்டும் என் வீட்டினை நோட்டம் விட்டுக் கொண்டும் இருப்பான். அவனை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டது இல்லை. ஆனால்,தினம் பார்ப்போம். எனக்கு ஓரு நாள் பார்க்காவிட்டால் கூட கவலையாக இருக்கும். சில சமயங்களில் என் ஸ்கூல் விடும் நேரங்களில் என் ஸ்கூல் வாசலில் நான் பஸ்ஸிற்கு நிற்க்கும் போது அவனும் அங்கு சைக்கிளில் நிற்பான். அப்புறம் நான் பஸ்ஸில் வந்து வீட்டிற்கு பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து வரும் போது பின்னாடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு வருவான். ஒரு வார்த்தை பேசியது இல்லை. என் கடைசி மாமாவுடன் நிறைய நாட்கள் திண்ணையில் இரவு நேரங்களில் அரைட்டை அடித்துக் கொண்டு இருப்பான். என் தாத்தா வீடு நிறைய கூட்டம் இருக்கும் . ஆனால் ஒருவருக்கும் நான் என்ன செய்கிறேன் என்று கவனிக்க நேரம் இல்லை. அதனால் என்னை தினமும் பார்த்துக் கொண்டே இருந்த ரவியை பார்த்தால் எனக்கு ரொம்ப பிடித்தது.

வெற்றிகரமாய் +2எக்ஸாம் எழுதி 60சதவீதம் மார்க் வாங்கி(இந்த மார்க்கே அதிகம்) திருநெல்வேலிக்கு போனேன். சந்தோஷமாய் காலேஜில் சேர்ந்தேன். அப்புறம் அப்படியே ரவியை மறந்தும் போச்சு. எப்பவாச்சும் திண்டுக்கல் போகும் போது பார்ப்பேன். ஆனால், +2படிக்கும் போது பார்க்க பிடித்த மாதிரி பிடிக்கவில்லை.

Monday, October 12, 2009

ஐடியா ப்ளீஸ்...

அடுத்த மாதம் கேரளா போகலாம் என்று இருக்கிறேன் 12லிருந்து 15 நாள்கள். இரண்டு ஃப்ரண்ட்ஸ் குடும்பம் வெளிநாட்டிலிருந்து வராங்க என்னை நம்பி.அழைத்துப் போகும் முழு பொறுப்பும் என்னுடையது. தமிழர்கள் தான்.வழக்கம் போல் என் மகன்களை என் அம்மாவிடம் விட்டுட்டு போவதாய் இருக்கிறேன். நான் போகவில்லை என்று சொன்னாலும் என்னவர் போய்ட்டு வா என்கிறார். (நிம்மதியாய் ஒரு 15 நாட்கள் இருப்பார் போல) முழு கேரளாவும் பார்க்கிற மாதிரி ப்ளான். நம்ம பதிவர்கள் கொஞ்சம் ஐடியா கொடுங்களேன்.

சென்னையிலிருந்து கோவை ட்ரையின் பின் கார்...
காரில் கோவையிலிருந்து ஊட்டி வழியாக வயநாடு போய் பின் அப்படியே உயிரே உயிரே என்று அரவிந்த் சாமி பாட மனிஷா ஓடி ஓடி இறுதியில் அரவிந்திடம் வரும் இடம்(மும்பாய் ஃபிலிம்) Bekal fort(near mangalore).
அங்கிருந்து கோழிக்கோடு,திருச்சூர்,குருவாயூர் வந்து காரை கோவை அனுப்பிவிட்டு..அங்கிருந்து நைட் ட்ரைனில் திருவனந்தபுரம் போய் அருகில் உள்ள இடங்களை காரில் சுற்றிவிட்டு ஆலப்புழா வந்து அங்கிருந்து போட் ஹவுஸில் கொச்சின் வந்து, கொச்சினை, அருகில் உள்ள இடங்களை சுற்றிவிட்டு பின் கொச்சினிலிருந்து ட்ரைனில் சென்னை வரலாம் என்று யோசனை உள்ளது. முழு கேரளாவும் கார் என்றால் கஷ்டமாக இருக்கும் என்று இப்படி ஒரு யோசனை உள்ளது.
இதில் முக்கியமான நீங்கள் பார்த்து ரசித்த இடங்களை பற்றி விவரங்கள் வேண்டும். வேறு ஏதேனும் ஐடியா இருப்பினும் சொல்லுங்கள். இன்னும் நான் ட்ரையின் டிக்கெட் புக் செய்யவில்லை.கோயில்கள்,முக்கியமான இடங்கள் ஹோட்டல் விவரம் தெரிந்தாலும் கூறவும்.சாப்பாடு எங்கு என்ன ஸ்பெஷல் என்பது போல் விவரம் வேண்டும். நல்ல ஐடியா கொடுக்கப்போகும் அனைவருக்கும் கேரளாவிலிருந்து ஒரு பரிசு உண்டு!

Friday, October 09, 2009

புக்கர் பரிசும் இந்தியாவும்...

1969 லிருந்து வழங்கப்பட்டு கொண்டு இருக்கும் இந்த புக்கர் பரிசானது இந்த முறை ஹில்லாரி மேண்டல் என்ற பெண்ணிற்கு “WOLF HALL" என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த பரிசானது காமன்வெல்த் நாடுகள்,அயர்லேண்ட்,ஜிம்பாவே முதலிய நாடுகளில் எழுதப்படுகின்ற முழு நீள ஒரிஜினல் ஆங்கில புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது.
1969-லிருந்து புக்கர் மேக்கனால் என்ற ஃப்வுண்டேஷனால் வழங்கப்படுகிறது.
பரிசுத்தொகை 50 ஆயிரம் பவுண்டுகளாகும். புக்கர் ஃப்வுண்டேஷன் அமைக்கும் ஒரு குழு சிறந்த புத்தகத்தினை செலக்ட் செய்கிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரத்தில் லண்டனில் உள்ள கில்ட் ஹால் என்னும் இடத்தில் இருந்து இந்த புக்கர் அறிவிப்பு வெளிவரும்.


1981-ல் சல்மான் ருஷ்டி மும்பாயில் பிறந்தவர். அவரின் ”மிட்நைட்’ஸ் சில்ட்ரன்” என்ற புத்தகத்திற்கு புக்கர் பரிசினை வாங்கினார்.(பத்ம லெஷ்மி என்ற கேர்ள் ஃப்ரண்டுடன் நிறைய photos வந்தன.)இவரின் ”சட்டானிக் வெர்ஸஸ்” என்ற புத்தகம் பெறும் சர்ச்சையினை முஸ்லீம்களிடையே ஏற்படுத்தின.இரானின் அப்போதைய அதிபர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.


1997-ல் அருந்ததிராய் என்ற இந்திய பெண் அவரின் ”தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்”(கேரளா பற்றியது) என்ற புத்தகத்திற்கு இந்த பரிசினை வாங்கினார்.அருந்ததி ராய் NDTV-பிரணாய் ராயினின் கஸினாம்.இவருக்கும் இது தான் முதல் நாவலாம்.எழுத எடுத்துக்கொண்ட வருடங்கள் நான்கு. இவர் பிறந்தது ஷில்லாங்கில்.


2006-ல் கிரண்தேசாய் ”த இன்ஹெரிட்டன்ஸ் ஆப் லாஸ்” என்ற புத்தகத்திற்கு புக்கர் வாங்கினார்.இவர் பிறந்தது டில்லியில்.தற்சமயம் வசிப்பது அமெரிக்காவில்.இவருடைய அம்மா அனிதா தேசாயும் ஒரு எழுத்தாளர்.388 பக்கங்கள் கொண்டது இவரது நாவல்.ஹிமாலாயா பகுதியில் நடப்பது போல் உள்ளதாம் இவரது கதை.

2008-ல் அரவிந்த் அடிகா ”தி வைட் டைகர்” என்ற புத்தகத்திற்கு புக்கர் வாங்கினார். அரவிந்த் அடிகா நம்ம சென்னையில் பிறந்தவர்.அப்புறம் ஆஸ்த்ரேலியா போய்விட்டார். இவருக்கு இந்த புத்தகம் முதல் முழு நீள நாவலாம்.

முதல் நாவலிலேயே புக்கர் வாங்கறாங்க. இதில் கிரண் தேசாய், அரவிந்த் அடிகா இருவருக்கும் மிக நல்ல பல்கலைகழங்களில் ஆங்கில இலக்கியம் படித்த அனுபவம் உள்ளது.பிறந்தது இந்தியாதான், வளர்ந்தது எல்லாம் அயல் நாட்டிலே. ஆனால், கதையின் தளம் இந்தியாதான் இவர்களின் நூல்களில். வாழ்க இந்தியா..பரவட்டும் இந்தியாவின் புகழ்.


இது வரை இங்கிலாந்து 25 முறையும், ஆஸ்த்ரேலியா 6 முறையும், அயர்லேண்ட், இந்தியா 4 முறையும் இந்த புக்கரை தட்டி சென்று உள்ளன.

Thursday, October 08, 2009

வெரைட்டி

நோபல் பரிசு : எழுத்தாளர் சுஜாதா இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவர் மட்டும் இருந்தால் திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் எதற்கு நோபல் பரிசு வாங்கினார் என்று மிக எளிமையாக விளக்கி இருப்பார். நாம் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை.கொஞ்சம் மெனக்கெட்டதில் எனக்கு புரிஞ்சது இன்னானா...

நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் ஆயிரக்கணக்கான ரிபோசோம்கள் இருக்கிறது.அவை புரோட்டினை உற்பத்தி செய்யும் ஃபாக்டரி ஆகும்.இந்த ரிபோசோமில் இருக்கும் ஆயிரக்கணக்கான அணுக்களின் ஸ்டரக்சரையும்,அதன் அமைப்பையும் ஆராய்ச்சி செய்ததில் திரு.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

நாம் நோய் தாக்கினால் எடுத்துக் கொள்ளும் ஆண்டிபயாடிக், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் இருக்கும் ரிபோசோமை கொல்லும். எனவே பாக்டீரியா அழிகிறது. பென்சிலின், அமாக்சலின் போன்றவை ஆண்டிபயாடிக் ஆகும்.
இன்னும் நிறைய ஆண்டிபயாடிக்கினை கண்டுபிடிக்க உதவுமாம் திரு.ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி. அப்பாடா.....


தீபாவளி: தி.நகர் கடைகளில் தீபாவளிக்கு கூட்டம் அள்ளுகிறது. போத்தீஸில் நல்ல கூட்டம்.
புடவை எடுக்க ஏன் ஆண்களும் வருகிறார்கள் என்று புரியவில்லை. அந்த கூட்டத்தில்
மனைவிகளுடன் சேர்ந்து நின்று கொண்டு ஏங்க இந்த கலர் எடுக்கவா, அதை எடுக்கவா என்று பெரிய டிஸ்கஸன் வேறு...மற்ற பெண்களுக்கும் கஷ்டம் கொடுத்துக் கொண்டு.
சில பெண்கள் கட்டாயம் ஆண்கள் தங்களுடன் கடைகளுக்கு வர வேண்டும் என்று இருக்கிறார்கள். எனக்கு மனைவிகளுடன் துணிக்கடைகளுக்கு துணைக்கு வரும் ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.

பெரிய காலேஜ்: போன வாரம் என் மகனுடன் அவன் பெரியப்பா வீட்டிற்கு (வளசரவாக்கம்) போய் இருந்தேன். கிளம்பும் போது அவனுடைய பெரியப்பா மகன் நாளைக்கு லீவு போடுடா,
இப்ப வீட்டிற்கு போக வேண்டாம் என்று சொன்னான். இவனோ போங்கண்ணா காலேஜுக்கு
போகணும் என்றான்.என்னடா ரொம்ப அலட்டிகிறே,,பெரிய இந்த காலேஜ் என்று கூறினான்.
உடனே என் பையன் ஆமாண்ணா எங்கள் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் உண்மையிலேயே பெரிய காலேஜ் தான் 365 ஏக்கர், ஏசியாவிலேயே இரண்டாவது பெரிய scrub forest என்று சொல்லவும் சரிடா தம்பி ஒத்துக்கிறேன் பெரிய காலேஜ் தான் என்று கூறிவிட்டான்.

Thursday, October 01, 2009

3-அயன்

ENGLISH TITLE:3-IRON
KOREAN FILM
KOREAN NAME BIN-JIP அப்படின்னா EMPTY HOUSES-ன்னு அர்த்தமாப்பா.
DIRECTOR: KI-DUK-KIM

பார்த்த சேனல்; UTV WORLD MOVIES


டா-சுக் + சன்-வா

சிறப்பு: ஹீரோ ஹீரோயின் பேசிக் கொள்வதில்லை படம் முழுவதும்.

டா-சுக் ஒரு ரெஸ்டாரெண்டில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறான்.அவனுடைய வேலை மோட்டார் சைக்கிளில் சென்று வீடு வீடாக மெனு கார்டை கதவில் சாவி துவாரத்தில் ஒட்டுவிடுவது.
ஆனால் அவனின் முழு நேர வேலை மறுநாள் சென்று ஒட்டப்பட்ட வீடுகளில் இன்னும் கிழிக்கபடாமல் இருக்கும் நோட்டீசை வைத்து அந்த வீட்டில் யாரும் இல்லை என்று புரிந்துக் கொண்டு உள்ளே நுழைந்து அவன் வீட்டினை போல் உபயோகிக்கித்து கொள்கிறான். வீட்டு ஓனர் திரும்பி வரும் வரை அங்கேயே வசித்து வருகிறான். வீட்டில் ரிப்பேராகி இருக்கும் கடிகாரம்,டேப் ரிக்கார்டர் முதலியவற்றை சரி செய்து வைக்கிறான்.துணிகளை துவைப்பது,செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றும் செய்கிறான் எதையும் திருடுவதில்லை.

ஒரு முறை ஒர் பெரிய பங்களாவினுள் நுழைகிறான் அங்கு வீட்டு சிறையில் இருக்கும் ஒரு பெண் இருப்பது தெரியாமல். சன் வா என்ற அந்த பெண் அவனுக்கு தெரியாமல் அவனை கவனிக்கிறாள். போனில் அவள் கணவனுடன் உரையாடுவதினை வைத்து அந்த பெண் கணவனுடன் சந்தோஷமாக இல்லை என்று உணருகிறான். ஒரு நாள் கணவனும் திரும்பி வருகிறான்.அந்த பெண்ணை பலவந்த படுத்துகிறான். மறுக்கும் பெண்ணை அடிக்கிறான். இதனை பார்த்த டா-சுக் 3-IRON எனப்படும் போலோ விளையாடும் பேட்டால் போலோ பந்துக்களை வைத்து அடித்து அவன் வலியில் துடித்து கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறான்.பூட்டிய வீட்டினுள் நுழைந்து இருவரும் வாழ்கிறார்கள். ஒரு டிஜிட்டல் கேமிராவால் ஒவ்வொரு வீட்டிலும் போட்டோ எடுத்துக் கொள்கிறார்க்ள்.
ஒரு வீட்டிற்குள் நுழையும் போது அங்கு ஒரு பெரியவர் இறந்து கிடக்கிறார். இருவரும் அவரை நல்ல முறையில் வீட்டிற்கு பக்கத்தில் அடக்கம் செய்கிறார்க்ள். ஒரு நாள் அந்த பெரியவரின் மகனும், மருமகளூம் வீட்டிற்குள் வந்து பெரியவை இல்லாததை அறிந்து டா-சுக்,சன் - வா இருவர் மீதும் போலிஸில் புகார் கொடுக்கிறார்க்ள். போலிஸ் விசாரைணையில் பெரியவர் புதைக்கப்பட்டஇடத்தில் தோண்டி பார்க்கையில் அவர்கள் முறைபடி நல் அடக்கம் செய்ய பட்டிருப்பது அவர் மகனுக்கு வியப்பினை தருகிறது. அட்டாப்ஸி ரிப்போர்டில் பெரியவர் நுரையீரல் புற்று நோயில் இறந்தது தெரிகிறது. வீட்டிலும் ஒரு பொருளும் களவாடபடவில்லை என தெரிந்து பெரியவரின் மகன் டா- சுக்கினை விடுவிக்க சொல்லிட்டு போய் விடுகிறார்.

இதற்கிடையில் சன் - வாவின் கணவன் இன்ஸ்பெக்டரிடம் மனைவி காணவில்லை என்று முன்பு கொடுத்து இருந்த விண்ணப்ப்த்தினை வைத்து டா-சுன், சன் - வாவினை கடத்திக் கொண்டு போனதாக சொல்லி நம் ஹீரோவினை சிறையினில் தள்ளுகிறார். இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணின் கணவனிடம் லஞசம் வாங்கி கொண்டு இதனை செய்கிறார்.

கணவனுடன் வீடு திரும்பிய சன் - வா கணவனை கண்டாலே பிடிக்காமல் டா- சுக்கினை நினைத்து கொண்டே வாழ்கிறாள் எப்ப்டியும் அவன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டு.

சிறையில் ஹீரோ அடிக்கடி மறைந்து கொண்டு உள்ளே நுழையும் போலீசை கடுப்படிக்கிறான். போலீஸ் அடித்தால் கூட கூலாக ஒரு சிரிப்பு. மெடிடேஷன் மாதிரி எப்பவும் மெதுவாக காலடி ஓசை இல்லாமல் நடக்க பயிற்சி எடுக்கிறான்.ரூமில் நுழையும் போலீசின் பின்னால் ”180 கோணத்தில்” நிற்கிறான். போலீசிற்கு தெரிவதில்லை அவன் பின்னால் நிற்பது அவர் திரும்பும் நேரத்தில் இவனும் அவனை தொடர்வதால் போலீசிற்கு எரிச்சல் வருகிறது.

சிறையிலிருந்து வெளியே வரும் டா-சுக் நேரே சன் - வா வீட்டிற்கு சென்று அவள்
கணவனின் கண்களுக்கு தெரியாமலே சன் - வாவுடன் இஷ்டம் போல் இருக்கிறான்.

இந்த படத்தின் ஹீரோ படம் முழுவதும் பேசுவதேயில்லை. ஒரு மர்ம புன்னகை மட்டுமே. ஹீரோயினும் அவனுடன் பேசுவதில்லை. ஆனால், அவர்கள் பேசுவதில்லை என்று நாம் உணர்வதே இல்லை. அப்படி ஒரு நடிப்பு இருவரும். UTV WORLD MOVIES சேனலில் இந்த மாதம் அடிக்கடி இந்த படம் ஒலிப்பரப்பாகும். முடிந்தால் பாருங்கள். மெல்லிய இசை,ஹீரோவின் அழகு, ஹீரோயினின் பாவமான முகம், ஹீரோவின் சிரிப்பு என எல்லாமே அழகு இந்த கொரிய படத்தில்.